பிரித்தானியாவின் நிழல் வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் அலெக்சாண்டர் (Douglas Alexander) இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்று கோரியுள்ளார். 2009 ஆம் ஆண்டு இறுதிக்காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற போரின் போது, இலங்கைப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச ரீதியாக ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவேண்டடும் என்று அவர் கோரியுள்ளார்.
கடந்த 28 ஆம் திகதியன்று தொழில்கட்சிக்கான தமிழர்களின் மாநாடு நடத்தப்பட்டது.
இதன்போது கருத்துரைத்த டக்ளஸ் அலெக்சாண்டர், இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருவதாக கூறப்படும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள், சுதந்திரமாகவும், சாட்சிபாதுகாப்புக்காகவும் இடம்பெறவேண்டுமானால் அது, சர்வதேச ஆணைக்குழுவின் முன்னால் இடம்பெறவேண்டும் என்று வலியுறுத்தினார்.
இலங்கையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளில் தலையிடுவதாக அது அமையாது.
எனினும் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு, தமது பணிகளை சர்வதேச ஆணைக்குழுவின் பங்களிப்புடன் மேற்கொள்ளவேண்டும் என்றே தாம் வலியுறுத்துவதாக டக்ளஸ் அலெக்சாண்டர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் 50 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டமை தொடர்பில் கருத்துரைத்த அவர், குறித்த 50 பேரும் இலங்கையில் சித்திரவதைக்கு உட்படு;த்தப்படமாட்டார்கள் என்பதற்கான உறுதியை பிரித்தானிய அரசாங்கம் பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தொடர்;ந்தும் ஆட்கள் காணாமல் போகும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
இடம்பெயர்ந்தோரை உரிய முறையில் இன்னும் இலங்கை அரசாங்கம் குடியமர்த்தவில்லை.
பிரித்தானியாவில் இயங்கும் சிறந்த ஊடகத்துறை காரணமாக செனல் 4 காணொளி மூலம் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான தகவல்கள் வெளிக்கொண்;டு வரப்பட்டன.
இந்தநிலையில் பிரித்தானிய அரசாங்கம் இலங்கையில் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்படவும் சமாதானம் ஏற்படுத்தப்படவும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் டக்ளஸ் அலெக்சாண்டர் கேட்டுக்கொண்டார்


No comments:
Post a Comment