தமிழக அரசு சிறப்பு உத்தரவு!
போலீஸ் அதிகாரிகளைப் பந்தாடும் நிகழ்வுகளில் தமிழகத்துக்கு முதலிடம் வழங்கலாம். அதேநேரம் அவ்வப்போது போலீஸ் அதிகாரிகளைக் கௌரவிக்கும் நிகழ்வுகளும் இந்த ஆட்சியில் நடக்கத்தான் செய்கின்றன. முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட நேரத்தில் உடனிருந்த பாவத்துக்காக கடந்த ஐந்து வருடங்களாக மண்டபம் முகாமில் அல்லாடித் தவித்தார் கிறிஸ்டோபர் நெல்சன். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த நிலையில் கிறிஸ்டோபர் நெல்சனின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. இதனால் ரொம்பவே நொந்து போனார் நெல்சன். ஆனாலும், உளவுத்துறை டி.ஜி.பி. ராமானுஜம் எடுத்துச் சொன்னதன் பேரில் கிறிஸ்டோபர் நெல்சன் தமிழக அரசின் மாநிலத் திட்டக்குழுவின் முழு நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆட்சியில் பழிவாங்கப்பட்ட ஓர் அதிகாரிக்கு இந்த அரசு செய்த கைமாறாகவே இது பேசப்பட்டது.
அதேபோல் பொருளாதாரக் குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி சமீபத்தில் ஒய்வு பெற்ற ஐ.ராஜா தற்போது தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) உறுப்பினராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஆட்சியில் பல இடங்களுக்கும் தூக்கி அடிக்கப்பட்டே பழிவாங்கப்பட்ட ராஜா, இத்தகைய கௌரவமான பதவியில் அமர்த்தப்பட்டிருப்பது போலீஸ் வட்டாரத்தை சிலிர்க்க வைத்திருக்கிறது.
1983 -ம் ஆண்டு ஐ.பி.எஸ், பணியில் சேர்ந்த ராஜா மீடியாக்கள் மத்தியில் தன்னை பிரசித்தியாகக் காட்டிக்கொள்ளும் வழக்கம் இல்லாதவர். எம்.ஏ., எம்.பி.ஏ. முடித்த ராஜா இத்தாலி, ஜெர்மன், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளை சரளமாகப் பேசத் தெரிந்தவர்.
டி.என்.பி.எஸ்.சி.தலைவராக கண்ணியத்துக்கும் நேர்மைக்கும் பெயர்பெற்ற டி.ஜி.பி.நடராஜ் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் உறுப்பினராக ராஜா நியமிக்கப்பட்டிருப்பது போலீஸ் துறைக்குக் கிடைத்த பெருமிதமாகப் பேசப்படுகிறது.
வாழ்த்துக்கள் ராஜா சார்!
- கும்பல்
No comments:
Post a Comment