இந்திய வர்த்தகக் குழு வொன்று சிறிலங்கா அதிபர் மகிந்தர் இன்று சந்தித்துப் பேசவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் எவ்வாறு பொருளாதார உறவை மேலும் நெருக்கமாகப் பேணமுடியும் என்பது தொடர்பாகவே இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தொழிற்துறை அமைப்பான CII தெரிவித்துள்ளது.
CII யின் உப தலைவர் கிறிஸ் கோபாலகிருஸ்ணன் தலைமையிலான 13 வர்த்தகப் பிரதிநிதிகள் மகிந்தரை சந்திக்கும் குழுவில் இடம்பெறவுள்ளனர்.
இரு நாடுகளின் வர்த்தக மற்றும் முதலீட்டு செயற்பாடுகள், பொருளாதார ஒத்துழைப்பு, தொழில்நுட்பப் பங்களிப்புக்கள், கட்டுமானம் மற்றும் சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக இவர்கள் ஆராயவுள்ளதாக CII தெரிவித்துள்ளது.
Infosys, ICICI வங்கி, TVS Group, Alstom Projects India , Srei உட்கட்டுமான நிதி நிறுவனம் போன்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளே இந்தச் சந்திப்பில் பங்கேற்கின்றனர்.
2010-11 இல் 4.5 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த இந்தியா- இலங்கை இடையிலான வர்த்தக நடவடிக்கைகள் 2015 இல் 7 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக CII தெரிவித்துள்ளது.
எரிசக்தி, விவசாயம், நிதிச் சேவைகள், கட்டுமானம், சுகாதார சேவைகள் ஆகியவை உள்ளடங்கலாக பல்வேறு துறைகளில் பரஸ்பரம் இலங்கை, இந்தியா ஆகிய இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் இந்த தொழிற்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பு வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து இந்திய வர்த்தகப் பிரதிநிதிகள் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராசபக்ச, தொழிற்துறை மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆகியோரையும் சந்திக்கவுள்ளனர்.
கடந்த ஆண்டு மகிந்தர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, இரு நாடுகளுக்கும் இடையில் நெருங்கிய பொருளாதாரத் தொடர்புகளைப் பேணுவதாக உடன்பாடு காணப்பட்டது.
இலங்கையில் அதிகளவு முதலீட்டை மேற்கொண்டுள்ள நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். 2010 இல் 110 மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய முதலீடுகள் இருப்பதாக CII மேலும் தெரிவித்துள்ளது.
'சில இந்திய நிறுவனங்கள் வருகின்ற ஆண்டுகளில் பல்வேறு முதலீடுகளை இலங்கைத் தீவில் முதலீடு செய்வதற்குத் திட்டமிட்டுள்ளன. அதேபோல் சிறிலங்கா நிறுவனங்களும் இந்தியாவில் தமது முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளன' என CII தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment