இந்தியாவுக்கு யுரேனியத்தை விற்க ஆஸ்திரேலியாவில் இருக்கும் தடையை விலக்கிக்கொள்ள ஆஸ்திரேலியப் பிரதமர் ஜூலியா கில்லார்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் இந்தியா கையெழுத்திடாதபடியால் அந்நாட்டுக்கு கதிரியக்க வஸ்துக்களை ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலியா மறுத்து வருகிறது.
ஆனால் தமக்குத் தாமே விதித்துக்கொண்ட இத்தடையை விலக்கிக்கொள்வது பற்றி ஆஸ்திரேலியாவை ஆளும் தொழிற்கட்சி அடுத்த மாதம் நடக்கவுள்ள தமது வருடாந்திர மாநாட்டில் பரிசீலிக்கும் என்று தெரிகிறது.
ஆஸ்திரேலியா யுரேனியம் வழங்க ஆரம்பித்தால், இந்தியா தனது அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அது வழிவகுக்கும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கில்லார்ட் ஆர்வம்
இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதிச் செய்வதில்லை என நான்கு வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா தனக்குத் தானே விதித்துக்கொண்ட கட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டுவருவதால் இந்தியாவில் பெரு எண்ணிக்கையிலானவர்களுக்கு அணுசக்தி கொண்டு உருவாக்கப்பட்ட மின்சாரத்தை கிடைக்கச்செய்ய முடியும் என்றும் அதன் வழியாக இந்தியா நிறையப் பேரை வறுமையில் இருந்து வெளிக்கொண்டுவர முடியும் என்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஜூலியா கில்லார்ட் கூறியுள்ளார்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள யுரேனியப் படிவங்களில் உலகில் நாற்பது சதவீதமானவற்றைக் கொண்டுள்ள நாடு ஆஸ்திரேலியா ஆகும்.
விமர்சனம்
அணுஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் சில குறைபாடுகள் இருப்பதாகக் கூறி அதிலே கையெழுத்திட இந்தியா மற்றுத்துவருகிறது.
இந்நிலையில் இந்தியாவுக்கு கூடுதலான யுரேனியம் கிடைத்தால், உலகில் அணு ஆயுதப் பெருக்கத்துக்குத்தான் அது வழிவகுக்கும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்தியா வேகமாக ஆயுதக் குவிப்பு செய்து வருகிற ஒரு நாடு என்றும் அமெரிக்காவிடம் இருந்து பிற அணுசக்தி தொழில்நுட்பத்தோடு அணு ஆயுதம் பொருந்திய நீர் மூழ்கிக் கப்பலைப் பெறுவதற்கும் இந்தியா முயன்றுவருகிறது என்றும் அணுகுண்டுகளைக் காவும் நடுத்தர வீச்சு ஏவுகணைகள் ஏற்கனவே இந்தியாவிடம் உள்ளன என்றும் ஆஸ்திரேலியாவுடைய பசுமைக் கட்சியின் தலைவர் பாப் பிரவுன் சுட்டிக்காட்டினார்.
"ஆஸ்திரேலியா சீனாவுக்கு மட்டுமல்லாது தற்போது இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்குமேகூட யுரேனியத்தை வழங்க ஆரம்பித்தால் உலகில் அணு ஆயுதம் அளவுக்கதிகமாகப் பெருகும் ஆபத்து உள்ளது. பணம் பண்ணுகிற ஆர்வத்தில் உலகின் பாதுகாப்பு, ஆஸ்திரேலியாவுடைய பாதுகாப்பு ஆகியவற்றை இந்த அரசாங்கம் மறந்துவிடுகிறது" என பாப் பிரவுன் விமர்சித்துள்ளார்.
No comments:
Post a Comment