சிங்கள பேரினவாதத்து கொடூரங்கள் காலகாலமாக தமிழ் பெண்களின் மேல் தனது கொடும் நகங்களை பதித்தே வந்துகொண்டிருந்தது. இவற்றிலிருந்து விடுதலைபெற வேண்டுமானால் ஆயுதம் ஏந்தியே தீரவேண்டும் என்ற வரலாற்று நியதி தமிழீழ பெண்ணினத்துக்கு ஏற்பட்டபொழுதில் எழுந்து வந்தவள்தான் 2ஆம் லெப்.மாலதி.
சிங்கள பேரினவாதம் மட்டும் அல்லாமல் அமைதிப்படை என்ற பெயரில் வந்திறங்கிநின்ற இந்தியப்படைகளும் தமது குரூரமான வக்கிரத்தை இந்திய - விடுதலைப்புலிகள் யுத்தம் ஆரம்பித்த அக்டோபர் 5ம் நாளில் இருந்து தமிழீழ பெண்கள் மீது கட்டவிழ்த்துவிட ஆரம்பித்தனர்.
யுத்தம் ஆரம்பித்த நாட்களில் கொக்குவில் பிரம்படிலேன் பகுதியிலும் அதை அண்டிய பகுதிகளிலும் தனது கனரக வாகனங்களால் தமிழீழ மக்களை அரைத்து நெசித்து முன்னேறிய இந்தியப் படைகள் முன்னேறிய பகுதிகளில் பாலியல் வெறியாட்டங்களை பெண்கள் மீது மிகமோசமாக நிகழ்த்தியபடியே வந்தனர்.
காஸ்மீரிலும், நாகலாந்திலும், மிசோரத்திலும், மணிப்பூரிலும் விடுதலைக்குபோரிட்ட தனது மக்கள் மீதே கொடும் பாலியல் மிலேச்சங்களை நிகழ்த்திய இந்தியப்படை அதையே யாழ்ப்பாணத்திலும் தொடர்ந்தது.
10.10.1987அன்று நள்ளிரவுப்பொழுதில் முன்னேறிவந்த இந்தியராணுவத்தின் கனரக டாங்கி ஒன்று கோப்பாயை அண்மித்தது. காத்துக்கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் பெண்கள் அணி தாக்குதலை தொடங்கியது. உலகின் பெரிய ராணுங்களின் ஒன்றான இந்திய ராணுவத்தையே இடைமறித்து தாக்குகின்றோம் என்ற எந்தவொரு பயமும் இன்றி எமது மண் இது, எமது தாயகம் இது, இங்கு வந்து எமது மக்களை வேட்டையாடவும், குதறியெறியவும் நாம் அனுமதிக்கமாட்டோம் என்ற செய்தியே அந்த பெண்கள்அணியின் துப்பாக்கிகளில் இருந்து புறப்பட்ட ஒவ்வொரு தோட்டாக்களிலும் எதிரிக்கு கொடுக்கப்பட்டது.
எதிரிக்கு மிக அண்மித்து சென்று தாக்குதல் நடாத்திய பொழுதில் 2ம் லெப் மாலதி காயமடைந்து அதன் பின்னர் சயனைட் அருந்தி 10.10.1987அன்று வீரமரணமடைகிறார். அதுவரையில் பெண்கள் பற்றி இலக்கியங்கள் ஊடாகவும், மதநெறிகள் வாயிலாகவும் சமூக ஒழுக்கங்கள் என்ற பெயரிலும் தொடர்ந்து ஊட்டப்பட்டுவந்த அனைத்து மாயக்
கருத்துக்களையும் உடைத்தெறிந்ததாகவே மாலதியின் வீரமரணம் விளங்கியது.
2ஆம் லெப் மாலதி தொடங்கிவைத்த புதிய அத்தியாயம் தமிழ் பெண்கள் மத்தியில் ஆயிரம் கோடி அதிர்வுகளை உருவாக்கி அதிலிருந்தே ஆயிரம் பெண் புலிகள் தோற்றம் பெறலாயினர். போரியலிலும், விடுதலை அரசியலிலும் ஆண்கள்கூட எட்டித்தொடமுடியா உச்சங்களை எல்லாம் தொட்டுநின்ற தமிழீழ பெண் இனத்தின் தொடக்கப்புள்ளியாக மாலதி என்றும் இருப்பார்.
எங்கள் நெஞ்சம் நிறைய உறுதியெடுத்து ஒருகணம் தலை கவிழ்ந்து 2ஆம் லெப் மாலதியின் நினைவுகளை உரமுடன் பதிய வைத்து தொடர்ந்து நடப்போம் விடுதலைப் பாதையில் எந்தவித தளர்வும் இன்றி.
முதற்பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதி நினைவு நாள் (பாடல் இணைப்பு)
No comments:
Post a Comment