சிரியாவில் தலையிட்டால் பிராந்தியமே பற்றி எரியும் என அந்நாட்டு ஜனாதிபதி பஷர் அல் அஸாத் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் ஜனாதிபதி பஷார் - அல் - அசாத்துக்கு எதிராக பொதுமக்கள் கடந்த மார்ச் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த கலவரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கை கூறுகிறது. இதற்கு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.பஷார் அல் - அசாத் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ- மூன், அசாத்துக்கு சமீபத்தில் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் போராட்டம் நடத்தும் மக்கள் மீது நடத்தப்படும் இராணுவ தாக்குதலை நிறுத்தி விட்டு அரசியல் சட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், லண்டனில் இருந்து வெளிவரும் ‘சண்டே டெலிகிராப்’ என்ற பத்திரிகைக்கு ஜனாதிபதி அசாத் பேட்டி அளித்துள்ளார். அதில் ‘இப்பகுதியில் சிரியா ஒரு மையமாக திகழ்கிறது. அதில், ஐரோப்பிய நாடுகள் விளையாட நினைத்தால் மிகப் பெரிய பூகம்பத்தை சந்திக்க நேரிடும். சிரியாவில் ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அதனால் இப்பிராந்தியம் முழுவதும் பற்றி எரியும்.சிரியாவை துண்டாட அவர்கள் (ஐரோப்பிய நாடுகள்) நினைக்கிறார்கள். சிரியாவை ஆப்கானிஸ்தான் போன்று மாற்ற நினைக்கிறார்களா? அல்லது ஆப்கானிஸ்தான் ஆக மாற்றவேண்டும் என கருதுகிறார்களா? அரபு நாடுகளில் ஏற்பட்ட மக்கள் புரட்சிக்கும், இங்கு ஏற்பட்டுள்ள புரட்சிக்கும் வித்தியாசம் உள்ளது. எனவே, மக்களின் போராட்டத்துக்கு நான் வளைந்து கொடுக்க மாட்டேன். எங்கள் நாட்டு விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டாம் என எச்சரித்தார்.
இதனிடையே கடந்த 26ம் திகதி அரபு லீக்குக்கும், அசாத்துக்கும் இடையில் நடந்த கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. ஜனாதிபதியும், எதிர்க்கட்சிகளும் பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வேண்டும் என, அரபு லீக் வலியுறுத்தியது. இந்நிலையில், அரபு குழு லீக்கின் சிரியா விவகாரம் குறித்த அமைச்சர்கள் சிரியாவுக்கு விடுத்த அவசரச் செய்தியில், ‘மக்களுக்கு எதிரான வன்முறைகளை சிரியா உடனடியாக கைவிட்டு அவர்களைக் காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment