சீன இராணுவத்தின் அதிஉயர் அதிகாரிகள் இன்று(13) கொழும்புக்குச் சென்றுள்ளனர். தற்சமயம் அங்கே நிலைகொண்டுள்ள சீன இராணுவ அதிகாரிகள் இலங்கை இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியாவைச் சந்திக்கவுள்ளதாகவும் அதிர்வு இணையம் அறிகிறது.சீன மக்கள் இராணுவத்தின் உயரதிகாரியான ஜெனரல் மா ஹக்ஷ்யன் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல்தடவை என்று சொல்லப்படுகிறது. இலங்கை இராணுவத்துக்கு பயிற்சிகள் கொடுப்பது தொடர்பாக தாம் கலந்தாலோசிக்கவுள்ளதாக இவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் இந்தியாவை ஆத்திரமூட்டும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
இந்தியப் பெருங்கடல் பரப்பில் இரகசியமாக ஒரு இராணுவத் தளத்தை அமைக்க சீனா முனைப்புக்காட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இவர்களது இலங்கை விஜயம் மிக முக்கியமானதாக அமையலாம்.
ஆனால் சீன இராணுவத்தினரோ இது ஒரு நட்புரீதியான விஜயம் எனவும் இலங்கை இராணுவத்துக்கு சில பயிற்சிகளைக் கொடுக்க தாம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் விடையத்தை பூசி மெழுகும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதனை இந்தியா எவ்வாறு எடுத்துக்கொள்ளும் என்ற நிலை தற்போது தோன்றியுள்ளது எனலாம்.
சமீபத்தில் இந்தியாவில் தங்கியுள்ள திபெத்தின் ஆண்மீகத் தலைவர் தலே லாமா அவர்கள் நடத்திய மாநாட்டை இந்தியா அனுமதித்தது. இதனால் கடும் ஆத்திரமடைந்த சீனா தனது எதிர்ப்பை வெளியிட்டது. அதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் மற்றும் இந்தியாவை ஆத்திரமூட்டவுமே இவர்கள் தற்போது இலங்கைக்கு விஜயம்செய்துள்ளார்கள் என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


No comments:
Post a Comment