முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு கிராமத்திலிருந்து வந்திருந்த அந்த தாயின் கதை உயிரை உருக்கி விட்டிருந்தது. இறப்பதற்குள் தன்னுடைய மகனை தேடி கண்டு கொள்ளவேண்டும் என்ற தாகமும். வயதின் மூப்பும் உள்ளே எரிந்து கொண்டிருக்கும் சோகத்தீயின் கதகதப்பும் அந்த தாயின் முகத்தில் ததும்பிக் கொண்டீருந்தது. இப்படி ஒன்றல்ல ஆயிரமாயிரம் கண்ணீர் கதைகள் அந்த இடத்தில் காதுகளை நிறைத்துக் கொண்டிருந்தது. ஆனால் இவை எவையுமே புரியாதவர்களாக. பொலிஸார் நடந்து கொண்ட விதம் பல விடயங்களை எமக்கு உறைக்கும் படி சொல்லியிருக்கின்றது.
இலங்கையில் யுத்தம் முடிந்து விட்டிருக்கின்றது. நாம் அரசியல் உரிமை தொடர்பில் பேசிக் கொண்டிருக்கின்றோம் அரசு சர்வதேசத்திடம் யுத்த வெற்றியை மமதையுடன் காண்பித்துக் கொண்டே தன்னுடைய வயிற்றை வளர்த்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் யுத்தத்தின் வடுக்கள் மட்டும் எங்கள் முகங்களில் இருந்து மறைந்துபோகவில்லை யுத்தகாலத்திலும் யுத்தம் முடிந்துபோனதாக தெரிவிக்கப்பட்ட காலத்திலும் கடத்தப்பட்டும் கைதுசெய்யப்பட்டும் காணாமல்போயுமுள்ள ஆயிரமாயிரம் தமிழர்களின் உறவுகள் இன்றும் வீதியில் கண்ணீரோடு நிற்கின்றார்கள்.
ஆனால் ஏ9வீதியிலும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களிலும் இந்த நாட்டில் ஒரே இன மக்களாக நாங்கள் இணைந்து வாழ்ந்திடுவோம் என்று அரசாங்கம் பிரச்சாரம் செய்கின்றது. இராணுவத்தினரை வைத்துக் கொண்டு. ஆனால் வடுக்கள் வாழும் வரை காயம் கண்ட நினைவுகளை மறக்க முடியுமா? வடகிழக்கில் தமிழர் வாழ் நிலத்தில் நடந்தேறிய அனைத்துக் கடத்தல் காணாமல்போதல் சம்பவங்களுக்கும் படுகொலைகளுக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பிருக்கின்றது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
இதற்கு இன்றும் வாழும் சாட்சிகள் பல இருந்து கொண்டுதானிருக்கின்றன. “என்னுடைய கணவர் இராணுவத்தினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்” “எனது பிள்ளையை நான் இராணுவத்தினரிடம் நேரடியாக கொடுத்தேன்” இப்படி பலர் சாட்சிகளாக இருந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் எங்கே என்பதற்கு மட்டும் பதில் இன்று வரை கிடைக்க வில்லை நாளையும் கிடைக்கும் என்று நாம் நம்பவில்லை ஆனால் கடத்தப்பட்ட தன்னுடைய கணவன் என்றாவது ஒரு நாள் வந்து விடுவான் என்ற நம்பிக்கையுடன் நெற்றி நிறை பொட்டிட்டு கழுத்தில் அவன் கட்டிய தாலியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் என் இன பெண்களின் கதை சொன்னால் கண்கள் காய்ந்துபோகும்.
யுத்தம் தின்ற ஒரு கிராமத்தின் மூலையிலிருந்து கிழிந்த சீலையுடன் நாகரீகம் தலைக்கேறியுள்ள கொழும்பில் சிறைச்சாலை வாயிலிலும் முகாம்களின் வாயிலிலும் தன் மகளின் கறுப்புவெள்ளை புகைப்படத்துடன் காய்ந்த வயிற்றுடன் காத்திருக்கும் என் இன தாயின் கதைகேள் உயிர் உருகியோடும் உன் கண்முன்னாலேயே. உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா என்பதையாவது கூறினால் கூட ஒரு ஆறுதல் ஆனால் எதுமே கூறாமல் நாய்களை விடவும் கேவலமாக அலைந்து திரியும் நிலையை வைத்துக் கொண்டு நாங்கள் ஒற்றுமையாக வாழ்வோம் என்பது நகைப்பிற்குரியது.
