கடந்த வருடம் ஜனவரியிலிருந்து மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள சிரிய நாட்டில் அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சி நடைபெற்று வருகிறது.
மேற்கத்தைய நாடுகளின் தூண்டுதலின் பேரிலேயே இக்கிளர்ச்சிகள் இடம்பெற்று வருவதாக சிரியா அறிவித்துள்ள நிலையில், மேற்கத்தைய நாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்கள் அந்நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.
கிளர்ச்சிக் குழுக்களின் ஆதரவுடன் சில வீரமிகு பத்திரிகையாளர்கள் அந்நாட்டுக்குள் நுழைந்து அங்கு நடைபெறும் உண்மைச் சம்பவங்களை உலகப் பத்திரிகைகள் ஊடாக வெளிக்கொண்டு வந்தவர்களில் பிரித்தானியாவின் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் பிரபல போர் முனைச் செய்தியாளர் மேரி கொல்வின் மற்றும் பிரபல பிரெஞ்ச் புகைப்படக்காரர் ரெமி ஓச்லில் ஆகியோர் முக்கியமானவர்கள்.
இவ்விரு பத்திரிகையாளர்களும் அரச படையினரின் எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகி இறந்து விட்டார்கள் என்கிற செய்தி பேரதிர்ச்சியாக உள்ளது.
சண்டே டைம்ஸ் பத்திரிகையின் புகழ்பெற்ற வெளிநாட்டுச் செய்தியாளரான மேரி கொல்வின், 1956-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பிறந்தவர். பல ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்த மேரி கொல்வின், உலகின் மோதல் நடக்கும் நாடுகளுக்குச் சென்று செய்தி சேகரிப்பதில் துணிச்சல் மிக்கவர். 1985-ஆம் ஆண்டிலிருந்து இவர் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் பணியாற்றுகிறார்.
சிரியாவின் ஹோம்ஸ் என்கிற நகரில் மேரி கோல்வின், பிரெஞ்சுப் புகைப்படக்காரர் ரெமி ஒச்லிக் மற்றும் சில பத்திரிகையாளர்கள் தங்கியிருந்த கட்டடம் மீது பெப்ரவரி 22, 2012-இல் சிரிய அரச படைகள் எறிகணைத் தாக்குதல் நடத்தின. இத்தாக்குதலில் மேரி கொல்வின் மற்றும் ரெமி ஓக்லிக் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும், மூன்று பத்திரிகையாளர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
பல உலக நாடுகள் தமது கண்டனங்களைச் சிரிய நாட்டிற்கு எதிராக விடுத்து வருகிறார்கள். உலக நாடுகளின் கண்டனங்களை உதாசீனப்படுத்திவிட்டு தொடர்ந்தும் இராணுவத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது சிரிய அரசு. அதிபர் பஷர் அல் அசாத்தின் தந்தையார் 30 ஆண்டுகளாக இறக்கும் வரையில் ஆட்சியில் இருந்தார். சிரிய நாட்டின் அரசியல் சாசனத்தின்படி 40 வயதிற்கு மேற்பட்டவர்களே நாட்டின் அதிபராக வரமுடியும் என்கிற நியதி இருந்தது.
2010-இல் தந்தையார் இறக்கும் போது பஷர் அல் அசாத்திற்கு 34 வயதாக இருந்த காரணத்தினால், அந்நாட்டின் சட்ட யாப்பையே திருத்தி 34 வயதானவர்கள் அதிபராக வரமுடியும் என்று மாற்றினார்கள்.
இவ்மாற்றத்தின் பின்னர் பஷர் அல் அசாத் அதிபராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையும் மகனும் தொடர்ச்சியாக 42 வருடங்களாக ஆட்சி செய்து வருகிறார்கள்.
எப்படியேனும், அதிபர் பஷர் அல் அசாத்தை பதவியிறக்கி மக்களின் ஆதரவுடனான கட்சி ஒன்றை பதவிக்கு கொண்டுவருவதுடன், ஜனாநாயகத்தை மலரவைக்கலாம் என்கிற கருத்து மேற்கத்தைய நாடுகளிடம் பரவலாக இருக்கிறது.
பெரும்பாலான சிரிய மக்களும் மேற்கத்தைய நாடுகளுக்கு ஆதரவாக இருப்பதாக செய்திகள் கூறுகிறது. இதனை தாங்க முடியாத சிரிய அரசு மக்கள் செறிந்து வாழும் இடங்கள் மீது குண்டுகளை ஏவி பலத்த உயிரிழப்புக்களை மேற்கொண்டு வருகிறது.
