''சாதி ஒழிந்து விட்டதுன்னு யாரும் சொன்னா நம்பாதீங்க... எப்படி சாதி ஒழியும். நம்மளை நசுக்கனும்னு எல்லாரும் துடிக்கிறதுக்கு என்ன காரணம்? சாதிதானே... சாதி வேற்றுமைகள் எல்லாம் எந்தக் காலத்திலும் மாறாது. நம்ம சாதியை நாம மதிக்கணும். சமீபகாலமா நம்ம சாதிக்காரப் பொண்ணுங்களை வேத்து சாதிக்கார பயலுக வற்புறுத்தியும், பலாத்காரபடுத்தியும், மிரட்டியும் கல்யாணம் செய்யிராணுக... இதெல்லாம் எதுக்காக? நம்ம சாதியை அசிங்கப்படுத்தனும்கிறதுக்காக... நாம உண்மையாகவே நம்ம சாதியை மதிக்கிற மனுசங்களா இருந்தா... முதல்ல கலப்பு திருமணத்தை நிறுத்தனும். நம்ம சாதிக்கார பொண்ணை எவன் ஏறெடுத்துப் பார்த்தாலும் அவனுகளை சும்மா விடக்கூடாது! இதையும் மீறி யாராச்சும் கலப்பு கல்யாணம் பண்ணினா அவனுகளை தொலைச்சுக்கட்டவும் நான் தயங்க மாட்டேன்!"
- இப்படி பேசியவர் வேறு யாருமல்ல... வன்னியர் சங்கத் தலைவரும் தற்'போதை'ய சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குரு. இதைக் கைதட்டி கேட்டு ரசித்துக் கொண்டிருந்தவர்கள் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், சௌம்யா அன்புமணி, ஜி.கே.மணி உள்ளிட்டவர்கள்! மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவில் தான் அற்புதமான இந்த சொற்பொழிவை ஆற்றி இருக்கிறார் காடுவெட்டி குரு. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான போக்கும், அவர்களின் வாழ்வாதாரங்களையும், வளங்களையும் அழிக்கும் குணக்கேடுகளும் இன்றளவும் தொடரும் இந்த காலகட்டத்தில் சாதியத்தை வலியுறுத்தி ஒரு சட்டமன்ற உறுப்பினர் எடுத்து வைத்திருக்கும் வாதத்தைப் பார்த்தீர்களா?
அரக்கத்தனத்தின் அவதாரமாக கொஞ்சமும் சமூக கவலையோ அக்கறையோ இல்லாமல், இப்படி வெறித்தாண்டவமாடிய ஒருவரை லட்சக்கணக்கான மக்கள் எப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்? சாதிய போதையில் மக்களை ஆட்டுவித்து, அதை வைத்தே வாக்கை அள்ள நினைக்கும் இந்த ஐந்தறிவு அரசியல்வாதிகளை என்னதான் செய்வது?
தீண்டாமை ஒரு பாவம் என்றும் பெரும் குற்றம் என்றும் பால்யத்தில் இருந்தே சொல்லிக் கொடுத்து இளைய தலைமுறையை சமூக சமத்துவத்தின் பிரதிநிதிகளாக உருவாக்க அரசும் அறிவார்ந்த பெருமக்களும் முயற்சிக்கும் வேளையில், நச்சு விஷமாக , நாகப்பாம்பாக காடுவெட்டி குரு இப்படி சாத்தியம் பேசி இருப்பதை ஏன் பொதுநல அமைப்புகள் எதுவுமே கண்டிக்கவில்லை? தொட்டதற்கும் பொதுநல வழக்குப்போட்டு புகழ் தேடும் சட்டப்புள்ளிகள் இந்த பகிரங்க சாதிய கொடூரத்தைத் தட்டிக் கேட்காது ஏன்?
சாதிய மூர்க்கத்தோடு பரமக்குடியில் ஆறு உயிர்களை சுட்டு வீழ்த்திய இந்த அரக்க அரசுக்கு சாதியத்தின் வலி புரியப்போவது இல்லை. சாதிய வல்லூறுகளின் வாய்க்கு கடைசி கையாலாகாதவன் இரையாகும் வரை... இந்த வெறித்தனப் பேச்சுகளும், திமிர்த்தன போக்குகளும் தொடரத்தான் செய்யும்!
- நல்லாளன்