மன்னார் மூர்வீதி கிராம சேவகப் பிரிவில் நேற்று முன் தினம் 7 வயதுடைய செபஸ்தியான் அபிஷேக் எனும் சிறுவன் ஒருவன் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழக்க நேரிட்டது. பள்ளிமுனை 50 வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் இச் சிறுவனின் தகப்பன் மன்னார் சேவா லங்கா மன்றத்தின் காவலாளியாக கடமையாற்றுபவர் என அறியப்படுகிறது.
பாடசாலை முடிந்து தந்தையரோடு அலுவலகத்தில் வந்து நின்ற இச் சிறுவன் மிக்சர் வாங்க கடைக்குச் சென்ற சமயத்திலேயே விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளான். மன்னார் மாவட்ட பிரபல வைத்தியரும், முன்னாள் சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றியவருமான டாக்டர் கதிர்காமநாதன் என்பவரின் கவலையீன வாகனச்செலுத்தல் காரணமாகவே இவ்விபத்து நேரிட்டுள்ளது எனவும் மேலும் அறியப்படுகிறது.
மூர்வீதிப் பகுதியில் உள்ள தங்கு விடுதி ஒன்றில் இந்தியாவிலிருந்து வந்திருந்த ஒரு சாமியாரை சந்திக்க அவசரமாக அவர் புறப்பட்ட வேளை தனது பிக்கப் ரக வாகனத்தை பின்னோக்கி செலுத்தும் போது பின்னால் வந்த இச் சிறுவன் மீது மோதியுள்ளது அவரது வாகனம். குறிப்பாக ரிவர்ஸ் கியர் போட்டு வாகனத்தை பின் நோக்கி நகர்த்தும்போது மெதுவாக நகர்த்துவது வழக்கம் ஆனால் இவர் அவசரமாகவும் வேகமாகவும் வாகனத்தை பின் நோக்கி நகர்த்தியுள்ளார்.
விபத்துக்குள்ளான சிறுவனை உடனடியாக தனது வாகனத்தில் ஏற்றி தான் வைத்தியசாலை கொண்டுசென்றதாகவும் ஆனால் அவன் வலிப்பு வந்து இறந்துவிட்டதாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளமை மிகவும் கேவலமானவிடையம் ஆகும். சிறுவன் விபத்தில் இறக்கவில்லை வலிப்பில் இறந்ததாகக் கூறுவதை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஊடகங்களுக்கு கதைகள் எட்டியதை தொடர்ந்து நிலைமைகள் சற்று கடினமானதையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞனின் பெற்றோருக்கு பணமும் வீடொன்றும் கட்டித் தருவதாக கூறி சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முற்பட்டுள்ளதாக அறியவருகின்றது. ஏழைகளான சிறுவனின் பெற்றோர் வைத்தியரின் இவ்வேண்டுதலுக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.
அதாவது விபத்து நடந்தது என்னமோ உண்மைதான் வைத்தியர் சிறுவனைக் கொண்றுவிட்டு வலிப்பில் தான் சிறுவன் இறந்தார் என்று கூறுவதும், பெற்றோரை வளைத்துப் பிடிப்பதும் ஒரு குற்றச்செயலாகவே கருதப்படுகிறது. ஆனால் இன்று பாதிக்கப்பட்ட சிறுவனுக்காக நீதிகேட்டு வாதாடுவதற்கு ஒரு வக்கீல்கள் கூட முன்வரவில்லை. காரணம் சிறுவன் வறுமைக் கோட்டின் கீழுள்ள குடும்பத்தை சேர்ந்தவன் என்பதாகும். கொல்லப்பட்ட சிறுவனுக்கு யார் நீதி வழங்குவது? தமிழர் தாயகப் பகுதிகளில் என்ன தான் நடக்கிறது? மக்களே நீங்கள் தான் சொல்லவேண்டும்! இதற்கான நீதியை!
அதிர்வு
No comments:
Post a Comment