
சரத்பொன்சேகாவுக்கும் சம்பந்தனுக்கும் இரகசிய ஒப்பந்தம் ஒன்று இருந்ததாக விக்கிலீக்ஸ் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்ட சரத் பொன்சேகா, ‘தமிழ் மக்களுக்கு அனைத்தையும் கொடுப்பதற்கு சரத்பொன்சேகா இணங்கிவிட்டார். அதற்கான உடன் படிக்கையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கைச்சாத்திட்டும் விட்டார்” என்பது ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரமாக இருந்தது. இதனை எதிர்க்கட்சிகள் மறுத்து வந்த போதிலும், ‘விக்கிலீக்ஸ்” தற்போது வெளியிட்டுள்ள இரகசியத் தகவல்கள் இது உண்மை என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றது.
2010 ஆம் ஆண்டு ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் உச்சக் கட்டத்தில் ‘பொன்சேகா சம்பந்தன் இரகசிய உடன்படிக்கை” என்ற பிரச்சாரமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியி ருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும்.
தேர்தல் கள நிலைமையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் இது அமைந்திருந்தது. இது அரசாங்கத்திற்கு சார்பான பிரச்சாரமாக அமைந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்குத் தலைமை தாங்கியவர் என்ற முறையில் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிப்பதா? என்ற கேள்விதான் தமிழர்கள் மத்தியில் முதலில் எழுந்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டது.
இருந்த போதிலும் இறுதிக்கட்டத்தில் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை எடுப்பதற்கு இந்த உடன்படிக்கையும் காரணமாக இருந்துள்ளது.
பொன்சேகா கையொப்பமிட்ட இந்த உடன்படிக்கையின் பிரதி ஒன்று சம்பந்தனால் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அப்போது வழங்கப்பட்டது.
சரத் பொன்சேகாவுடன் தான் பேச்சுக்களை நடத்தியிருப்பது தொடர்பாக சம்பந்தன் அப்போது பொதுக்கூட்டங்களில் தெரிவித்த போதிலும், சரத் பொன்சேகா கைச்சாத்திட்ட உடன்படிக்கை ஒன்று தன்னிடம் தரப்பட்டிருப்பதாக பகிரங்கமாகத் தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
சம்பந்தனுடன் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நடத்திய சந்திப்பு, 2010 ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவை ஆதரிப்பதென சம்பந்தன் அறிவித்த பின்னர் ஏற்பட்டிருந்த அரசியல் கள நிலைமைகள் தொடர்பாக அமெரிக்க தூதரகம் வோஷிங்டனிலுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிவைத்த இரகசிய கேபிள் தகவலை விக்கிலீக்ஸ் இப்போது அம்பலமாக்கியுள்ளது.
அதிகளவில் அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்வதற்கும் அதற்குத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்வதற்கும் சரத் பொன்சேகா இந்த உடன்படிக்கையின் மூலமாக இணக்கம் தெரிவித்திருந்தார்.
இந்த உடன்படிக்கையில் எதிரணிகளின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட சரத் பொன்சேகாவும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கைச்சாத்திட்டிருந்தார்கள்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பேகர் இன மக்களினால் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் நியாயமான அதிகாரப்பரவலாக்கலை வழங்குவதற்கு இந்த உடன்படிக்கையில் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும் பொன்சேகாவுக்கும் இடையில் சிங்கள வாக்குகள் பிளவுபட்டிருக்கும் நிலையில் தமிழர்களுடைய ஆதரவு மிகவும் பெறுமதியுடையதாக இருக்கும் என்ற தனது கருத்தையும் அமெரிக்க தூதுவர் முன்வைத்திருக்கின்றார்.
இவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டியிருந் தமையையிட்டு தான் கவலையடை வதாகவும் அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவித்த சம்பந்தன், இருந்தபோதிலும் இடம்பெயர்ந்த மக்களை விடுவித்ததைத் தவிர வேறு எதனையும் ராஜபக்ஷ செய்யவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.


No comments:
Post a Comment