
மனித உயிரை பலியெடுக்கும் உரிமை பிறருக்கு இல்லையென்கிற வாதத்தை பல ஆண்டுகளுக்கு முன்னரே பல உலக நாடுகள் ஏற்று, உயிர்ப் பலி எடுக்கும் கொடூரமான தூக்குத் தண்டனையை ஒழித்தார்கள். உலகின் மூத்த ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் இந்தியாவோ, வேதனையான தண்டனையான தூக்குத் தண்டனையை அமுலில் வைத்துள்ளது.
ஒருவரை பலியிடுவதன் மூலமாக அக்குறித்த நபரை திருத்த முடியாது. குற்றவாளியை தண்டித்து, புனர்வாழ்வளித்து சமூகத்தில் மீண்டும் நல்லதொரு பிரஜையாக வாழ வைப்பதற்காகவேதான் சட்டம் இயற்றப்படுவது.
ஆயுள் தண்டனை மூலமாக குறித்த குற்றவாளியை தான் செய்த குற்றத்தை உணர்வதற்கு கால அவகாசம் வழங்கப்படும். சிறையில் நல்லவராக திருந்தி நடந்தால் குறித்த நபரை 14 வருடங்களுக்கு பின்னர் வெளியில் செல்ல அனுமதிக்கப்படும்.
ராஜீவ் கொலையில் தண்டனை வழங்கப்பட்ட குறித்த மூன்று மரண தண்டனை குற்றவாளிகள் 21 வருடங்கள் எதுவித குற்றமும் செய்யாமல் நல்ல மனிதர்களாக வாழ்ந்துள்ளார்கள்.
குறித்த மூன்று பேருடைய நன்னடத்தையே போதும் அவர்களை விடுதலை செய்ய. இவர்கள் மூன்று பேரையும் தூக்கில் போட இந்திய நடுவன் அரசு இப்பொழுது முயற்சிகளை மேற்கொண்டுள்ளது வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பதையே காட்டி நிற்கின்றது.
பத்து வருடங்களுக்கு முன் கொடுக்கப்பட்ட கருணை மனுவை இப்போது நிராகரித்து தண்டனையை இந்திய ஜனாதிபதி உறுதி செய்துள்ளார். இது ஒரு சட்ட அநீதி;இ அரசியல் அநீதி என்று அடித்துக் கூறுகிறார்கள் சட்ட வல்லுனர்கள்.
இத்தனை வருடங்கள் கிடப்பில் போடப்பட்ட இவ்வழக்கை இன்று தூசு தட்டி தீர்ப்பளிக்க முனைந்திருப்பதன் மர்மம் ஒன்றும் புரியாத புதிர் அல்ல. போர்க்குற்ற விசாரணை, சிறிலங்கா அரசுக்கு எதிரான தமிழ் நாட்டின் கடும் போக்கு இவற்றை தற்காலிகமாக திசை திருப்புவதுதான் இதன் நோக்கம்.
இக்கொலை வழக்கில் இந்திய அரசின் பட்டியல் படி பிரதான குற்றவாளிகள் பற்றிய விபரங்கள் முறையாக முடிக்கப்படாமலேயே நேரடியாக சம்பந்தப்படாத இம்மூவருக்கும் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இந்திய அரசால் நீக்கம் செய்யப்பட்டுள்ள தடா சட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களும் சாட்சியங்களும் இவ்வழக்கிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளையோ, டெல்லி உச்ச நீதிமன்றத்தின் பழைய தீர்ப்புகள் எதையும் கணக்கில் எடுக்காமல் அடாவடித்தனமாக இத் தீர்ப்பு வழங்கப்பட்டிருகிறது. 21 வருடமாக எந்த இடைவெளியுமின்றி ஒரு ஆயுள் தண்டனை அனுபவித்தபின் தூக்கு தண்டனை என்பது உலகநாடுகள் பின்பற்றும் எந்த பொது நீதிக்குள்ளும் அடங்காது.
