
யாழ்க்குடா நாட்டுக்கு அது புதிய காட்சியாக இருந்தது. ஒவ்வொரு ஊர்களின் ஊடாகவும்,கிராமங்களின் வழியாகவும்,நகரங்களின் ஊடாகவும் அந்த வீரனின் இறுதிஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டிருக்கிறது. வீதிகளின் இருமருங்கிலும் மக்கள் வரிசையாக நின்று தமது தோட்டங்களிலும்,முற்றங்களிலும் பூத்திருந்த மலர்களை கொண்டுவந்து அவனின் உடல்தாங்கிய அந்த ஊர்திக்கு முன்பாக தூவி கண்ணீர்மல்க நின்றனர்.அதற்குமுன்னர் ஒருபோதும் இப்படியான இறுதிஊர்வல நிகழ்வு உணர்வுடனும்,லட்சோபலட்சம் மக்களின் வழியனுப்பலுடனும் நடந்ததே இல்லை. யாழ்மண்ணில் நிலைகொண்டிருந்த ராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு இருப்பதால் மக்கள் எந்தவித பயமுமின்றி தமது இதயத்துள் இருக்கும் விடுதலை வீரனுக்கு தமது இறுதி மரியாதையை செலுத்தியபடி இருந்தனர். இரவுபகலாக அந்த ஊர்தி யாழ்மண்ணின் அனைத்து இடங்களுக்கூடாகவும் நகர்ந்தது.
எமது மண்ணில் இருந்து சிங்களராணுவத்தினர் விரட்டியடிக்கப்பட வேண்டும்.எமது மக்கள் அச்சமின்றிய வாழ்வு ஒன்று வாழவேண்டும் என்ற கனவு கண்ட அந்த வீரன் அந்த பேழைக்குள் இருந்தபடியே அவற்றை பார்த்து உண்மையில் மனம் நிறைந்திருப்பான். யாழ்மண் விடுதலைப்போராளிகளின் கைகளுக்குள் வருவதற்காக ஓய்வற்ற உழைப்பும் திறனும் காட்டிய அந்த வீரன் லெப்.கேணல் விக்டரின் இறுதி ஊர்வலம்தான் அது. ஒஸ்கார்..ஒஸ்கார்..என்ற சங்கேத அழைப்பிற்குரிய அந்த பெருவீரன் தாயகமண்ணில் விதையாகி கால்நூற்றாண்டுகள் கடந்துபோய்விட்டன. விக்டர், இவனை எப்படி அடையாளப்படுத்துவது.அச்சம்கொஞ்சமும் இல்லாத பெருவீரன் என்றா?பழகும்போது குழந்தையை போல பழகும் மனதுள்ளவன் என்றா? களங்களில் நெருப்புகனரும் விழிகளுடன் உத்தரவிடும் ஆளுமைமிக்க தளபதி என்றா?....எப்படியும் அவனை அடையாளப்படுத்தலாம்.அத்தனை ஆளுமைகளும் அவனிடத்தில் இருந்தன.
எந்த விடுதலைப்போராட்டம் என்றாலும் புரட்சிஅமைப்பு என்றாலும் அதில் இணைபவர்கள் இரண்டு வழிகளில் இணைவார்கள்.அடக்குமுறையும்,ஒடுக்குமறையும் மெல்லியதாக முளைவிடும் பொழுதிலேயே அதனை நிராகரித்து அதனில் இருந்து விடுதலைபெற என்று ஆரம்பித்திலேயே அமைப்பில் இணையும் வழி ஒன்று. அடக்குமுறையும்,ஒடுக்குமுறையும் உச்சமாகி கொடிய கொலைவெறியாட்டத்தினூடாக உணர்வுபெற்று விடுதலைஅமைப்பில் இணையும் வழி அடுத்தது. 1983கறுப்புயூலை இனப்படுகொலைகளுக்கு பின்னர் விடுதலைஅமைப்புகள் வீச்சுப்பெறவும்,வீக்கம்பெறவும் ஆரம்பிக்க முன்னரே 1983க்கு முன்னரேயே விடுதலைப் புலிகள்அமைப்பில் இணைந்தவன் விக்டர்.

