எவ்வித வருமானமும் இன்றிய நிலையிலிருக்கும் 80 வயதிற்கு மேற்பட்டோருக்கு தாபரிப்பு பணத்தை வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்தார்.
அபிவிருத்தியடைந்த நாடுகளில் முதியவர்களுக்கு தாபரிப்பு பணம் வழங்கப்படுவதைப் போன்று இலங்கையிலும் இத்திட்டத்தை விரைவில் அமுல்படுத்த அரசாங்கம் திடசங்கற்பம் கொண்டுள்ளது. தற்போது நாட்டில் 80 வயதிற்கு மேற்பட்டோர் 2 இலட்சத்து 6 ஆயிரம் பேர் இருக்கின்றனர்.
இவர்களுக்கு மாதாந்தம் தாபரிப்பு பணத்தை வழங்குவதற்காக அரசாங்கம் வருடந்தோறும் 750 மில்லியன் ரூபாவினை ஒதுக்க வேண்டியிருப்பதாகவும் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா கூறினார்.
ஒக்டோபர் முதலாம் திகதி தேசிய முதியோர் தினமாகும். இதன் தேசிய நிகழ்வு பத்தரமுல்லையிலுள்ள ஜனகலா மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்று கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிகழ்வில் அமைச்சர் மேலும் உரை யாற்றுகையில்,
எமது நாட்டில் கல்வி, சுகாதாரம் போன்று இலவசமாக பல சேவைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக அரசாங்கம் வருடந்தோறும் பாரிய நிதியை ஒதுக்கி யுள்ளது. அந்த வகையில் மேற்குறிப்பிட்ட 80 வயதிற்கு மேற்பட்டோருக்கு தாபரிப்பு பணத்தை வழங்கவும் அரசாங்கம் தம்மாலான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
இத்திட்டம் பின்னர் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் 60 வயதை நிரம்பியோரென பின்னர் விஸ்தரிக்கப்படும். 70 வயதையடைந்தோர்க்கு தாபரிப்பு பணம் வழங்குவதாயின் வருடாந்தம் 100 பில்லியன் ரூபாவும் 60 வயதையடைந் தோர்க்கு வருடாந்தம் 300 பில்லியன் ரூபாவும் அரசாங்கத்துக்கு தேவைப்படுகிறது.
இளைஞர்கள் எப்போதும் வயதான வர்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது மூத்த சகோதரனான சமல் ராஜ பக்ஷவிற்கு வெற்றிலைக் கொடுத்து காலில் விழுந்து வணங்கிய பின்னர் தான் எந்தவொரு நற்காரியத்தையும் முன்னெடுப்பார். எமது மூத்தோருக்கு மரியாதை செலுத்த வேண்டியது எமது கடமை. அப்போது தான் அவர்களுடைய ஆசி எப்போதும் எமக்கு கிட்டும். தாம் எமது திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும். எதிர்காலங்களில் பிள்ளைகள், தமது வயதான பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டுச் செல்ல தான் அமைச்சரென்று வகையில் இடமளிக்க மாட்டேன்.
வயதான தாய் தந்தையரே எங்களை நாடி நீங்கள் வரத் தேவையில்லை. உங்களை நாடி நாம் வருவோம். உங்கள் தேவைகளை நாம் பூர்த்தி செய்வோமெனவும் அமைச்சர் கூறினார்.
ஹெல்ப் ஏஜ் ஸ்ரீலங்கா மற்றும் முதியோர் செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதியமைச்சர் சந்திரஸ்ரீ சூரியரச்சி, செயலாளர் ஆர். எம். எஸ். ரத்னாயக்க, முதியோர் செயலகத்தின் பணிப்பாளர் திருமதி கிருஷ்ணமூர்த்தி, ஹெல்ப் ரஜ் ஸ்ரீ லங்கா தலைவர் தேசபந்து திலக் டி. சொஸ்சா, வைத்திய நிபுணர் லலித் விஜயரத்ன, உலக சுகாதார அமைப்பின் வதிவிடப் பிரதிநிதி டாக்டர் மேத்தா உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.
No comments:
Post a Comment