உலகின் பெரிய ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் இந்திய அரசின் ஜனநாயகம் இதுதானோ என கேட்கிறார்கள் மனிதவுரிமை அமைப்புக்கள்.
நீதி தேவதையின் தீர்ப்பு
தமிழீழத்தைச் சேர்ந்த முருகன், சாந்தன் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பேரறிவாளன் ஆகிய மூவரும் உண்மையிலேயே குற்றம் புரிந்தவர்களா என்பது பற்றி பலத்த சந்தேகங்கள் இந்தியாவிலேயே எழுப்பப்பட்டுள்ளன.
ராஜீவ் படுகொலை தொடர்பில் இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட வர்மா ஆணைக்குழு செயற்படவில்லை. அதேபோல் ஜெயின் ஆணைக்குழு இடைநிறுத்தப்பட்டது. இந்தியாவின் பிரபல ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் கிருஷ்ண அய்யர், குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனை நிரபராதியென அறிவித்துள்ளார்.
ராஜீவின் படுகொலை ஒரு திட்டமிட்ட அரசியல் நடவடிக்கையாகும். இது சிறிலங்காவின் இனப்பிரச்சினை ஆயுத போராட்ட வடிவம் பெற்றமையுடன் நேரடி தொடர்பு கொண்டதாகும். அப்படுகொலைக்கு முன்னர் இடம்பெற்ற அரசியல் செயற்பாடுகளுடன் அந்த படுகொலைக்கு தொடர்பு இருக்கின்றது.
இன்றுவரை சிறிலங்காவின் இனப்பிரச்சினையில் இந்திய அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டில் ராஜீவின் படுகொலை செல்வாக்கு செலுத்தி வருகின்றது. இந்த கொள்கை நிலைப்பாட்டின் பின்னணியிலேயே ஈழத்தில் இறுதிக்கட்ட யுத்தத்தை சிறிலங்காவின் ராஜபக்ச அரசு முன்னெடுத்தது. இது வரலாறு ஆகும்.
எனவே மரண தண்டனை கைதிகள் விவகாரமும், சிறிலங்கா இனப்பிரச்சினையுடன் தொடர்பு கொண்டதாகும். ராஜீவின் மண்டையை உடைத்து அவரை கொலை செய்வதற்கு கொழும்பில் வைத்து 1987-ஆம் ஆண்டு ஒரு முயற்சி நடைபெற்றது. அவரது பாதுகாப்பு அதிகாரியின் முயற்சியினால் ராஜீவ் அன்று பாதுகாக்கப்பட்டார்.
அந்த கொலை முயற்சியும் சிறிலங்கா இனப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டதாகும். எனவே சிறிலங்கா இனப்பிரச்சினையுடன் தொடர்புகொண்ட ஆயுதப்போராட்டம், யுத்தம் ஆகியவை தொடர்பில் படுகொலை செய்தவர்களையெல்லாம் தூக்கில் போடவேண்டும் என்றால், பெருந்தொகையானோரை தூக்கில் போடவேண்டும் என்று சிறிலங்காவின் மூத்த தமிழ் அரசியல்வாதி ஒருவர் கூறியுள்ளார்.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நபர்களின் கருணை மனுக்கள் ஜனாதிபதியினால் நிராகரிக்கபட்ட பின்னர் செப்டம்பர் 9-ஆம் தேதி தூக்கிலிடுமாறு இந்தியாவின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பள்ளி, கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியுடன் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.
தமிழ்நாடு காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த தோழர் செங்கொடி தீ மூட்டித் தன்னைத்தானே அழித்துக் கொண்டார். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள அட்டவணைபுதூரை சேர்ந்த பில்லாமணி (வயது 44) என்பவர் மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீ வைத்துக்கொண்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேருக்கும் மரண தண்டனை விதிக்கக்கூடாது என்று கோஷங்களை எழுப்பினார்.
உடலில் எரிந்த தீயை அக்கம்பக்கத்தில் நின்றவர்கள் அணைத்து விட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இப்படியாக பல உணர்சிகரமான நிகழ்ச்சிகள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன.
குறித்த மூன்று பேரையும் தூக்கிலிடும் தேதி அறிவித்தவுடன், இதை எதிர்த்து மூவரின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்தது.
மனுதாரர்கள் சார்பில் டெல்லியை சேர்ந்த பிரபல மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி, மும்பை மூத்த வக்கீல்கள் மோகீத் சவுத்ரி, காலின் சால்வேல்ஸ் ஆகியோர் ஆஜராகினர். துரைசாமி, சந்திரசேகர் உள்ளிட்ட பிரபல வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். மனு மீதான விசாரணையில், மூவரின் தூக்குத் தண்டனையை எட்டு வாரங்களுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி வாதிடுகையில், “கிட்டத்தட்ட 11 வருடங்கள், நான்கு மாதங்கள் தாமதம் செய்துள்ளனர், இந்த மூவரின் கருணை மனுக்களை பரிசீலனை செய்து நிராகரிக்க. இது மிகப் பெரும் வேதனை.
ஒரு மனிதனுக்கு கிட்டத்தட்ட 21 வருடங்களை சிறையில் கழித்து விட்ட நபருக்கு, கருணை மனு தாக்கல் செய்து 11 வருடங்கள் ஆகி விட்ட பின்னர், திடீரென கூப்பிட்டு உன்னை நாளை சிறையில் போடப் போகிறோம் என்று சொல்வது எந்தவகையில் நியாயம். இது மனிதாபிமானமே இல்லாத ஒன்று.
இவ்வளவு தாமதம் ஏன் என்று கேட்டு நிச்சயம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். இது சாதாரண விஷயம் இல்லை. அடிப்படையிலேயே தவறு செய்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் பங்கு இதில் மிகவும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.
21 வருடங்கள் சிறையில் அடைபட்டிருப்பதே ஒருவருக்கு பெரும் மன உளைச்சலைக் கொடுக்கும் விஷயமாகும். இந்த வழக்கில் மிகப் பெரிய உளைச்சலை சந்தித்த ஒருவரை தூக்கில் போடும் முடிவை அரை மணி நேரத்தில் எடுத்துள்ளனர். இதை சாதாரணமாகஎடுத்துக் கொள்ளக் கூடாது."
கருணை மனுவை நிராகரிக்க ஏன் இத்தனை தாமதம் என்று கேட்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், தமிழக அரசு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் மூலமாக நீதி தேவதை மீண்டும் கண்ணைத் திறந்துவிட்டாள் என்றே தோன்றுகிறது.
இருப்பினும், குறித்த மூன்று பேருக்கு வழங்கப்படவிருந்த தூக்குத் தண்டனை எட்டு வாரங்களுக்கே தள்ளி வைக்கபடுகிறது. ஆகவே, இப்பிரச்சினையை இனிவரும் காலங்களில் அரசியல் ரீதியாகவேதான் அணுக வேண்டும்.
தமிழக காங்கிரஸ் கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் குறித்த மூன்று பேருக்கும் வழங்கப்பட இருக்கும் தூக்குத் தண்டனைக்கெதிராகவே பேசி வருகிறார்கள். எதுவித அரசியல் சாயமுமில்லாமல் அனைவரும் ஓரணியில் திரண்டிருப்பது குறித்த மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்படமாட்டாது என்பதையே காட்டி நிற்கிறது.
தமிழகத்தின் ஒருமித்த குரல்
மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா கடந்த சில தினங்களுக்கு முன்னர் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆமோதித்து நிறைவேற்றினர்.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சட்டசபை கூடியதும் ஜெயலலிதா அவர்கள் குறித்த தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசுகையில், “மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளமையானது தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
மக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர். எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசுத் தலைவரை இந்த சபை கேட்டுக் கொள்கிறது," என்றார்.
