தேவைப்பட்டால் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஹவாய் தீவில் ஹோனலூலூ நகரில் நடைபெறும் ஆசிய – பசிபிக் உச்சி மாநாட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பது வளைகுடா பிராந்தியத்துக்கு மட்டும் அல்ல அமெரிக்காவுக்கும் மிகப் பெரிய சவாலாக அமையும். இந்த விவகாரத்தில் அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டிருப்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக பெரும்பான்மை நாடுகளின் ஆதரவைப் பெற அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஈரான் அணு ஆயுத நாடாக உருவெடுத்தால் எதிர்காலத்தில் நிகழக் கூடிய ஆபத்துக்களை ரஷ்யாவும், சீனாவும் புரிந்து கொள்ளும் என நம்புகிறேன் என்று அவர் மேலும் கூறினார்.
ஈரானின் அணு குண்டு தயாரிக்கும் திட்டம் குறித்து சர்வதேச அணு சக்தி முகமை வெளியிட்டுள்ள அறிக்கை உச்சி மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்களிடம் அளிக்கப்பட்டது.
இதற்கு ஆதாரமாக செயற்கைக்கோள் படங்கள், கடிதப் பரிமாற்றங்கள் ஆகியவையும் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டன. ஈரான் மீது மேலும் சில பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மாநாட்டில் பங்கேற்றுள்ள ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவ், சீன ஜனாதிபதி ஹு ஜிண்டாவ் ஆகியோரின் ஆதரவைப் பெற ஒபாமா மேற்கொண்ட முயற்சிகள் போதிய பலன் அளிக்கவில்லை என்று கூறப் படுகிறது.
ஈரான் மீது ஐ. நா. சபை விதித்துள்ள பொருளாதார தடையால் அந்த நாடு பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. எனினும், அணு ஆயுதத் திட்டத்தை கைவிடாமல் ஈரான் முரண்டுப் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment