தமிழீழமே இறுதித் தீர்வு எனக் கூறி ஆயுதமேந்திய தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளென்றும், தமிழர்களைச் சிங்கள இனவெறி அரசு கொன்றபோது வாய்மூடி மௌனிகளாக இருந்தார்கள் உலக நாடுகள். நீதிக்கு மாறான தமது கடந்த கால நடவடிக்கைகளுக்காக தற்போது வேதனையடைகின்றன கனடா உட்பட பல உலக நாடுகள்.
கனடியப் பிரதமர் ஸ்டீபன்; கார்ப்பர் கடந்த செப்டம்பர் ஆரம்பத்தில் கனடியப் பல்கலாச்சாரத் தொலைக்காட்சியொன்றுக்குப் பேட்டியொன்றை அளித்திருந்தார். அப்பேட்டியின் போது சிறிலங்கா அரசானது பின்வரும் விடயங்களைக் கடைப்பிடித்து அரசியல் ஜனநாயகப் பாதைக்கூடாக முன்னேறாத பட்சத்தில் சிறிலங்காவில் 2013-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கனடா சார்பில் தான் பங்குகொள்ளமாட்டேன் என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், சிறிலங்கா அரசானது, சிறிலங்காவில் வாழும் இனங்களுக்கிடையிலான வேற்றுமைகளை அகற்றி அரசியல்ரீதியான சமரச முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சிறிலங்கா அரசானது சனநாயக நெறிமுறைகளையும், பொறுப்புணார்வையும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தல் வேண்டும். அத்துடன், ஐ.நா. சபையின் போர்க்குற்றம் குறித்த சுயேச்சையான விசாரணைக்கான அழைப்பைத் தான் வரவேற்பதாகவும் கூறியிருந்தார் ஸ்டீபன் கார்ப்பர்.
இவருடைய பேச்சுக்குப் பின்னர் பல கனடியத் தமிழர்கள் தமது ஆதரவை ஸ்டீபன் கார்ப்பருக்கு தெரிவித்து வருகிறார்கள். கடந்த பல ஆண்டுகளாகக் கனடியத் தமிழர்களுக்கு எதிராக விசமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொண்டுவந்ததுதான் ஸ்டீபன் கார்ப்பர் தலைமையிலான பழமை தழுவும் கட்சியின் அரசு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நான்காம் கட்ட ஈழப்போர் உக்கிரமடைந்த வேளையில் சிறிலங்கா அரசை கண்டிக்காமல் இருந்தது இவருடைய அரசு.
தமது உறவுகளை சிங்கள அரசிடமிருந்து காப்பாற்ற அமைதி வழியிலான பல போராட்டங்களைக் கனடியத் தமிழர்கள் நடத்தினார்கள். தமிழர்கள் நடத்திய போராட்டங்களைக் கொச்சைப்படுத்தியதுடன், அவர்களைப் ‘புலிப் பயங்கரவாதிகள்’ என முத்திரையும் குத்த முனைந்தது இவ்வரசு. இப்படியான அரசு தற்போது கடைப்பிடிக்க முனையும் ஈழத்தமிழர்கள் நலன் சார்பிலான கொள்கை உலக அரங்கில் ஈழத்தமிழரின் போராட்டத்திற்கு ஆதரவாக பல நாடுகள் தமது பழைய நிலையை மாற்ற ஆரம்பித்துள்ளார்கள் என்றுதான் கூறவேண்டும்.
கனடியப் பிரதமரின் பேச்சுக்குப் பின்னர் பல மாறுதல்களை சிறிலங்கா விடயத்தில் கனடிய அரசு செய்ய முனைகிறது. கனடா தூதரகத்தினால் கடந்த வாரம் ஐ.நா மண்டபத்தில் கூட்டப்பட்ட சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதவுரிமை சம்பந்தமான பிரேரணை உரையாடலில் பல ஐரோப்பிய, தென் அமெரிக்க, அமெரிக்கா, நியூஸிலாந்து போன்ற நாடுகள் ஆதரவு காட்டியிருந்தன.
சிறிலங்காவுக்கு தொடர்ச்சியாக பக்கச்சார்பாக இருக்கும் சீனா, ரஷ்யா, கியூபா, அல்ஜீரியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மட்டுமே தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தன. அதிக செல்வாக்கைக் கொண்ட நாடுகள் சிறிலங்காவுக்கு எதிராக செயற்பட ஆதரவுகளை தெரிவித்து வருகிறார்கள்.