கைவிடப்பட்ட காணிகளிற்குள்ளும் கைவிடப்பட்ட இராணுவ முகாம்களிற்குள்ளும் இருந்து மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்படுகின்றன. உரைப்பையில் போடப்பட்டும் அரைகுறையாக புதைக்கப்பட்ட நிலையிலும் அவை உள்ளன. எங்கே இது என்னுடைய பிள்ளையினுடையதாக இருக்குமோ? எங்கே இது என்னுடைய கணவருடையதாக இருக்குமோ என்று எத்தனை நெஞ்சங்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்ற சோகம் உலகில் வேறெந்த இனத்திற்கும் நேர்ந்திருக்கின்றதா? இத்தனைக்கும் சுதந்திரத்திற்காக போராடியது மட்டும்தான் குற்றம்.
ஆனால் எதையுமே பொருட்படுத்தாத வெற்றி மமதைக்குரிய மனிதர்களாக பொலிஸார் அன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமது பிள்ளைகளையும் உறவுகளையும் மீட்டுத்தருமாறு அந்த சொந்தங்கள் கண்ணீர் விட்டழுதபோது; மிகக் கூடிய கொடுரமாக பெண்களை காலால் உதைத்த கொடுரம் கூட நடந்தேறியது. காணாமல்போனோரை தேடிக் கண்டறியும் குழுவின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்;டபேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தங்கள் சொந்தங்களை பறிகொடுத்திருந்த ஏராளமான மக்கள் அதிகாலையிலேயே யாழ்.பேருந்து நிலையத்திற்கு முன்பாக கூடி விட்டனர்.
அதிகாலையிலேயே யாழ்.நகருக்குள் நுழையும் சகல வீதிகளிலும் பெருமளவு இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுவிட்டனர். மீண்டும் யுத்தகால நிலைமைபோல் வீதிச்சோதனைகள் கடுமையாக்கப்பட்டது. உதாரணத்திற்கு பருத்துறையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பேருந்தில் வந்த ஒருவர் 5ற்கும் மேற்பட்ட இடங்களில் மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டார். இதேபோல் யாழ்.நகரில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டனர். காரணம் தென்னிலங்கையிலிருந்து வரும் சிங்களவர்களுக்கு இங்கே சிவில் நிர்வாகம் நிலைநாட்டப்பட்டதாக காண்பிப்பதற்கும் உள்ளே இருப்பவற்றை சொல்லாமல் ஊடகங்கள் ஊமையாக இருக்கும் என்ற நம்பிக்கையிலும்.
ஆனால் சிவில் நிர்வாகிகள் இராணுவத்தை விடவும் மிகமோசமான காடைத்தனத்தை கக்கினார்கள். ஆர்ப்பாட்டத்தில் முதலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் நின்றிருந்தார். அவரை நேரடியாக ஊடகங்கள் பார்த்துக் கொண்டிருக்க பொலிஸார் அச்சுறுத்தினர். பின்னர் அவர் தன்னை யார் என அடையாளப்படுத்திக் கொண்டதன் பின்னரே பொலிஸார் மௌனமாகினர். ஆனால் மக்கள் எதற்கும் கலங்கவில்லை தீர்மானிக்கப்பட்டதைப்போன்று போராட்டம் நடக்கும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
இந்த மனோபலத்திற்கு முன்னால் பொலிஸாரின் காடைத்தனம் சிதறிச் சின்னாபின்னமாகிப்போனது உன்மைதான். ஆனால் அதற்குள் தாம் காண்பிக்கவேண்டிய அனைத்து காடைத்தனத்தையும் காண்பித்து விட்டனர். தெற்கிலிருந்து வந்திருந்த சுமார் 40பேரை பொலிஸார் வழிமறித்து அவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதை தடுக்க முற்பட்டனர். இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் மறித்து வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு ஆர்ப்பாட்டத்தை கொண்டு செல்ல முற்பட்டார்.
ஆனால் அதற்கு அனுமதிக்காத பொலிஸார் பெண்கள் மீதும் வயதானவர்கள் மீதும் மிக மூர்க்கத்தனமாக நடந்து கொண்டனர். இந்தச் சமயம் அங்கு பாராளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராசா வந்ததை தொடர்ந்து பொலிஸார் நல்ல பிள்ளை நாடகம் போட்டனர். பின்னர் மாவைசேனாதிராசா மறிக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்குமாறு கேட்டிருந்தார். எனினும் உடனடியாக அவர்களை விடுவிக்காத பொலிஸார் ஒரு சிலரை மட்டும் விடுவித்து விட்டு ஏனையவர்களை கைது செய்தது.
