கடந்த 1990 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக எம்மால் நடாத்தப்பட்டு வரும் தேசிய நினைவெழுச்சி நாளை இம்முறையும் உணர்வு பூர்வமாக நடாத்துவதற்கான ஏற்பாடுகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். அதற்காக வழமையான பிரித்தானியக் "கிளைச்" செயற்பாட்டாளர்கள் மிகத் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர். ஆண்டாண்டு தோறும் மக்களின் உணர்வு பூர்வமான பங்களிப்பு அதிகரித்து வந்ததால் அதற்கேற்றவாறு நாம் மண்டபங்களை மாற்றி வந்தோம். கடந்த நான்கு ஆண்டுகளாக எக்செல் மண்டபத்தில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் உணர்வு பூர்வமான பங்களிப்போடு மிகப் பிரமாண்டமான முறையில் தேசிய நினைவெழுச்சி நாளை நடாத்தினோம்.
நாம் வழக்கம் போல இம்முறையும் எக்செல் மண்டபத்தில் நினைவெழுச்சி நாளை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட போது அம்மண்டபம் பிரித்தானியாவின் மிகப் பெரிய நிறுவனம் ஒன்றினால் நவம்பர் 24- 27 வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதை அறிந்தோம். எக்செல் மண்டபத்திலுள்ள சிறிய பகுதி எம் மக்களை உள்ளடக்கப் போதுமானதாக இல்லாததால் நாம் அம் மண்டபத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதை எமது உறவுகளுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம். எனினும் நினைவெழுச்சி நாள் வழமைபோல் எம்மால் உணர்வு பூர்வமாக நடாத்தப்படும் என்பதுடன் மண்டபம் தொடர்பான விபரங்கள் உரிய நேரத்தில் வழமை போன்று எம்மால் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பிரித்தானிய தேசிய நினைவெழுச்சி நாளை குழப்பும் வகையில் மேற்படி குழுவினர் எக்செல் மண்டபத்தில் வழமைபோல் நிகழ்வு நடைபெறுமென சில ஊடகங்கள் ஊடாகவும் துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் நேரடியாகவும் மக்கள் மத்தியில் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். எக்செல் மண்படத்தில் நடாத்தப்படுவதாகக் கூறப்படும் நினைவெழுச்சி நாள் எம்மால் நடாத்தப்படவில்லை என்பதையும் அவர்களால் விநியோகிக்கப்படும் பற்றுச் சீட்டுக்கும் எமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதையும் எமது உறவுகளுக்கு
அறியத் தருகின்றோம்.
கடந்த சில வருடங்களாக எம்முடன் இணைந்து செயற்பட்டு வந்த ஒரு சிலர் தற்போது மேற்படி குழுவினருடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். இவர்களே சில ஊடகங்களில் தோன்றி பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். எனவே இந்தப் பொய்ப் பிரச்சாரங்களில் எமது உறவுகள் அவதானமாக இருக்குமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம். எமது பிரித்தானியக் கிளையின் வழமையான செயற்பாட்டாளர்களே இம்முறை எம்மால் நடாத்தப்படும் தேசிய நினைவெழுச்சி நாள் தொடர்பாக உங்களிடம் வருவார்கள். அவர்களுக்கு வழமையாக நீங்கள் வழங்கும் சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு நாம் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம். எமது மக்களின் ஒற்றுமையையும் பலத்தையும் எமது விடுதலையையும் சுக்குநூறாக உடைக்க முயலும் சிறீலங்கா அரசாங்கத்தின் நோக்கத்திற்கு செயல்வடிவம் கொடுக்க முனையும் குழுவினரோடு ஒரு போதும் ஒற்றுமையாக முடியாது என்பதை எமது உறவுகள் கவனத்தில் எடுக்க வேண்டும். நாட்டிலே எத்தனையோ துரோகங்கள் நிகழ்ந்தேறிய நிலையில் குறிப்பாக முள்ளிவாய்க்காலின் பின்னர் மிக அவதானமாக நாம் இருந்தாக வேண்டும்.
பிழையானவர்களின் வழி நடத்தலிலோ அவர்களுடன் சேர்ந்தோ இயங்கும் வரலாற்று தவறை நாம் இழைத்து விடக் கூடாது. தற்காலிகமான பின்னடைவுகளை தரக் கூடிய இவர்கள் வரலாற்றில் காணாமல் போவார்கள். உன்னத இலட்சியத்துக்காக களமாடிய மாவீரச் செல்வங்களுக்கு இவ்வாறான பிழையான சக்திகளுடன் இணைந்து நினைவேந்தல் செய்வதை எம்மால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதையும் அந்த மாவீரத் தெய்வங்களே இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதையும் நாம் நினைவூட்ட விரும்புகின்றோம். இக்குழுவினரின் செயற்பாடுகள் பிரித்தானியா மட்டுமன்றி எமது உறவுகள் வாழும் புலம்பெயர் நாடுகள் அனைத்திலும் இடம்பெற்றே வருகின்றன. அராஜகங்களும் மிரட்டல்களும் காட்டுமிராண்டித் தனங்களும் அரங்கேறத் தொடங்கி விட்டன.
எனவே புலம்பெயர் மக்கள் இக்குழுவினர் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் நாம் வேண்டிக் கொள்கின்றோம். பிரித்தானியா மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் தொடர்ச்சியாக இடம் பெற்றது போன்று இம்முறையும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் நடைபெறும் என்பதனையும் அதற்கு எப்போதும் போல அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டுமெனவும் உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம். கடந்த 19ஆம் நாளன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்களின் ஏற்பாட்டில் ஜெனீவாவில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் பெருமளவில் பங்கு பற்றிய அனைத்து பிரித்தானிய உறவுகளுக்கும் இச்சந்தர்ப்பத்தில் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். உண்மையான தமிழ் தேசிய நினைவேந்தல் அகவத்தோடு இணைந்து தேசிய நினைவெழுச்சி நாளை உணர்வு பூர்வமாக நடாத்துவதற்கு உறுதி பூணுவோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.


No comments:
Post a Comment