ஐ.நா. சபையின் இருப்பும் செயற்திறனும் அது தனது உருவாக்கத்தின் அடிப்படை கோட்பாடுகளை சொல்லில் மட்டுமன்றி செயலிலும் காட்டத்தவறின் இழிநிலைக்கு சென்றுவிடும் என கடும் தொனியில் கருத்துத் தெரிவித்த கனடிய வெளிவிவகார அமைச்சர் ஜான் பெயட் அவ்வாறான செயற்திறமையின்மைக்கான உதாரணங்களில் ஒன்றாக சிறு ஒழுங்குவிதியை காரணம் காட்டி தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டை ஏற்று சிறிலங்காவில் புரியப்பட்ட நம்பிக்கைக்குரிய முறைப்பாடுகளைக் கொண்ட போர்க்குற்ற அறிக்கை குறித்து மேலதிக நடவடிக்கை எடுப்பதை ஐ.நா. தவிர்த்தது எனச் சுட்டிக்காட்டியிருந்தார்.
சமீபத்தில் நியூயோர்க்கில் நிறைவடைந்த 66-ஆவது ஐ.நா. கூட்டத்தொடரில் கனடிய அரசின் சார்பில் செப்டம்பர் 26-ஆம் நாள் மாலை பொதுச்சபையில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ் ஐ.நா. கூட்டத்தொடரில் சிறிலங்கா குறித்து பொதுச்சபையில் கருத்துத் தெரிவித்த ஒரே நாடு கனடா என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கொள்கைகளை செயற்படுத்துவதில் காட்டிவரும் முன்னுக்கு பின் முரணான செயற்பாடுகளால் தாழ்வு நிலைக்குச் செல்வதை கனடா தொடர்ந்தும் எதிர்த்து வந்துள்ளதாக தெரிவித்த கனடிய வெளிவிவகார அமைச்சர், அதற்கு உதாரணமாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாபிரிக்க இனவெறி அரசை கொமென்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்வதற்கு கனடா தெரிவித்த எதிர்ப்பை சுட்டிக்காட்டினார்.
ஐ.நா. சபையின் பெரிய எதிரிகள் அதன் செயற்பாடுகளை வெளிப்படையாக குறை கூறுபவர்கள் அல்ல. மாறாக, அமைதியாக அதன் கொள்கைகளை உதாசீனம் செய்பவர்கள் இன்னும் மோசமானவர்கள் ஒன்றுமே செய்யாமல் ஐ.நா. கீழ்நிலைக்கு செல்வதை பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், நாங்கள் அவ்வாறு அமைதியாக இருக்க முடியாது.
நாடுகளின் தனித்துவத்தை கனடா மதித்தாலும், சிறுபான்மையினருக்கான மனிதவுரிமைகள், அடிப்படை சுதந்திரங்கள் மறுக்கப்படுகின்றபோது முகத்தை திருப்பிக் கொண்டு மறுபக்கம் பார்க்க மாட்டோம்.” பாதிக்கப்பட்டவர்களின் உரிமைக்காக குரல், அடக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிப்பது எம் அனைவரின் பொதுக்கடமை எனவும் அவர் தனதுரையில் தெரிவித்தார் கனடிய வெளிவிவகார அமைச்சர்.
தமிழர்களுக்கு எதிராக பேசியும், செயற்பட்டும் வந்த பழமை தழுவும் கட்சியின் தலைமையிலான அரசின் கொள்கை மாற்றத்தை இப்போது வெளிப்படையாக உணர முடிகிறது என்று கூறுகிறார்கள் கனடிய அரசியல் அவதானிகள்.
கனடாவின் கொள்கை மாற்றத்தை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள் சிங்கள ஆட்சியாளர்கள். ஏற்கனவே கனடிய வெளிவிவகார அமைச்சர் கனடாவுக்கான சிறிலங்காவின் உயர்ஸ்தானிகரைச் சந்தித்து தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற மனிதவுரிமை மீறல் தொடர்பான குற்றத்தை பக்கசார்பற்ற சுதந்திர விசாரணை வேண்டுமெனவும், தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வினை கொண்டுவரவேண்டும் எனவும் கோரிக்கையை வைத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும், கனடிய வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை கடந்த வாரம் நியூயோர்க்கில் சந்தித்துப் பேசினார். இரு தரப்பு உறவுகள் சம்பந்தமான சம்பிரதாயபூர்வமான இச் சந்திப்பில் காமன்வெல்த் அமைப்பு, ஜனநாயகம், மனிதவுரிமைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பேணல் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டதாக கனடிய வெளிவிவகார அமைச்சு அறிவித்தது.
இதன் மூலம் பழமை தழுவும் கட்சியின் தலைமையில் இயங்கும் கனடிய அரசின் ஈழத்தமிழர் தொடர்பான புதிய கொள்கை மாற்றத்தை காணக்கூடியதாக உள்ளது எனத் தெரிவிக்கிறார்கள் அரசியல் அவதானிகள்.