பின்னர் பொலிஸ் நிலையம் சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை விடுவித்திருந்தார். முன்னதாக விடுவிக்கப்பட்டவர்களில் ஒரு வயதான சிங்கள ஊடகவியலாளரும் உள்ளடங்கியிருந்தார். அவர் ஆர்ப்பாட்டத்தில் நுழைந்தபோது அங்கு வந்த யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்சிகேரா குறித்த ஊடகவியலாளரின் அடையாள அட்டையை வாங்கி பார்த்து விட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையிலேயே அதை அவரது முகத்தில் விட்டெறிந்தார்.
இதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் விளக்கம் கேட்டதற்கு அவரை தாக்குமளவிற்கு குறித்த பொலிஸ் அதிகாரி முனைந்தார் என்றால் இந்த நாட்டில் ஒரு சாதாரண தமிழ் மகனுடைய பாதுகாப்பு என்பது எப்படியிருக்கும் என்பது யாருக்கும் சொல்லிப்புரிய வேண்டிய அவசியம் கிடையாது. இதேபோல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த உலக சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் ஒருவரை சட்டையில் பிடித்து நடு வீதியால் பொலிஸார் அடித்து இழுத்துச் சென்றிருந்தனர்.
எனவே இவற்றிலிருந்து எமக்குச் சில கற்பிதங்கள் உறைக்கச் சொல்லப்பட்டிருக்கின்றது. இந்த நாட்டில் தமிழர்கள் எதையுமே கேட்க முடியாது. அப்படிகேட்டால் அராஜகத்தால் அடித்து ஒடுக்கப்படுவீர்கள். இதேபோல் தமிழர்களுக்கு சார்பாக சிங்களவர்களும் கூட சத்தமிட கூடாது. அவர்களுக்கும் இதுவே நிலை. எங்களில் சில அற்பர்கள் அடிமைச் சீவியம் பழகிக் கொண்டு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் ஒன்று மட்டும் உன்மை இலங்கை அரசாங்கமும் சரி சர்வதேச சமுகமும் சரி தமிழ் இனத்தின் சுதந்திரவேட்கைப் போரை ஒரு பயங்கரவாத இயக்கம் என்ற போர்வையில் சிதைத்து சின்னாபின்னமாக்கியிருக்கின்றன. இதற்குப் பின்னால் தமிழர்கள் யாரும் போராட மாட்டார்கள் என்றே கனவும் காண்கிறார்கள். ஆனால் விடுதலைக்கான போர் தலைவர் பிரபாகரன் என்பவரின் தனியொரு எண்ணம் கிடையாது. அது ஒரு இனம் அடிமைத்தனத்திலிருந்து பெற்றெடுத்த வேட்கை இதை புலம்பெயர் உறவுகளே சர்வதேசத்திற்குச் சொல்லுங்கள்.
அடிமைத்தனமும் ஆக்கிரமிப்பும் எங்கள் மண்ணில் ஒன்றும் புரையோடிப்போகவில்லை நீர்த்துப்போன அரசியல் பேச்சுக்களும் இன நல்லிணக்கப்பேச்சுக்களும் எங்கள் கண்ணீருக்கும் எங்கள் தியாகங்களுக்கும் நாம் இன்றும் சுமந்து கொண்டிருக்கும் அவலங்களுக்கும் முன்னால் பூச்சியமே. அவற்றை கைவிட்டுவிட்டு எங்கள் கண்ணீரை தியாகங்களை அவலங்களை உதாசீனம் செய்து ஆக்கிரமிப்புக் கரங்கள் கொண்டு நசுக்க நினைத்தால் எங்களிடமுள்ள சுதந்திர வேட்கை மீண்டும் பெற்றெடுக்கப்படும்.
இதைத்தான் பொலிஸாரின் காட்டுமிராண்டித் தனத்திற்கு முன்னாலும் அன்று ஆர்ப்பாட்டத்தில் நின்றிருந்த மக்களின் மனோபலம் உறைக்கச் சொல்லியிருக்கின்றது. தமிழன் தனித்துவத்தோடு அடிமை ஆடைகளை களைந்து விட்டு வாழும்வரை தமிழன் போராடிக் கொண்டுதானிருப்பான்.
சுதந்திரன்.
suthanthiran86@gmail.com
No comments:
Post a Comment