வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு அபிவிருத்திக்கான முன்னோடிக் கண்காட்சி இன்று காலை 9.00 மணிக்கு வவுனியா நகரசபை மைதானத்தில் ஆரம்பமாகியது.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களின் கீழ்வரும் 34 உள்ளூராட்சி சபைகளும் பங்கு கொள்ளும் இக் கண்காட்சியானது இன்று முதல் தொடர்ந்து மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளது.
கண்காட்சியில் பங்கு கொள்ளும் உள்ளூராட்சி சபைகள் தனித்தனியே பிரமாண்டமான கூடங்கள் அமைத்து தமது எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை காட்சிப்படுத்தியுள்ளன. நாள் ஒன்றுக்கு எண்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான மக்கள் கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக அனைத்துப் பிரதேசங்களிலிருந்தும் வருகை தரவுள்ளனர். அவர்களுக்கான விசேட போக்குவரத்து, வீதி ஒழுங்கு, குடி தண்ணீர், சுகாதாரம் மற்றும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வீதி அபிவிருத்தி, நகர அபிவிருத்தி, பொது சுகாதார சேவைகள், ஆயுள்வேதம், திண்மக்கழிவுப் பொறிமுறை, வீதி பயன்பாட்டு சேவை, மூலிகைப்பொருள் உற்பத்தி எனப் பல வழிகளிலும் மேற்கொள்ளப்படும் சேவைகள் ஊடாக வருமானத்தை பெருக்குவதும் அதன் மூலமாக தேசிய அபிவிருத்திக்கு இட்டுச் செல்வதையும் இலக்காக கொண்டே இந்தக் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இக் கண்காட்சியில் புத்திஜீவிகள், கல்விமான்கள், நிபுணர்களின் விவாதங்கள், கருத்துக்களங்களும் இடம்பெற்றன.
இந் நிகழ்வை சிறிலங்கா கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நாடாவை வெட்டி கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண பிரதம செயலாளர் ஆ. சிவசுவாமி, உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் திருமதி. ரமேஷ் விஜயலட்சுமி, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எச்.எம். சார்ள்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
2009ல் முதல்முதலாக யாழ். மத்திய கல்லூரியில் உள்ளூராட்சி மாநாடும் கண்காட்சியும் நடைபெற்றன. இரண்டாவது முறையாக இவ்வருடம் வவுனியாவில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. உள்ளூர் அபிவிருத்தி ஊடாக தேசிய அபிவிருத்தி எனும் தொனிப்பொருளில் இந்தக் கண்காட்சி இடம்பெறுகின்றது.
No comments:
Post a Comment