கனடியப் பாராளுமன்றத்தில் கொலைக்களம்
பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட சிறிலங்காவின் கொலைக்களம் காணொளி செப்டம்பர் 28-ஆம் நாள் கனடிய பாராளுமன்ற கட்டிட தொகுதியில் வைத்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஏற்பாட்டில் கான்பிக்க்பட்டது. இதனை எப்படியேனும் தடுத்துவிட வேண்டுமென்கிற இறுமாப்புடன் செயற்பட்டது ஒட்டாவாவில் அமைந்துள்ள சிறிலங்காவின் தூதுவராலயம். தனக்கு விசுமாசமாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை நாடியது சிறிலங்காவின் தூதுவராலயம். இதனால் எவ்வித பயனும் சிறிலங்காவின் தூதுவராலயத்திற்கு கிடைக்கவில்லை.
கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் பழமை தழுவும் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிரவுண் முன்னின்று உழைக்க, அவருடன் இணைந்து எதிர்க்கட்சியான புதிய சனநாயக் கட்சி சார்பில் அதன் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனும் மற்றும் லிபரல் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்கேயும் குறித்த காணொளி காண்பிப்பு நிகழ்வை தொகுத்து வழங்கினார்கள்.
மாலை 6 மணிக்கு ஆரம்பமான குறித்த ஒளியிடும் நிகழ்ச்சி இரவு 9.05 வரை நீடித்தது. இந் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் சிறிலங்கா பற்றிய உண்மை முகத்தை தாங்கள் கண்ணுற்றதாகத் தெரிவித்துச் சென்றனர் என்று கூறுகிறார்கள் ஒருங்கிணைப்பாளர்கள்.
குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைத்துப் பேசிய மனிதவுரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான துணை இயக்குனர் எலைன் பியர்சன், “சிறிலங்கா தொடர்ச்சியாக காலத்திற்கு காலம் மேற்கொண்டு வரும் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதாக சர்வதேசத்திற்கு காட்டும் வகையில், உள்ளக விசாரணைக் குழுக்கள் பலவற்றை இதுவரை அமைத்துள்ளதென்றும், ஆனால் அந்தக் குழுக்களில் ஒன்று கூட முழுமையாக விசாரணைகளை மேற்கொண்டதான வரலாறு இல்லையென்றும், எனவே இந்த யுத்தக் குற்ற மீறல்கள் குறித்து நியாயமான சர்வதேச விசாரணை தேவை எனத் தெரிவித்தார்.
பழமை தழுவும் கட்சியின் சார்பில் இந்த நிகழ்வை பாராளுமன்றத்தில் நடத்துவதற்கு முன்னின்று செயற்பட்ட பற்றிக் பிரவுண் உரையாற்றுகையில் தான் இந்த நிகழ்வை நடத்தினால் தன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அளவிற்கு மிரட்டல் விடுக்கப்பட்ட போதும் தான் அதனைக் கருத்திலெடுக்காமல் இந்த நிகழ்வை நடத்தியதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்துப் பேசிய லிபரல் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்கே சிறிலங்காவில் தமிழர்களிற்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றிய உண்மைகளை தான் தற்போது உணர்ந்து கொண்டதாகவும் அதற்காகத் தான் தொடர்ந்து உழைக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் பேசிய ராதிகா சிற்சபைஈசன் பாராளுமன்ற உறுப்பினர்கள் பார்க்கும் இந்தக் கொலைக்களம் தனது உறவினர்களிற்கு, தனது உற்றாரிற்கு, தனது நண்பர்களிற்கு நேரடியாக நடந்த ஒன்று என்றும் இது தன்னை மிகவும் பாதித்த ஒரு விடயம் என்றும் இதற்காக கனடாவின் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கனடிய அரசியல் வட்டாரத்தில் இடம்பெற்றுவரும் திடீர் மாற்றம் சிறிலங்கா அரசிற்கு திகைப்பை ஏற்படுத்தியுள்ளதென்றால் மிகையாகாது.
அடுத்து வரவிருக்கும் வாரங்களில் ஈழத்தமிழர் தொடர்பில் கனடிய அரசு பல்வேறுபட்ட நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறது என்று கூறுகிறார்கள் சில அரசியல் அவதானிகள். தமிழர்களின் அமோக ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களைக் கனடிய அரசு பிரதிநிதிகள் எதிர்வரும் காலங்களில் சந்திக்கும் சந்தர்ப்பம் அதிகளவில் உள்ளது என்று அறியப்படுகிறது.
எது என்னவாயினும், பழமை தழுவும் கட்சி தனது கடந்த காலத் தவறை உணர்ந்து இப்போதாவது தமிழர்கள் மீது அக்கறை காட்ட ஆரம்பித்துள்ளது உலகத் தமிழர்களுக்கு குறிப்பாக மூன்று லட்சத்திற்கும் அதிகமான கனடியத் தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனலை நிதிஸ் ச. குமாரன்
nithiskumaaran@yahoo.com
No comments:
Post a Comment