இலங்கை கடற்பரப்பில் பாரிய எரிவாயுப் படுக்கை இருப்பதை அகழ்வாராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்திருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று கண்டியில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
உள்ளூராட்சி சபை தேர்தலின் நிமித்தம் கண்டி மாநகர சபை ஊழியர்களுடனான சந்திப்பு ஜனாதிபதியின் கண்டியிலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்றுக் காலையில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்து தெரிவிக்கையில் இன்று நான் இந்த புனித நகருக்கு வருவதற்கு தயாராகும் காலை வேளையிலேயே நாட்டின் சுபீட்சத்திற்கும், மறுமலர்ச்சிக்கும் பாரிய பங்களிப்பு செய்யக்கூடிய நல்லதொரு தகவல் எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அதுதான் இலங்கை கடற்படுக்கையில் பாரிய எரிவாயு படிவு இருக்கின்றது என்ற தகவலாகும்.
எமது கடற்பரப்பில் எண்ணெய் அகழ்வு தொடர்பான நடவடிக்கைகள் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. அச்சமயம், ‘இந்நடவடிக்கைகள் தொடர்பாக நல்ல தகவல்கள் கிடைக்குமாயின், அவை தொடர்பாக ஒரு வார காலத்திற்குள் தமக்கு அறியத் தருமாறு அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள குழுவினருக்கு ஆலோசனை வழங்கி இருந்தேன். அதற்கேற்பவே இந்த நல்ல செய்தி நேற்றுக் காலையில் எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இதனை தலதா மாளிகை அமைந்திருக்கும் புனித பூமியிலிருந்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றேன்.
அதேநேரம் எண்ணெய் அகழ்வு தொடர்பான நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. அந்த அடிப்படையில் இலங்கையில் எண்ணெய் படிவு இருக்கும் நல்ல செய்தியும் விரைவில் கிடைக்கப்பெறும் என நான் முழுமையாக நம்புகின்றேன். அத்தோடு இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகளும் விரைவில் ஆரம்பமாகும் என்றும் அவர் அறிவித்தார்.
இந்நிகழ்வில், ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில், கண்டியானது தலதா மாளிகை அமைவுற்றிருக்கும் வரலாற்று புகழ்மிக்க நகர். இருந்தும் இந்நகரின் கழிவுப் பொருட்கள் முறையாக அகற்றப்படாதுள்ளன. இதனால் நகரில் துர்நாற்றம் வீசுகின்றது. நான் கண்டிக்கு வரும் சந்தர்ப்பங்களில் குளத்தைச் சூழ நடந்து உடற்பயிற்சியில் ஈடுபவது வழமை. இச்சமயம் சில இடங்களில் ஓடிய படிதான் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டியுள்ளது. அந்தளவுக்கு நகரில் கழிவுப் பொருட்கள் நாற்றம் வீசுகின்றது.
இந்நகரில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய மூவின மக்களும் வாழுகின்றனர். இங்கு உல்லாசப் பயணிகள் பலர் வந்து செல்கின்றார்கள். ஆகவே இந்நகரை துர்நாற்றமின்றி அழகாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு மக்களுடையது. அதற்காக மக்கள் பங்களிப்புச் செய்ய வேண்டும்.
கண்டி, மாநகரிலுள்ள நடைபாதை வியாபாரிகள் முகம் கொடுத்துள்ள பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு நட வடிக்கை எடுத்திருக்கின்றேன். கொழும்பு மாநகரிலுள்ள நடைபாதை வியாபாரிகள் முகம் கொடுத்த பிரச்சினைகள் தீர்க்கப் பட்டுள்ளன. அவர்கள் இப்போது இரவு பகலாக வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதேவேளை சேரிப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம் படுத்துவதற்கும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அவர்களுக்கென மாடி வீட்டுத் திட்டங்களை அமைத்து நிரந்தர வீடுகளை வழங்கவுள்ளோம். கொழும்பில் சேரிகளில் வாழும் மக்களுக்கு நிரந்தரமாக வீடுகளை வழங்குவோமே யொழிய அவர்களை வேறு எங்கும் தூக்கி வீசி விடமாட்டோம். கொழும்பு மாநகரில் தமிழ்நாடு, சோமாலியா என்ற பெயர்களில் எல்லாம் சேரிப்புறங்கள் உள்ளன. அப்படியான இடங்களில் மக்கள் நெருக்கடியான வாழ்வை மேற் கொள்ள வேண்டுமா? அவர்களது வாழ் வில் மறுமலர்ச்சி ஏற்படக் கூடாதா? நாம் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு தான் செயற்படுகின்றோம். வதந்திகளை நம்பாதீர்கள். கண்டியை உலகின் சிறந்த தாகக் கட்டியெழுப்ப ஐ.ம.சு.மு யை அமோக வெற்றிபெறச் செய்து ஒத்துழைப்பு நல் குங்கள் என்றார். இந்நிகழ்வில் பிரதமர் தி.மு.ஜயரத்ன, அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே, ஜனக பண்டார தென்னகோன், முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
No comments:
Post a Comment