இருப்பாய் தமிழா நெருப்பாய் - பாடல் மூலம் உலகத் தமிழர்களை சிலிர்த்தெழச் செய்துள்ள இசையமைப்பாளர் டி.இமான், உச்சி தனை முகர்ந்தால் திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புப் பணியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.படத்தின் பாடல்கள் மட்டுமில்லாமல், பின்னணி இசையும் செவிகளில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் அளவுக்கு படத்தை இமான் இசையால் இழைத்திருப்பதாக இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
கூறியதுடன் நில்லாமல், பின்னணி இசைக் கோர்ப்புப் பணி நிறைவடையும் நிலையில், "இசையால் இழைக்கிறார் இமான்" என்று தயாரிப்பாளர்கள் கொடுத்த விளம்பரம், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கவிதை பேசும் விழிகள் முழுக்க கனவுகளோடு பறந்து திரிந்த மட்டக்களப்பு இளம் புறா புனிதவதிக்கும், உணவு மறந்து - உறவு மறந்து தாயகக் கனவுடன் தலைநிமிர்ந்து நடந்த பெண் போராளிகளுக்கும் இடையிலான நட்பும் பாசமும், இந்தப் படத்தைப் பார்க்கும் எவரையும் இளகவைக்கும் என்று நம்பிக்கையோடு கூறும் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் தன் குழுவினரோடு முழு மூச்சாக இறங்கியுள்ளார்.
சத்யராஜ், நாசர், சீமான், சங்கீதா, லட்சுமி ராமகிருஷ்ணன், லாவண்யா, ஈழத்து மைக்கேல் ஜாக்சன் பிரேம்கோபால் - என்று நீளும் நட்சத்திரக் கூட்டத்துக்கு இடையில், புனிதவதியாக நடித்திருக்கும் சிறுமி நீநிகா துருவ நட்சத்திரம் போன்று மின்னுவதாக தமிழ்த் திரையுலகம் இப்போதே பேசத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பாய் தமிழா நெருப்பாய் - பாடலைப் போன்றே இன்னொரு பாடலான "உச்சிதனை முகர்ந்தால் உள்ளங்கால் வரை சிலிர்க்குதடி" பாடலும் இப்போதே பிரபலமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பாடலில் இடம்பெறும் -
"பனிச்சங்கேணி நண்டு வாங்கிவந்து கறியாக்கிக் கடிக்கணும்...
பதுங்கு குழிக்குள்ளும் நிலவொளியில் நான் புத்தகம் படிக்கணும்" என்ற வரிகளை கவிதை மாதிரி படமாக்கியிருப்பதாக திரைப்படக் குழுவினர் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர்.
இந்தமாதம் திரைக்கு வர இருக்கும் உச்சிதனை முகர்ந்தால் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக, இந்தப் படத் தயாரிப்பில் முழுமையாக ஈடுபட்ட நார்வே வாழ் தமிழர்கள் ஸ்டீவன் புஷ்பராஜா, ஸ்ரீபாலசுந்தரம், சிவகணேஷ் தில்லையம்பலம், ரமணன் கந்தையா, விஜயசங்கர் அசோகன் ஆகியோர் சென்னை செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment