வெள்ளைக்கொடியுடன் சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்களை சுடுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டதாக சண்டே லீடர் பத்திரிகைக்கு சரத் பொன்சேகா அளித்த செவ்வி தொடர்பில் பொன்சேகா மீது வழக்கு தொடரப்பபட்டிருந்தது.
வழக்கு விசாரணைகள் நடைபெற்று முடிவுற்ற நிலையில் தீர்ப்பு இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றில் வழங்கப்பட்டது.
அதன்படி குற்றஞ்சாட்டப்பட்ட சரத் பொன்சேகா குற்றவாளி எனவும் அத்துடன் அவருக்கு மூன்று வருட சிறைத் தண்டனையையும் விதிகத்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழுவில் ஒருவர் சரத் பொன்சேகா குற்றமற்றவர் எனத் தீர்ப்பளித்தார். ஏனைய இருவரும் சரத் பொன்சேகா குற்றவாளி என அறிவித்தனர்.
இதன் அடிப்படையில் அவருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததுடன், 5000 ரூபா அபராத தொகையும் விதிக்கப்பட்டது. அபராத தொகை விதிக்கப்படாத பட்சத்தில், தண்டனைக் காலம் மேலும் 6 மாதங்களால் அதிகரிக்கும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்றத்தால் தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பினை தானும் மக்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்த தீர்ப்பு நியாயமற்றது. எனவும் இத்தீர்ப்பால் மக்களின் எதிர்ப்பார்ப்பு சீர்குலைந்துள்ளது. இவ்வாறானதொரு தீர்ப்பினை வழங்கிய நீதிமன்றத்தின் சுயாதீனம் வெளிப்படையாகியுள்ளது. இதனால் நீதிமன்றுக்கு எதிர்காலத்தில் கரும்புள்ளி விழப்போகிறது எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
அதேவேளை சரத் பொன்சேகாவிற்கு மேல்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை ஆட்சேபித்து எதிர்வரும் திங்கட்கிழமை மேன்முறையீடு தாக்கல் செய்யவுள்ளதாக பொன்சேகாவின் வழக்கறிஞர் நலின் லத்துவஹெட்டி தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தமக்கு எழுத்து மூலமாக வழங்கப்படும் பட்சத்திலேயே திங்கட்கிழமை மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
No comments:
Post a Comment