இலங்கையின் இனப்பிரச்சினையில் நோர்வேயின் மத்தியஸ்த முயற்சிகள் குறித்து நோர்வேயினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறித்து நேற்று திங்கட்கிழமை (14-11-2011) பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. ருத்திரகுமாரன் அவர்கள் இக்கருத்தினை தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, பல விட்டுக்கொடுப்புகளைச் செய்தனர் என்று கூறிய பிரதமர் வி. ருத்திரகுமாரன் அவர்கள், போர்நிறுத்த மீறல்கள் விடயத்தில், சிறிலங்கா அரசே பாரிய மீறல்களில் ஈடுபட்டது என கோடிட்டுக் காட்டினார்.
யுத்த நிறுத்த மீறல்கள் விடயத்தில், இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்பு குழு கூட, மீறல்கள் குறித்த எண்ணிக்கையை மேலோட்டமாகப் பார்க்கக்கூடாது, அதன் கீழுள்ள தார்ப்பரியத்தைப் பார்க்கவேண்டும் எனவும் பிரதமர் வி. ருத்திரகுமாரன் அவர்கள் எடுத்துரைத்தார்.
இதேவேளை இனி இலங்கை இனப்பிரச்சினையில், புலம்பெயர் தமிழர்கள் முன்னணி நிலையை எடுக்காமல், தலைமைத்துவத்தை, இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் எடுக்கவேண்டும் என்று நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டதைப் பற்றிக் கருத்து தெரிவித்த பிரதமர் வி.ருத்திரகுமாரன் அவர்கள்,
இது போன்று, புலம்பெயர் தமிழர்கள், உள்நாட்டில் களத்தில் வாழும் தமிழர்கள் என்ற பேதம் உண்மையானதல்ல. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தங்களது கருத்துக்களை சுதந்திரமாகக் கூறவும் செயல்படவும் தேவையான அரசியல் வெளி, தற்போது இலங்கையில் இருக்கவில்லை.
இலங்கை ஒரு ஜனநாயக ரீதியாகத் தோல்வியடைந்த நாடு என்று இந்த அறிக்கையே கூறுகிறது. எனவே புலம்பெயர் தமிழர்கள் இலங்கைப் பிரச்சினையில் குரல் கொடுப்பதில் தவறில்லை என்று உறுதிபடத் தெரிவித்தார்.
இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் நோர்வேயின் தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாக கலந்து கொண்டதோடு விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகராகவும் வி. ருத்திரகுமான் அவர்கள் இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பிபிசி தமிழோசை
No comments:
Post a Comment