8/10/2011 11:41:57 AM
ஆம்பியன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபாகர் சீனிவாசகம் தயாரிக்கும் படம், 'தாண்டவக்கோனே'. சஞ்சய் ஹீரோ. நந்தகி ஹீரோயின். சம்பத், கஞ்சா கருப்பு, அருள்மணி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பானு முருகன். இசை, இளையராஜா. ஆர்.சுப்பு சுஜாதா இயக்குகிறார். இதன் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது. பாடலை வெளியிட்டு இளையராஜா பேசியதாவது:
நான் எப்போதும் அறிமுக இயக்குனர்களை உற்சாகப்படுத்துவேன். 'அன்னக்கிளி' படத்தில் என்னை பஞ்சு அருணாசலம் அறிமுகம் செய்தார். அதற்குமுன் என் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர், எங்கே சினிமா கம்பெனியின் போர்டு தெரிந்தாலும், அங்கே சென்று எனக்கு இசையமைக்க வாய்ப்பு கேட்பார். நான் கம்போஸ் செய்த பாடல்களை பாடிக் காட்டுவோம். நாங்கள் வாய்ப்பு கேட்காத கம்பெனிகளே கிடையாது. ஒருநாள் பஞ்சு அருணாசலத்திடம், அங்கு இருந்த மேஜையை தட்டி, 'மச்சானை பார்த்தீங்களா' பாடலை பாடினேன். அதில் மனதை பறிகொடுத்த அவர், 'அன்னக்கிளி'யில் அறிமுகம் செய்தார். எப்படி இந்த பையனை அறிமுகம் செய்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டார்கள். நானும் அவரிடம் கேட்க நினைத்தது உண்டு. அதாவது, என்னிடம் என்ன இருக்கிறது என அறிமுகம் செய்தீர்கள் என்று. இதை பஞ்சு அருணாசலம்தான் சொல்ல வேண்டும். யார் வேண்டுமானாலும் சினிமாவுக்கு வரலாம். திறமைசாலிகளை யாராலும் தடுக்க முடியாது. எவ்வளவு சிரமப்பட்டாலும், கண்டிப்பாக சாதிப்பார்கள். புது இயக்குனர்களின் வளர்ச்சிக்கு நானும், எனது இசையும் பயன்படுகிறது என்றால், அதை நினைத்து மகிழ்வேன். இவ்வாறு இளையராஜா பேசினார். சஞ்சய், சம்பத், அருள்மணி, பிரபாகர் சீனிவாசகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அமலன் தொகுத்து வழங்கினார்.
No comments:
Post a Comment