வன்னிப் போரின் போது போர்க் குற்றங்கள் நிகழ்ந்தன என்பது இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவுக்குத் தெரியும் என்ற சாரப்படக் கருத்துத் தெரிவித்துள்ளது அமெரிக்கா.
போரின் போது இடம்பெற்றதாக எழுப்பப்படும் போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை அரசுகூட விசாரணை நடத்தி வருகின்றது என்பது அவருக்கும் (கோத்தபாய) தெரியும்.
எனினும் அனைத்துலக விசாரணை ஒன்று தேவை என்றே நம்பப்படுகிறது. அதுதான் எல்லோருடைய விருப்பமும்கூட என்று தெரிவித்தார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பிரதிப் பேச்சாளர் மார்க் ரோனர்.
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் போன்றன அனைத்துலக விசாரணை கோருவது நியாயமற்ற செயல் என்று இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சிக்கு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய தெரிவித்த கருத்துக் குறித்துக் கேட்டபோதே அமெரிக்கப் பேச்சாளர் இதனைக் கூறினார்.
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்களுக்குப் பொறுப்புக்கூறும் செயல் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று நாம் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றோம்.
விசாரணைகளுக்கும் பொறுப்புக் கூறுதலுக்குமான சாதகமான நகர்வாக ஐ.நா. நிபுணர் குழுவை ஏற்றுக்கொள்ள முடியும் என்று நாம் நம்புகின்றோம் என்றும் ரோனர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment