தமிழ்நாட்டு ஊடகங்கள் வியாபார நோக்கமாகவே தமிழ் மொழியையும், ஈழத்தமிழர்களையும் பயன்படுத்தி வருவதாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையின் தலைவர் பேராசிரியர் வீ. அரசு தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மேற்கொண்டிருந்த பேராசிரியர் வீ. அரசு யாழ் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் ஊடகவியலாளர்கள், ஊடக மாணவர்கள், மற்றும் ஆர்வலர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இக்கருத்தினை வெளியிட்டார். மேலும் தமிழ்நாட்டு ஊடகங்கள் குறிப்பாக அச்சு ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை மீறி வணிக நோக்கத்தை நோக்கியே நெயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் நாட்டின் அரசியலும் தற்போதைய முதல்வருக்கு அடுத்ததாக சாதியத்தை அடிப்படையாக வைத்தே நடக்கின்றது. இதற்கு அண்மைய உதாரணமாக பரமகுடி தலித்துகள் மீதான தாக்குதலைக் கூறலாம். தமிழ் நாட்டின் ஊடகங்கள் ஆரம்ப காலம் முதல் ஈழத் தமிழர்களுக்காக ஆதரவாகச் செயற்பட்டு வந்திருந்தபோதும் ராஜீகாந்தியின் கொலை வழக்கிற்குப் பின்னர் ஒரு சில ஊடகங்களைத் தவிர மற்றய ஊடகங்கள் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவே செயற்பட்டு வந்தன.
பின்னர் இறுதி யுத்தத்தின் போது அனைத்து ஊடகங்களும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயற்பட்டு வந்தபோது தற்போது ஈழத்தினில் எந்தவிதமான பிரச்சினைகளும்; இல்லாததைப்போல் செயற்பட்டு வருகின்றன என பேராசிரியர் வீ. அரசு குற்றஞ்சாட்டினார்.
யாழ்ப்பாணத்து நாளிதழ்கள்; வளர்ச்சியினில் மிகவும் பின் தங்கியிருப்பதாகவும் தெரிவித்த பேராசிரியர் வீ. அரசு அவை தம்மை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். மறைந்த பேராசிரியர் நந்தி ஞாபகார்த்த நிகழ்விற்காக அவர் யாழ்.வந்திருந்தார்.
No comments:
Post a Comment