அவசரகாலச்சட்டத்தை இனிமேல் நீடிக்கப் போவதில்லை,அது இனிமேல் தேவையில்லை என்றெல்லாம் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
பயங்கரவாதத்தை தோற்கடிக்க அவசரகாலச்சட்டம் தேவைப்பட்டது. இப்போது எல்லாமே முடிந்து போய்விட்ட நிலையில் அவசரகாலச்சட்டம் தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
சிறிலங்கா அரசாங்கமே வலிந்து போய் அதை அகற்ற முன்வந்திருப்பது போன்றிருந்தது அவரது கதை.
இனிமேல் அவசரகாலச்சட்டமோ, அதன் விதிகளோ தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் அறிவித்த சிறிலங்கா ஜனாதிபதியே, அவசரகாலச்சட்டப் பின் விளைவுகள் ஏற்பாட்டுச் சட்டமூலத்தை தயாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் புதிய விதிகளை சேர்க்கவும் அவர் கையெழுத்திட்டு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இப்போது அவசரகாலச்சட்டத்தின் சத்துகள், சாறுகள் அனைத்தையும் உறுஞ்சிக் கொண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் அதிகபலத்துடன் நிற்கிறது.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம், இப்போது அதிக அதிகாரங்களை முப்படையினருக்கும், பொலிசாருக்கும் வழங்குகின்ற அளவுக்கு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இன்னும் இதை சட்டரீதியாக வலுப்படுத்தும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டால், உயர் பாதுகாப்பு வலயங்களை வைத்திருக்க முடியாது, அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க முடியாது- விடுவிக்க வேண்டியிருக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையைத் தொடரவும், அவசரகாலச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களை தொடர்ந்து தடுத்து வைக்கவும், உயர் பாதுகாப்பு வலயங்களை தொடர்ந்து பேணவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இப்போது கொழுக்கட்டை, மோதகமாக மாறியிருப்பது தான் வித்தியாசம்.
வடிவங்கள் தான் வேறுபடுகிறதேயன்றி இரண்டும் ஒன்றாகத் தான் இருக்கிறது.
உயர் பாதுகாப்பு வலயங்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக வழிதேடியுள்ளது.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் தான் இந்த உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனம் செய்யப்பட்டன.
போரைக் காரணம் காட்டியே உயர் பாதுகாப்பு வலயங்களை அரசாங்கம் உருவாக்கியது,
இப்போது போரும் இல்லை, அவசரகாலச்சட்டமும் இல்லை. ஆனால் சிறிலங்கா அரசாங்கத்துக்கு உயர் பாதுகாப்பு வலயங்கள் தேவைப்படுகின்றன.
இந்த உயர் பாதுகாப்பு வலயங்களை நாட்டின் எங்காவது ஒரு மூலையில் பிரகடனம் செய்திருந்தால் பரவாயில்லை.
ஆனால் பொதுமக்களின் நிலங்களைப் பறித்தே இவை உருவாக்கப்பட்டுள்ளன.
மக்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்கும் வகையிலேயே இந்த உயர் பாதுகாப்பு வலயங்கள் செயற்படுகின்றன.
இந்த நிலையில் அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டதன் பலனை உயர் பாதுகாப்பு வலயங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவசரகாலச்சட்டம் போனாலும் பயங்கரவாதத் தடைச்சட்டம் அவர்களின் சொந்த மண் மீதான உரிமையை மறுக்கிறது.
இந்த உயர் பாதுகாப்பு வலயங்களால் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் தான்.
அதனால் தான் இந்த விடயத்தை சிறிலங்கா அரசாங்கம் கண்டு கொள்ளாமலேயே இருக்கிறது.
தெற்கிலும் சில உயர் பாதுகாப்பு வலயங்கள் இருந்தாலும், அவற்றினால் சிங்கள மக்களின் அன்றாட இயல்பு வாழ்வுகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
ஆனால் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழர்கள் தான் இந்த உயர் பாதுகாப்பு வலயங்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவசரகால சட்டம் நீக்கப்பட்டாலும் இவர்களின் அவலங்கள் தீரப்போவதில்லை.
அதற்கு அப்பாலும் பயங்கரவாத தடைச்சட்டம் இவர்களைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், முன்னாள் பேராளிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு சிலரிடம் இருந்தாலும் அதுபற்றி குழப்பங்கள் தான் மிஞ்சியுள்ளன.
அவசரகாலச் சட்டம் நீக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டதுமே, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார 6000 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்று கூறினார்.
ஆனால் சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஸ, சட்டமா அதிபர் மொகான் பீரிஸ், அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த போன்றோர் அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரைக் கூட வெளியேவிட முடியாது என்கின்றனர்.
அவசரகால சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 1200 பேர் விடுதலை செய்யப்படவுள்ளதாகவும், மேலும் 1000 இற்கும் அதிகமானோர் மீது வேறொரு புதிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
ஆனால் அரசாங்கம் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களை தொடர்ந்து தடுத்து வைப்பதற்கென்ற சட்டமூலம் ஒன்றைக் கொண்டு வரவுள்ளது.
அதன் கீழ் தான் அவசரகால சட்டத்தின் கீழ் கைதானவர்களை அரசாங்கம் தடுத்து வைக்கவுள்ளது.
ஆக சட்டங்கள் தான் மாறப் போகின்றனவே தவிர,சிறையில் உள்ளவர்களின் விடுதலை சாத்தியமாகப் போவதில்லை.
அதுமட்டுமன்றி அவசரகாலச்சட்ட நீக்கம் தொடர்பாகவும் சரி, அதன் விதிகளை பயங்கரவாத தடைச்சட்டத்தில் சேர்ப்பது பற்றியும் சரி அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை என்றே தெரிகிறது.
ஏனென்றால் இந்த விவகாரம் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டிருந்தால், அமைச்சர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளியிட்டிருப்பார்கள்.
ஆனால் ஒரு தரப்பு சொல்கிறது ஒருவரைக் கூட விட முடியாது என்று, இன்னொரு தரப்பு சொல்கிறது ஒரு பகுதியினர் விடுவிக்கப்படவுள்ளனர் என்று இதில் எது சரி, யார் சொல்வது உண்மை?
எல்லோரும் அமைச்சர்களாகவும், உயர் அரச அதிகாரிகளாகவும் இருக்கும் நிலையில் எவரது கருத்தை நம்புவது என்று குழப்பங்கள் மக்களுக்கு மிஞ்சியுள்ளது.
அவசரகாலச் சட்டம் இப்போது பெயரளவில் தான் நீக்கப்பட்டுள்ளது.
அது வேறொரு வடிவத்தில்- பயங்கரவாத தடைச்சட்டத்தின் பெயரால் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கப் போகிறது.
அவசரகாலச்சட்டத்தை நீக்குமாறு கோரி வந்த நாடுகள், ஜனாதிபதி மகிந்த ராஜஸபக்ஸவின் முடிவை வரவேற்றிருந்தன.
ஆனால் அந்த நாடுகளுக்கு அவசரகாலச்சட்டத்தை நீக்குகிறோம் என்று கூறிக் கொண்டு, பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பலப்படுத்தியுள்ளது அரசாங்கம்.
சிறிலங்கா என்னதான் அழுத்தங்கள் கொடுத்தாலும் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை.
அதுபோல,சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கையை சர்வதேச சமூகமும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
சர்வதேச சமூகத்தின் இந்தப் போக்கு சிறிலங்கா அரசுக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
முகிலன்
ஈழநேசன்


No comments:
Post a Comment