லண்டனில் இருந்து 50க்கும் மேற்பட்ட தமிழர்களை தனி விமானத்தில் ஏற்றி இலங்கைக்கு நாடு கடத்த பிரித்தானியா முயல்கிறது. இதனை தடுக்க வேற்றின மக்களுடன் சில தமிழர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.தடுப்பு முகாமில் இருந்து திருப்பி அனுப்ப என ஒரு தொகுதி தமிழர்களை ஏற்றியவாறு வெளியே வந்த பேரூந்து ஒன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் வழிமறித்து அதனைச் சூழ்ந்துகொண்டனர். இதனால் அதன் சாரதி எதனையும் செய்யமுடியாது பேரூந்தை திரும்பவும் தடுப்பு முகாமுக்குள் கொண்டு சென்றுள்ளார். இருப்பினும் வேறு வழியாக இவர்களை பிறிதொரு பேரூந்தில் ஏற்றி விமானநிலையம் கொண்டு செல்ல பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் முனைவதாக போராட்டத்தை நடத்தும் சில தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.
வேற்றின மக்கள் மழையையும் பொருட்படுத்தாது அங்கே நின்று தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் நேரம் பிரித்தானியாவில் உள்ள ஏனைய தமிழர்கள் இதில் கலந்துகொள்ளவில்லை என்றால் இது ஒரு வெட்க்கக்கேடான விடையமாக அமைந்துவிடும். அதுமட்டுமல்லாது திருப்பி அனுப்ப இருக்கும் தமிழர்களை அனுப்பவேண்டாம் என மிகக் குறைந்த அளவிலான மக்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் கடும் எதிர்ப்பாலேயே தற்போது ஒரு பேரூந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இப் போராட்டத்தில் மேலதிகமாக மக்கள் கலந்துகொண்டால் போராட்டம் வெற்றியடையும் என அங்கே போராடும் மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே வீட்டில் அல்லது வேலை முடிந்து இருக்கும் தமிழர்கள் இப் போராட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என அதன் ஏற்பாட்டாளர்கள் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
தமிழர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் நிலையில் அவர்களுக்கு அங்கே உயிராபத்து இருக்கிறது. அதுமட்டுமல்லாது அவர்களை இலங்கை இராணுவம் சித்திரவதை செய்யலாம் என்ற அச்சமுக் காணப்படுவதாக பல பிரித்தானிய அமைப்புகள் தெரிவித்திருந்தபோதும் குடிவரவு அதிகாரிகள் இவர்களை திருப்பி அனுப்ப முயல்வது பாரதூரமான விளைவுகளை தோற்றுவிக்கலாம். எனவே தமிழர்களே உங்களால் முடிந்தவரை இப்போராட்டத்துக்கு உதவுங்கள். வேற்றின மக்கள் எமக்காகத் திரண்டு நிற்கும்போது தமிழர்களாகிய நாம் பின் நிற்கலாமா?
தற்போது போராட்டம் நடைபெறும் இடம்:
HARMONDS WORTH PRISON,
West Drayton,
Middlesex,
UB7 0HB


No comments:
Post a Comment