இதையடுத்து அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் தீர்மானத்தை ஆதரித்து அதை நிறைவேற்றினர். இந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் இந்த தீர்மானத்தை ஏற்றால் மூன்று பேரின் தூக்குத் தண்டனையும் ரத்தாகும் வாய்ப்புள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு தீர்மானம் இதுவரை நிறைவேற்றப்பட்டது கிடையாது என்று கூறியுள்ளார் ம.தி.மு.காவின் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள்.
அவர் மேலும் கூறுகையில், “பிற மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் வழிகாட்டும் ஒளிச்சுடராக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோடான கோடி தமிழ் மக்கள், தமிழகத்தில் மட்டும் அல்லாது தரணி எங்கும் வாழுகின்ற தமிழ் மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் மரண தண்டனையை எதிர்ப்போரும், உச்சி மேல் வைத்து மெச்சும் பெருமையை முதல் அமைச்சர் பெற்றிருக்கிறார். தமிழ்கூறும் நல்லுலகம் அவருக்கு பாராட்டும், வாழ்த்தும், நன்றியும் தெரிவிக்கிறது," என்றார் வைகோ.
ராஜீவ் மட்டும் இன்னேரம் இருந்திருந்தால், தூக்குக் கயிற்றுக்கு முன்பு நிறுத்தப்பட்டுள்ள மூவரையும் மன்னித்து அவர்களின் உயிரையும் காப்பாற்றியிருப்பார் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி மிகவும் உருக்கமாக கூறினார்.
அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை, “மனித உரிமைக்கும், மனிதாபிமானத்துக்கும் எதிரான தூக்குத் தண்டனை தேவையில்லை. அதனை ரத்து செய்துவிடலாம் என சொல்லாத நாடுகளே இல்லை என கூறிவிடலாம். கொலைக் குற்றம் சாட்டப்பட்ட கைதி தமது வாழ்நாள் முழுவதும் அந்த குற்றத்தை எண்ணி வருந்துவதைவிட தூக்கு தண்டனையால் பெரிய பயன் விளைந்துவிடப் போவதில்லை.
நம் உள்ளத்தை உருக்கும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள, மூன்று தமிழ் வாலிபர்களின் உயிர் ஊசலாடுவதை தடுத்து நிறுத்தி உதவிடும் பணி நம் கண் முன் பேருரு எடுத்திருக்கிறது." அவர் மேலும் கூறுகையில்,
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரையும் மரணத்தில் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும். தூக்கு மேடையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள், அதன் பிறகு எத்தகைய தூய வாழ்க்கையைத் தொடருகிறார்கள் என்பதை அறிந்தவன் நான். தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்.
இந்த கடிதத்தை கருணை மனுவாக கருதி தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்," என்று அவர் கூறியுள்ளார். கலைஞர் போன்றே பல தமிழக அரசியல் தலைவர்கள் வேண்டுகோள்களை விடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழக அரசு மற்றும் அரசியல் வாதிகளின் அழுத்தத்தை இந்திய நடுவன் அரசு அசட்டை செய்யாது என்றே கருதப்படுகிறது.
மனிதாபிமான நோக்குடன் களமிறங்கியுள்ள பல சட்ட வல்லுனர்களின் போராட்டம் தோல்வியில் முடியாது என்றே நம்பப்படுகிறது. ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் சோகத்தை உண்டாக்கியிருக்கும் நிகழ்வே குறித்த மூன்று பேருக்கும் வழங்கப்பட இருக்கும் தூக்குத் தண்டனை ஆகையால் தனக்கு பல வழக்குகள் இருந்தும் அனைத்தையும் தள்ளிப்போட்டுவிட்டு சென்னை வந்தார் இந்தியாவின் புகழ்பூத்த சட்டத்தரணி ஜெத்மலானி.