1981ன் இறுதிப்பகுதியில் விக்டரின் விடுதலைப்புலிகளுடனான தொடர்பு ஆரம்பிக்கிறது.ஆரம்பபொழுதுகளில் அமைப்புக்குள் உள்வாங்குவதற்கான அனைத்து கவனிப்புகளிலும் விக்டரின் உறுதி தலைமையால் கவனிக்கப்பட்டு பயிற்சிக்காக முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் அமைந்திருந்த முகாம் ஒன்றுக்கு அனுப்பபடுகின்றான். அங்கே லிங்கம், பொட்டு, பசீர், ரஞ்சன், கணேஸ், விக்டர், ஆனந்த் ஆகியோரும் இன்னும்சிலருக்கும் தலைவர் நேரடியாகவே பயிற்சிகளை ஆரம்பிக்கிறார்.பயிற்சிமுகாமின் உணவுப்பிரிவில் மூத்தஉறுப்பினர்களான கிட்டுவும்,ரஞ்சன்லாலாவும் இருக்கின்றனர்.உடற்பயிற்சியாளராக செல்லக்கிளிஅம்மான் இருக்கிறார். (விடுதலைப்புலிகளின் புகைப்படங்களில் மிகவும் புகழ்பெற்றதான செல்லக்கிளிஅம்மான் ஒரு மரத்தின் கொப்புகளுக்குள் உபஇயந்திர துப்பாக்கியுடன் குறிபார்த்தபடி நிற்கும் படம் இந்த பயிற்சியின்போதுதான் எடுக்கப்பட்டது)
இந்த பயிற்சிமுகாமில் பயிற்சிஎடுத்த அதிகமானவர்கள் உறுதியிலும்,விடுதலைப் போராட்டத்தின் ஏற்ற இறக்கங்கள் பற்றிய தெளிவிலும் தமது இறுதிக்கணம்வரைக்கும் மலையை நிகர்த்த உருக்கு உறுதியுடன் நின்றதற்கு காரணம் தலைவரின் நேரடி பயிற்சி,பயிற்சியின் பின்னான மாலைப்பொழுதுகளில் அமைப்பின் மூத்த உறுப்பினர்களான செல்லக்கிளி அண்ணா, சீலன், கிட்டு, ரஞ்சன், புலேந்திரன் ஆகியோர் உட்பட மற்றும்சிலரும் இணைந்த அனுபவபங்கீடுகள். இவைகளேதான் விக்டரையும் ஒரு உன்னதமான போராளியாக,மிகப்பெரும் வீரனாக வரித்தெடுத்த காரணிகளாகும். சகபோராளிகள் அனைவர்மீதும் அளவற்ற அன்பும், பாசமும் காட்டும் ஒரு பெரிய குழந்தையாக அவன்இருந்தான்.அதிலும் பயிற்சிக்கு முன்னரும் பயிற்சிக்கு பின்னரும் அவன் இருந்த இளவாலைப்பகுதியில் அமைந்திருந்த வீட்டில் அவனுடன் இருந்தோர் இன்றும்கூட அவனின் நினைவுகளையும் செயல்களையும் ஒருவகையான பெருமிதத்துடனும் ஈர்ப்புடனும் கண்களில் ஒளிபொங்க நினைவுகூருவதை பார்க்கலாம்.
