திமுக எம்பி கனிமொழி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவுக்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்காது என்று வெளியான செய்திக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் வியப்பு தெரிவித்தனர்.
2ஜி வழக்கில் கனிமொழி மற்றும் சிலருக்கு ஜாமீன் வழங்குவதை சிபிஐ எதிர்க்காது என்று ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்த செய்தி குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் வியப்பு தெரிவித்தனர்.
எனினும் இந்த செய்தி தவறானது என்று உச்சநீதிமன்றத்திடம் சிபிஐ விளக்கமளித்தது. நீதிமன்றத்தில் கனிமொழி உள்ளிட்ட 2ஜி குற்றவாளிகளின் ஜாமீன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதனிடையே 2ஜி வழக்கு தொடர்பாக சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்த கருத்துக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. தொழிலதிபர்கள் சிறையில் அடைத்தால் அது முதலீட்டை பாதிக்கும் என சல்மான் குர்ஷித் தெரிவித்திருந்தார். இந்த செய்தி உண்மையாக இருந்தால் அது எங்களை பாதிக்கச் செய்யும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
சல்மான் குர்ஷித்தின் கருத்து வெளியான ஊடக செய்தியைக் குறிப்பிட்டுப் பேசிய நீதிபதி எச்எல்.தத்தி, எங்களுக்கு குழப்பமாக உள்ளது. தொழிலதிபர்களை சிறையில் அடைப்பதில் உச்சநீதிமன்றம் ஆர்வமாக உள்ளது என்பது போன்ற தோற்றத்தை அமைச்சரின் அறிக்கை உண்டாக்கியுள்ளது. அது எங்களை பாதிக்கச் செய்துள்ளது. அமைச்சர் வெளியிட்ட அறிக்கை சரியா தவறா? இதில் அரசின் நிலையை விளக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.


No comments:
Post a Comment