மூன்று தமிழர்களின் உயிரைக் காக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. கோடிக் கணக்கான தமிழர்களின் சார்பாக நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். மறுப்பு ஏதும் சொல்லிவிடாதீர்கள்!” என்று எடுத்த எடுப்பிலேயே வைகோ ஜெத்மலானியிடம் கூற," எந்தத் தேதியாக இருந்தாலும், அனைத்து வழக்குகளையும் தள்ளிவைத்துவிட்டுத் தமிழர்களுக்காக வருகிறேன்!'' என்று ஜெத்மலானி சொல்லி இருக்கிறார்.
இவர்கள் மூவரையும் காப்பாற்றும் கடமை எனக்கு இருக்கிறது” என்றார் நெகிழ்வாக ஜெத்மலானி. 'மூன்று தமிழர்களின் உயிர்தான் எனக்கு முக்கியம். வாதாடுவதற்கான கட்டணத்தைப்பற்றிக் கவலைப்படவில்லை!” என்று சொன்னாராம் ஜெத்மலானி என்று ஜூனியர் விகடன் சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது.
மூன்று பேரின் தூக்குத் தண்டனையை எட்டு வாரங்களுக்கு நிறுத்திவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது நீதிக்கு கிடைத்த வெற்றியே. தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தியாவின் பிற மாநில அரசாங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற்று இந்திய நடுவன் அரசிற்கு அழுத்தத்தை கொடுத்து அரசியல் ரீதியாக வெற்றி பெற வேண்டும்.
இந்தியா என்கிற கூட்டாட்சிஇ மாநிலங்களின் அழுத்தங்களுக்கு கட்டுப்பட முடியாமல் இருக்க முடியாது. இந்தியாவின் உள்துறைக்கு தமிழக அரசு உட்பட பிற இந்திய மாநிலங்களும் ஒன்று சேர்ந்து அழுத்தங்;களைப் பிரயோகிப்பதனால் நிச்சயம் தூக்குக் தண்டனையை எதிர்பார்த்திருக்கும் மூன்று தமிழ் இளைஞர்களுக்கும் உயிர்ப் பிச்சை பெற்றுத்தர முடியும்.
இந்திய நடுவன் அரசின் ஆலோசனையின் பேரிலையே இந்தியாவின் ஜனாதிபதி தனது முடிவை எடுப்பார். இன்னும் எட்டு வாரத்தில் சாக இருக்கும் மூன்று பேருக்கும் ஜனாதிபதியினாலேயே காப்பாற்ற முடியும்.
ஜனாதிபதிக்கு அரசியல் அழுத்தத்தை கொடுக்கும் வல்லமை இந்திய நடுவன் அரசையே சாரும். இந்திய நடுவன் அரசிற்கு நெருக்குதலை கொடுக்கும் சக்தி இந்தியாவின் மாநில அரசாங்கங்களுக்கும், அரசியல் வாதிகள் மற்றும் போதுமக்களுக்குமே உண்டு.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் இந்தியா, ஜனாநாயக கோட்பாடுகளை அசட்டை செய்யக் கூடாது. தூக்குத் தண்டனை என்பது மாநிடத்திற்கே ஒவ்வாத செயல் என்பதை பல உலக நாடுகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.
இந்தியா இன்னும் இதனை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது வெட்கக்கேடானது. உலகத்திற்கே அகிம்சை போதித்த புத்தன், காந்தி பிறந்த தேசம் இன்று கொலை வெறியுடன் செயற்படுவது மனித நீதிக்கு எதிரானது. இதனை புரிந்து செயற்படுமா இந்திய நடுவன் அரசு என்பதை இன்னும் இரு மாதங்களில் தெரிந்து விடும்.
அனலை நிதிஸ் ச. குமாரன்
nithiskumaaran@yahoo.com