
2009 மே மாதம் முடிவுக்கு வந்த போரின் போது அனைத்துலகச் சட்டங்களை மீறிய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரைப் பாதுகாப்பதற்காக, மேஜர் தரத்துக்கு மேற்பட்ட மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 100 வரையான சிறிலங்காப் படையினரை போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்று சிறிலங்கா அரசாங்கம் தண்டிக்கவுள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மோசமான குற்றச்செயல்களுக்கு இவர்களைப் பொறுப்புக் கூற வைப்பதன் மூலம், சிறிலங்கா அதிபரும் அவரது சகோதரரும் தமது ஆட்சியை அனைத்துலக நெருக்கடிகளில் இருந்து பாதுகாக்க முடியும் என்று நம்புகின்றனர்.
மென்போக்கான அறிக்கை ஒன்றை நல்லிணக்க ஆணைக்குழு சமர்ப்பிக்குமாயின், சிறிலங்கா அதிபர், பாதுகாப்புச் செயலர் உள்ளிட்ட மூத்த அரச மற்றும் இராணுவ அதிகாரிகளின் தனிப்பட்ட சொத்துகளை முடக்கவும், பயணத்தடைகளை விதிக்கவும் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் முடிவு செய்யலாம் என்று கருதப்படுவதால், ஒரு முற்போக்கான நடவடிக்கை போன்று காட்டும் வகையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தின் மூலம் அதிபர் செயலகத்தினால் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படவுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை திருப்திகரமானதாக அமையாது போனால், சுதந்திரமான- நம்பகம் வாய்ந்த விசாரணைகளுக்கு அனைத்துலக அழைப்பு விடுக்கப்படும் என்று அண்மையில பிரித்தானிய வெளிவிகாரப் பணியக அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் கூறியிருந்தார்.
அமெரிக்க, அவுஸ்ரேலிய, கனேடிய வெளிவிவகார அமைச்சர்களும் இதே கருத்தையே வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் பணிப்பின் பேரில், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் புலனாய்வு ஆலோசகர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவும் அவரது சிறப்புப் பிரிவு உதவியாளர்களும் சனல்-4 வெளியிட்ட ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம் மற்றும் உலகத்தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்ட விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் ரமேசை விசாரணை செய்யும் காட்சி அடங்கிய காணொலி ஆகியவற்றில் காணப்படும் சிறிலங்காப் படையினரை அடையாளம் காணும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
மனிதஉரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறும் வகையில் குற்றம்சுமத்தப்படவுள்ள படையினரில் இவர்களும் உள்ளடக்கப்படவுள்ளனர்.
நல்லிணக்க ஆணைக்குழு தமது அறிக்கையில் காணொலிகளில் அடையாளம் காணப்பட்ட இந்தப் படையினரை சட்டத்தின் முன் நிறுத்த பரிந்துரை செய்யவுள்ளது.
இதன்மூலம் சனல்-4 உள்ளிட்ட ஊடகங்கள் சிறிலங்காவுக்கு எதிரான அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ள முடியும் என்று மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நம்புகிறது.
இராணுவக்காவலில் இருந்தபோது காணாமற்போனவர்களின் உறவினர்களுக்கு இலவசமாக வீடு மற்றும் கொடுப்பனவுகளை வழங்கவும் ஆணைக்குழு பரிந்துரை செய்யவுள்ளது.
காணாமற்போனவர்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்வதில் சிறிலங்கா அரசாங்கம் எந்தளவுக்கு மோசமாக நடந்து கொண்டது என்பதை நல்லிணக்க ஆணைக்குழு நன்றாகவே அறிந்துள்ளது.
தீவிரவாத அமைப்பு ஒன்றின் பிடியில் இருந்து பெரும் எண்ணிக்கையான பொதுமக்களை வெற்றிகரமாக மீட்டெடுத்தாக சிறிலங்கா இராணுவத்துக்கு நல்லிணக்க ஆணைக்குழு புகழாரம் சூட்டவுள்ளது.
அறிக்கையின் சில பகுதிகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இராணுவத்தில் உள்ள கடும்போக்காளர்களை திருப்திப்படுத்தவே இவ்வாறு கூறப்படவுள்ளது.
தண்டிக்கப்படவுள்ள படையினரின் குடும்பங்களை சிறிலங்கா அரசாங்கமே கவனித்துக் கொள்ளும் என்றும், அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்றும் மூன்றாவது தரப்பின் மூலம் அந்தப் படையினருக்கு கூறப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்டு ஒருமுறை தண்டிக்கப்படும் சிறிலங்காப் படையினருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும், பின்னர் வெசாக் பண்டிகையின் போது இவர்களில் பெரும்பாலானோருக்கு சிறிலங்கா அதிபர் பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்வார் என்றும் இவர்களுக்கு சிறிலங்கா அதிபர் செயலகம் வாய்மொழி மூலம் உறுதிமொழி அளித்துள்ளதாகவும் அறியப்படுகிறது.
நாடெங்கும் உள்ள இரகசியமான இராணுவச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளை பகிரங்க நீதிமன்றத்தில் நிறுத்தவும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்யவுள்ளது.
அத்துடன் குற்றம்சாட்டப்பட்டு ஒருமுறை தண்டிக்கப்பட்ட போராளிகளில் ஒருபகுதியினருக்கு சிறிலங்கா அதிபர் பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாகவும் அறியப்படுகிறது.
இது புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கையாகும்.
புலம்பெயர் தமிழர்களால், தான் மிகப்பெரிய தலைவலியை எதிர்கொள்வதாக தனது நெருங்கிய சகாக்களிடம் சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்.
அத்துடன் அவரது மனைவியும், தனது நெருங்கிய நண்பர்களிடம், புலம்பெயர் தமிழர்கள் இல்லாத நட்புநாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளின் அழைப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று சிறிலங்கா அதிபருக்கு அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன், சிறிலங்கா அதிபர் அதனை ஏற்றுக்கொண்டு படிப்பினைகளில் இருந்து பாடம் கற்பதாக வாக்குறுதியும் கொடுக்கவுள்ளார்.
பாதுகாப்பு வலயத்தில் பொதுமக்கள் மீதோ அல்லது மருத்துவமனைகள் மீதோ தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்று இந்த அறிக்கையில் கூறப்படவுள்ளது.
அத்துடன் போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா அரசாங்கம் போதிய உணவு மருந்துப் பொருட்களை பொதுமக்களுக்கு அனுப்பி வைக்காதது குறித்தும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்படமாட்டாது.
குற்றங்களுக்குப் பொறுப்பு கூறும் விவகாரத்தை சிறிலங்கா அதிபரோ அவரது சகோதரர்களோ தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
சரணடைந்தாலும் கூட விடுதலைப் புலிகளின் தலைவர்களை கொன்று விடுமாறு கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டிருந்தார் என்று பசில் ராஜபக்ச கூறியதன் ஒலிப்பதிவு தம்மிடம் உள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதன் பின்னரே சிறிலங்கா அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.


No comments:
Post a Comment