விக்டரின் அஞ்சாமையையும்,சீறிப்பாயும் துப்பாக்கி சன்னங்களுக்கு மத்தியிலும் நிதானமாக நகரும் அவனின் வேகத்தையும் அந்த நேரம் இருந்த போராளிகளுக்கு அடையாளம் காட்டியது திருநெல்லிவேலி தபாற்பெட்டி சந்தியில் 1983யூலை 23ல் சிங்களராணுவத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தாக்குதல்ஆகும். மிகவும் செறிவான வாகனப்போக்குவரத்தும்,சிங்கள காவல்துறை,சிங்கள ராணுவ நடமாட்டம் என்பன அடிக்கடி நிகழும் திருநெல்வேலிவீதியில் இரவில் வீதியை குழிதோண்டி அதில் சக்கையை வைத்து எக்ஸ்புளோடருக்கு தொடர்பு கொடுக்கும் வேலையை செல்லிக்கிளிஅம்மான்,அப்பையாஅண்ணை ஆகியோருடன் இணைந்து செய்துமுடித்தவன் விக்டர். விக்டர் அமைப்பில் இணைந்த பிறகு மன்னார்பகுதியில் நிகழ்ந்த தாக்குதல்களில் அநேகமாக அனைத்திலும் விக்டரின் நேரடி பங்களிப்பும் விக்டரின் எம்16 கிறனைற் செலுத்தியின் வெடிப்பும் இருந்தே இருக்கும்.மன்னார் பொலீஸ்நிலையம் மீதான தாக்குதலில் விக்டருடன் குமரப்பா போன்றோர் இணைந்திருந்தாலும்கூட அந்த தாக்தலுக்கான திட்டமிடல்,ஒருங்கிணைப்பு என அனைத்தையும் அற்புதமாக கையாண்டவன் விக்டர்.
வெறும் தாக்குதல்களை மட்டும் நடாத்திக்கொண்டிருக்காமல் சிங்களத்திடம் இருந்து விடுவிக்கப்பட்ட மன்னார் பிரதேசத்தின் பகுதிகளில் மக்கள்அமைப்புகளை உருவாக்குவதிலும், மக்கள் மத்தியில் விடுதலைப்போராட்;டம் பற்றி தெளிவையும்,அரசியல் அறிவையும் ஊட்டுவதிலும் விக்டரின் செயற்பாடுகள் மிகவும் ஆழமாக அமைந்திருந்தன.அவன் மக்களால் ஆழமாக நேசிக்கப்பட்டதற்கு பின்னால் மக்களுடனான அவனின் ஆத்மார்த்தமான தொடர்பே காரணமாகும். விடுவிக்கப்பட்ட மன்னார் நிலத்தின்பகுதியில் விக்டர்பயிற்சி முகாம்களையும் உருவாக்கி ஏராளமான புதியபோராளிகளை தாய்மண்ணிலேயே உருவாக்குவதிலும் முனைப்புடன் செயற்பட்டவன். விக்டர் தமிழீழவிடுதலைப்போராட்டத்தில் காட்டிய உறுதியும்,தலைமைப்பண்பும்,வீரமும் மிகவிரைவாகவே அவனை விடுதலைப்புலிகள்அமைப்பின் மத்தியகுழு உறுப்பினர் என்ற அதியுச்ச நிர்வாகமையத்துக்குள் உள்வாங்கி கொண்டது.
சிங்களதேசத்தின் ராணுவத்தினரை தமிழீழமண்ணில் இருந்து துரத்தும் நடவடிக்கை தினமும் முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருந்த காலமது.ராணுவம் முகாம்களுக்குள் முடங்கிக்கிடப்பதும், சிலவேளைகளில் முகாம்களைவிட்டு சிறியதொகையாக வெளிவரும் ராணுவத்தினரை உடனடியாக அந்த பகுதிக்கு விரையும் விடுதலைப்புலிப்போராளிகள் விரட்டியடிப்பதும் அன்றாட நிகழ்வுகள் அப்போது. அப்படியான ஒருபொழுதில் 12.10.1986 அன்று அதிகாலையில் அடம்பன்நகருக்குள் ராணுவம் நுழைந்துவிட்டதாக கிடைத்த தகவலை அடுத்து கருக்காய்க்குளத்தினூடாகவும், ஆண்டான்குளபகுதியாலும்,நாயாற்றுவெளிக்குள்ளாக தாமரைக்குளத்தினூடாகவும் அடம்பனுக்குள் விக்டரின் தலைமையில் நுழைந்து விடுதலைப்புலிகள் நடாத்திய தாக்குலில் சிங்களராணுவத்துக்கு துணையாக கெலிகெப்படரும் வந்து தாக்குதலை ஆகாயத்தில் இருந்து நடாத்தியபோதும் வீரமுடன் போரிட்ட அந்த தளபதி எதிரியின் சன்னம் ஒன்று நெஞ்சுக்குள்ளாக புகுந்து சென்றுவிட வீரமரணமடைகிறான்.
ஒருமாமலையின் சரிவாக விக்டரின் மரணம் அமைப்பை உலுக்கியது அந்த பொழுதில்.தலைமை கொடுக்கும் பணியை செயற்படுத்தும் திறனும்,அதனை செயற்படுத்தியே தீரவேண்டும் என்ற இலட்சியஉணர்வும் உடையஒரு பெருவீரன் அவன். விக்டர் மரணித்த அந்த சண்டையில்தான் முதன்முதலாக பெண்கள் அணி தாக்குதலில் நேரடியாக இறக்கப்பட்டனர்.நாயாற்றுவெளிக்குள்ளாக தாமரைக்குளம் கடந்து அடம்பனுக்குள் நுழைந்த சாஜகானின் அணியில் விக்டரின் வழிகாட்டலில்தான் முதலில் பெண்புலிகள் எதிரிக்கு எதிரான சண்டையில் நின்றனர். அதுமட்டுமல்லாமல் அந்த சண்டையில்தான் முதன்முதலாக சிங்களராணுவத்தை செர்ந்த இரண்டுவீரர்கள் உயிருடன் பிடிக்கப்படுகிறார்கள்.2வது லெப்.அஜித் சந்திரசிறீ, கோப்ரல் கே.டபிள்யூ பண்டார ஆகியோரே பிடிக்கப்பட்ட சிங்களராணுவத்தினர்.விக்டர் தாயகமண்ணில் வீழ்ந்துவிட்ட தாக்குதலில்கூட அவன் இன்னொரு அங்கீகாரத்தையும்,விடுதலைப்போராட்டத்துக்கு பாரிய எழுச்சியையும் இந்த ராணுவவீரர்களின் கைதுகள்மூலம் உருவாபக்கிச்சென்றிருந்தான்.
சிங்களதேசத்துடன் தமிழர்தேசம் ஒரு உத்தியோகபூர்வமான கைதிகள் பரிமாற்றத்தைசெய்வதற்கு விக்டரின் அடம்பன்சண்டையில் பிடிக்கப்பட்ட ராணுவத்தினர் காரணமாக இருந்தனர். சிங்களதேசத்தின் பாதுகாப்பு அமைச்சர் அத்துலக் முதலியும்,சிங்களதேசத்தின் முப்படைகளின் தளபதியான சிறில் ரணதுங்கா,பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் நேரடியாக பலாலி சென்று பலாலி வாசலில் வைத்து விடுதலைப்புலிகளான அருணாவையும்,காமினியையும் விடுவித்தனர்.அதற்கு பரிமாற்றமாக அடம்பன்சண்டையில் பிடிக்கப்படவர்களை கிட்டு விடுவித்தார். இப்போது பார்த்தால் இது சிறிய சம்பவமாக தெரியும்.ஆனால் அன்றைய பொழுதில் இது ஏற்படுத்திய எழுச்சியும் மனஉறுதி ஏற்றமும் வார்த்தைகளில் வடிக்கமுடியாதவை. இப்போது இருபத்தைந்து வருடங்களாகி விட்டது. விக்டர் என்ற என்ற அற்புதமான வீரனின் நினைவுகளும்,மாசுமருவற்ற அவனின் உன்னதமான இலட்சிய பற்றும் என்றென்றும் எமது மக்களால் இதயத்தின் ஆழத்திலிருந்து நினைவுகொள்ளப்படும்.
என்றாவது ஒருநாள் விடுதலைப்புலிகள் தலைமை விக்டரின் இதுவரை பதியப்படாத பக்கங்களையும், அவற்றில் தலைமையின் கட்டளையை ஏற்று அவன் செய்ய வீரத்தையும் பதிவுசெய்யும் போது நிச்சயமாக ஒரு உன்னதத்திலும் உன்னதமான வீரனாக அவன் இன்னும் உயர்ந்து தெரிவான்.
ச.ச.முத்து


No comments:
Post a Comment