மேரி கொல்வின் போன்ற வீரமிகு பத்திரிகையாளர்களையும் சிரிய அரச படையினர் விட்டுவைக்கவில்லை. பத்திரிகை உலகில் இவருடைய இறப்பு என்பது பாரிய இழப்பே. தமிழ் மக்களும் இவருடைய இறப்பை தமது குடும்ப இழப்பாகவே கருதுகிறார்கள்.
துணிச்சலானவர்களே பத்திரிகையாளர்கள்உண்மைச் சம்பவங்களை பிறர் அறியும் வண்ணம் செய்வதே பத்திரிகைத் தர்மம். இதன் மூலமாக அழிவுகளைத் தடுப்பதுடன், அழிவுகள் செய்பவர்களைத் தண்டிக்க உதவியாக இருப்பவர்களும் பத்திரிகைத் துறையென்றால் மிகையாகாது. பத்திரிகையில் வரும் செய்திகளை ஆவணப்படுத்தி அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சட்டத்தினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணமாக பத்திரிகைச் செய்திகள் இன்றுவரை இருந்து வருகிறது.
குற்றவாளிகளை அடையாளப்படுத்துவது மட்டுமின்றி, குற்றவாளிகளுக்கு இலகுவாக தண்டனையைப் பெற்றுத்தர உதவியாக இருப்பவர்களும் பத்திரிகையாளர்களே. வாய் மூலமாக கூறுவதை நீதிமன்றங்கள் சாட்சிகளாக ஏற்றுக்கொள்வதில்லை.
ஆவணப்படுத்தப்பட்ட செய்திகளை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. அவ்வகையில், பத்திரிகைத்துறை என்பது செய்திகளை வழங்கும் ஊடகங்களாக இருப்பது மட்டுமன்றி, குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனையைப் பெற்றுத்தரும் பலம் பொருந்திய சாட்சிகளாகவும் செயற்படுகிறது.
தமது உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தும் களம் காண்பவர்களே பத்திரிகையாளர்கள். சிறந்த வெளிநாட்டுப் பத்திரிகையாளருக்கான பிரிட்டிஷ் அரசின் விருதை வென்றவர் மேரி கொல்வின். இறப்பதற்கு முதல் நாளன்று (பெப்ரவரி 21, 2012) சனல்-4 தொலைக்காட்சியில் தோன்றி, சிரியாவில் நடக்கும் தாக்குதலின் கொடூரத்தை விவரித்தார்.
சிரியாவில் நிலைமைகள் மோசமாகி வருவதாகவும், அந்நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் அதிபர் கேட்டுகொண்டதற்கு, தனது பணிகள் இன்னும் பூர்த்தியாகாததால் இருக்கும் தினத்தன்றே நாட்டை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார் மேரி கொல்வின்.
தான் எடுத்துக்கொண்ட பணியை முழுமையாக பூர்த்தி செய்துவிட்டு திரும்புவதற்கு முன்னரே படுபாவிகள் கொன்றுவிட்டார்கள் என்று கதறியுள்ளார் அவருடைய தாயார். மக்களுக்கு நடக்கும் சம்பவங்களை நேரடியாக கேட்டறிந்தும், நேரில் பார்த்த சம்பவங்களை செய்தியாகவும் தொகுத்து வழங்கி வந்த உலகப் புகழ்பெற்ற பத்திரிகைப் பெண்மணியின் துணிவு என்பது நிச்சயம் பிற பத்திரிகையாளர்களுக்கும் உந்துசக்தியாக அமையும் என்றால் மிகையாகாது.
இதைப் போன்றே பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பல பத்திரிகையாளர்கள் எவ்வித அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது தமது சேவைகளை செய்து வந்துள்ளார்கள்.
உலகின் மோதல் நடக்கும் நாடுகளுக்கு துணிச்சலுடன் பிரவேசிக்கும் தன்மைகொண்ட மேரி கொல்வின் நடக்கும் உண்மைச் சம்பவங்களை உலகமயமாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோசோவோ, செசென்யா, கிழக்கு ரிமோர்இ, லிபியா உட்பட பல நாடுகளில் பணியாற்றிய அனுபவம் உடையவரே மேரி கொல்வின். அரசியல் இஸ்திரத்தன்மையற்ற பல அரபு நாடுகளிலும் தனது பணியினை மேற்கொண்டு அங்கு நடக்கும் சம்பவங்களைத் துணிச்சலுடன் பேசியும் எழுதியும் வந்தவரே மேரி கொல்வின் அம்மையார்.
கடந்த 2001-ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் செய்தி சேகரிக்க, எல்லையைத் தாண்டியபோது சிங்களப் படைகள் வீசிய குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த கொல்வின், தனது ஒரு கண்ணையும் இழந்தார்
. ஒரு கண்ணை இழந்தாலும், மனதின் உறுதியை இம்மியும் இழக்காத மேரி கொல்வின், தனது போர் முனை செய்தியாளர் பணியைத் தொடர்ந்தார். தனது ஒரு கண்ணை கறுப்புத் துணியினால் மூடியே இதுவரை காலமும் வந்துள்ளார். இதற்கான காரணத்தைக் கேட்டபோது போரின் வலியைப் பிரதிபலிக்கும் முகமாகவேதான் இப்படியாக கறுப்பினால் கண்ணை மூடித் துக்கத்தை வெளிப்படுத்துவதாக கூறியிருந்தார்.
தமிழர்களுக்கு பேரிழப்புஇறுதிக் கட்ட ஈழப் போரின் போது சிங்களப் படையினர் செய்த குற்றங்களை நீதிமன்றங்களில் வாக்குமூலம் அளிக்கும் நிலையில் மேரி கொல்வின் இருந்துள்ளார்.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் போது, வெள்ளைக் கொடியுடன் சரணடையச் சென்ற விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர்கள் பி. நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோருடன் கடைசியாகப் பேசியவர் மேரி கொல்வின்.
கடைசியாக விடுதலைப்புலிகள் நிலைகொண்டிருந்த மிகச்சிறிய காட்டுக்குள் இருந்து கொண்டு மே 17திகதி 2009 இல் செய்மதித் தொலைபேசியில் பி. நடேசன் அவர்கள், “நாங்கள் எமது ஆயதங்களைக் கீழே போடுகிறோம்” என்று தனக்கு கூறியதாக மேரி கொல்வின் “சண்டே டைம்ஸ்” மற்றும் “த கார்டியன்” பத்திரிகைகளுக்கு முன்னர் பேட்டி கொடுத்திருந்தார்.
அப்போது அவர் மேலும் கூறுகையில், “விடுதலைப்புலிகளின் தலைவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, இயந்திரத் துப்பாக்கிச் சத்தங்களைப் பின்புறத்தில் என்னால் கேட்க முடிந்தது. ‘ஓபாமா நிர்வாகம் மற்றும் பிரித்தானிய அரசிடமிருந்து எங்களின் பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தை எதிர்பார்க்கிறோம்.
எங்கள் பாதுகாப்பிற்கான உத்தரவாதம் ஏதேனும் உள்ளதா?’ விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா சிங்களவர்களுக்கும் இடையான 26 வருட போரில், வெற்றியோடுள்ள சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைவது மிக அபாயமானதென்று பி. நடேசனுக்கு நன்றாகவே தெரிந்துள்ளது.”
மேரி கொல்வின் மேலும் கூறுகையில், “8 வருடங்களுக்கு முன்பே நடேசன் மற்றும் புலித்தேவனை எனக்குத் தெரிந்திருந்தது. அப்போது தீவின் 3 இல் 1 பங்கு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது.
இப்போது, இவ்விரண்டு பேரும் தங்களோடு இருந்த ஏனைய 300 போராளிகளையும் அவர்களது குடும்பங்களையும் (பலர் காயமடைந்திருந்தார்கள்) காப்பாற்றுவதற்காக முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் கையால் தோண்டிய குழிகளுக்குள் அவர்களோடு பதுங்கியிருந்தனர். கடந்த பல நாட்களாகவே விடுதலைப்புலிகளின் தலைமைக்கும், மற்றும் ஐ.நாவுக்கும் இடைப்பட்ட மத்தியஸ்தராக நான் இருந்து கொண்டிருந்தேன்.”
“நடேசன் என்னிடம் 3 விடயங்களை ஐ.நாவுக்குப் பறிமாறுமாறு கேட்டுக் கொண்டார்:
(1) நாங்கள் ஆயுதங்களைக் கீழே போடுகிறோம்
(2) எங்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா தர வேண்டும்
(3) ஒரு அரசியல் தீர்வு தமிழர்களுக்கு வைக்கப்படும் என்ற நிச்சயம் வேண்டும்."
மேரி கொல்வின் தொடர்ந்து கூறுகையில், “உயர் பிரித்தானிய மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கூடாக நான் கொழும்பில் இருந்த ஐ.நா.விசேட தூதுவர் விஜய் நம்பியாரோடு தொடர்பு கொண்டேன். புலிகளின் சரணடைதலுக்கான கோரிக்கைகளை நான் அவருக்கு தெரியப்படுத்தினேன். அவரும், தான் அதைச் சிறிலங்கா அரசிற்குத் தெரிவிப்பதாகக் கூறினார். இந்த நடவடிக்கை ஒரு சமாதானம் வருவதற்கான அறிகுறியாக எனக்குத் தோன்றியிருந்தது.”
எப்போதுமே கலகலப்பாக இருக்கும் புலித்தேவன் சிரித்த முகத்துடன் ஒரு படத்தை தொலைபேசியில் எடுத்து எனக்கு அனுப்பியிருந்தார். கடைசி ஞாயிறு இரவின் போது, சிறிலங்கா இராணுவம் மிக நெருங்கிய போது, புலிகளிடமிருந்து ஒரு அரசியல் கோரிக்கைகளும் புகைப்படங்களும் இருக்கவில்லை. நடேசன் சரணடைதல் என்ற சொல்லைப் பாவிக்க மறுத்தார். ஆனால் அவர் என்னை அழைத்தபோது அதைத்தான் செய்ய முன்வந்திருந்தார். விடுதலைப்புலிகளின் பாதுகாப்பிற்கு நம்பியாரின் வருகை வேண்டுமென்றும் கேட்டார்."
“திரும்பவும், நியுயோர்க் 24 மணி நேரமும் இயங்கும் அவசரப்பிரிவு ஊடாக நம்பியாரைத் தொடர்பு கொண்டேன், அப்போது அங்கே காலை 5:30 ஆக இருந்தது. புலிகள் ஆயதங்களைக் கீழே போட்டுவிட்டார்கள் என்று அவரிடம் கூறினேன். தான் நடேசன் மற்றும் புலித்தேவனின் சரணடைதலின் பாதுகாப்பை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் நிச்சயமாக்கிக் கொண்டதாகவும் அவர் கூறினார். அவர்கள் வெள்ளைக் கொடியைப் பிடித்து வந்தால் சரியென்றும் கூறினார்.”
“சரணடைதலின் சாட்சிக்கு நம்பியாரும் வடக்குக்குப் போகத் தேவையில்லையா என்று நான் அவரிடன் கேட்டேன். அதற்கு அவசியமில்லையென்றும், வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடிக்கும்படியும் நம்பியார் கூறினார்.
லண்டனில் அப்போது நேரம் ஞாயிறு பின்னிரவு. நடேசனின் தொலைபேசிக்கு அழைக்க முயற்சியெடுத்துத் தோல்வியடைந்தேன். தென் ஆபிரிக்காவில் உள்ள ஒரு தொடர்பிற்கு அழைத்து நம்பியாரின் செய்தியைத் தெரிவித்தேன்.
தென் ஆசியத் தொடர்புடன் இருந்து திங்கள் காலை 5 மணிக்கு எனக்கு அழைப்பு வந்தது. அவருக்கு நடேசனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அன்று மாலை, சிறிலங்கா இராணுவம் அவர்களது உடல்களைக் காட்டியிருந்தார்கள்" இவ்வாறு பல இரகசியத் தகவல்களை தெரிவித்திருந்தார் மேரி கொல்வின் அவர்கள்.
தமிழ் மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளை மட்டுமன்றி, விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களின் கொலைகளுக்கும் சாட்சியாகவே மேரி அவர்கள் இருந்துள்ளார். தமிழ் மக்களுக்கு நேர்ந்த இன்னல்களை நேரடியாக தனது ஊடக நண்பர்கள் மூலமாக சிங்கள அரச படைகளின் அட்டூழியங்களை உலக நாடுகள் அறியும் வண்ணம் பல வேலைத் திட்டங்களையும் செய்தவரே இவ் அம்மையார்.
மேரியுனுடைய இறப்பு உலக பத்திரிகையாளர்கள், அவரது குடும்பத்தினர் அல்லது நீதி கேட்டுப் போராடும் மக்களுக்கு மட்டும் இழப்பில்லை. இவ் அம்மையாரின் இறப்பு என்பது தமிழர்கள் வேண்டி நிற்கும் நீதிக்கான பயணத்திற்கு வீழ்ந்த பேரிழப்பே. தான் தனியாகவே செய்த பணிகளை இவர் போன்ற வீரமிகு பல நூறு பத்திரிகையாளர்களினாலேயே செய்ய முடியும்.
இவருடைய வழியிலான பணியினை செய்வதுதான் அவருக்கு நாம் அளிக்கும் இறுதி மரியாதையாக இருக்கும். இவரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கும் பல கோடி மக்களில் நாமும்.
nithiskumaaran@gmail.com