தமிழ் மக்களுக்கு கூடுதலான அதிகாரங்களை வழங்குவது சாத்தியமற்றது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ள நிலையில், பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என அமைச்சர் பஷில் ராஜபக்ஷ எவ்வாறு கோர முடியும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கை மக்கள் அனைவரும் ஒருமித்து வாழ்வதற்கு தற்போதுள்ள அரசியலமைப்புச் சட்டம் போதுமானது. தற்போதைய அதிகார பரவலாக்கல் முறைமையைவிடவும் சற்று முன்னோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது. மேலும் தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு முறைமையானது அனைத்து மக்களும் ஒருமித்து வாழ்வதற்கு போதுமானதாகும்.
அந்த வகையில் இதனைவிட மேலதிகமாக எதுவும் தேவைப்படும் என நான் எண்ணவில்லை என பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2011 ஜனவரி 10 ஆம் திகதி அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்தபோது 2006 ஜூலையில் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு முன்னிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரையை தீர்வை நோக்கிய திசையில் முன்மாதியாகக் கொள்வது என்று இணங்கப்பட்டது.
ஜனாதிபதி ஆற்றிய உரையில் மக்கள் தங்கள் அரசியல் பொருளாதார தலைவிதியை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதும் அரசியல் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பை உருவாக்குவதும் ஒரு கூட்டு முயற்சியாலேயே சாத்தியமாகும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 2011 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அரசாங்கத்தின் அழைப்பிற்கு இணங்க தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரச பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
இருந்தபோதிலும் ஆகஸ்ட் நான்காம் திகதிவரை நடைபெற்ற 10 சுற்றுப் பேச்சுக்களின் போது எந்தவொரு பதிலும் முன்வைக்கப்படவில்லை.
இந்தப் பின்னணியில் பேச்சுக்களைத் தொடரவும் இதற்கான பதிலை முன்வைக்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.
தற்போது அரசாங்கம் மற்றுமொரு பொறிமுறையை முன்வைக்கப் பார்க்கின்றது. அதாவது தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவை முன்னிறுத்த முயற்சிக்கின்றது.
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவே சிறந்த முறையாக இருக்கும் என அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்ததாக தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்மூலம் இந்த நாட்டில் சகல சமூகத்தவரும் இணங்கக்கூடிய தீர்வு ஒன்றைக் காண முடியும் என தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழ் மக்கள் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் என்றும் அவர் கோரியிருக்கின்றார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு நீடித்து நிலைத்த அரசியல் தீர்வை காண்பதற்கு முன்வைக்கப்படவுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் எந்தவிதமான நிலைப்பாட்டை அது கொண்டுள்ளது என்பதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆராயவேண்டியுள்ளது.
இருந்தபோதிலும் சமகாலத்தில் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ இதற்கு முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை கொண்டுள்ளதுடன் அது குறித்து பகிரங்கமாக தெரிவித்தும் உள்ளார்.
அதாவது பாராளுமன்ற தெரிவுக்குழு ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என தாங்கள் உறுதியளித்துள்ள நிலையில் பாதுகாப்பு செயலரின் கொள்கைக் கூற்றை எவ்வாறு அது சமரசப்படுத்துவதாக அமையும்? என நாம் அரசாங்கத்திடம் கேள்வி ஒன்றை முன்வைக்க விரும்புகின்றோம்.
பாதுகாப்பு செயலர் கோத்தபாயவின் இந்தக் கூற்றின் பின்னணியில் அதிகாரப்பரவலாக்கல் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான தமது நிலைப்பாட்டை அரசாங்கம் தெளிவாக பகிரங்கப்படுத்தவேண்டும்.
பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ அதிகாரப்பரவலாக்கல் தொடர்பில் மேலதிகமாக எதுவும் தேவையில்லை என உறுதிபட தெரிவித்துள்ள நிலையில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்ற தெரிவுக் குழு மீது நம்பிக்கை வைக்குமாறு எவ்வாறு கோர முடியும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கேள்வியெழுப்புகிறது.


No comments:
Post a Comment