முல்லைத்தீவு, கொக்கிளாய்ப் பகுதியில் இன்று ஒரு தொகுதி சிங்களக் குடும்பங்கள் புதிதாகக் குடியேற்றப்படவுள்ளன என்று கரைதுறைப்பற்று உதவி அரச அதிபர் எஸ்.தயானந்தா தெரிவித்தார்.இந்தச் சிங்களக் குடியேற்றம் தொடர்பாக உதவி அரசாங்க அதிபர் தெரிலித்துள்ளதாவது, அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 1960 காலப் பகுதியில் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய்ப் பகுதிகளில் சிங்கள மக்கள் வாழ்ந்தார்கள். இவர்களில் ஒருதொகுதி மக்கள் (37 குடும்பங்கள்) அண்மையில் முகத்துவாரம் பகுதியில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இப்போது மற்றுமொரு தொகுதி மக்கள் மீளக்குடியேற்றப்படவுள்ளனர். இதில் 45 குடும்பங்கள் இன்று புதிதாகக் காணிகள் வழங்கப்பட்டு குடியேற்றப்படவுள்ளன.ஏற்கனவே வெலிஓயா என்ற பிரதேச செயலக பிரிவை புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக அரசால் முல்லைத்தீவு அரச அதிபருக்கு கடிதமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8 கிராம சேவையாளர் பிரிவுகள் உள்ளடங்குகின்றன. அவற்றில் குமுளமுனை, தண்ணிமுறிப்பு, அளம்பில், கருநாட்டுக்கேணி போன்ற கிராமசேவையாளர் பிரிவுகளும் உள்ளடங்குகின்றன. என்றார் கரைத்துறைப்பற்று உதவி அரச அதிபர்.
கொக்கிளாய் மேற்கு, கொக்கிளாய் கிழக்கு, புளியமுனை, கருநாட்டுக்கேணி, முகத்துவாரம், தென்னமரவாடி, முந்திரிகைக்குளம், அக்கரைவெளி, கலியாணபுரம், மாரியாமுனை ஆகிய பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் 1983 ஆம் ஆண்டு அரசின் ஆதரவோடு அந்தப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.இதன்போது அக்கரைவெளி, முந்திரிகைக்குளம், கலியாணபுரம் போன்ற இடங்களில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. எஞ்சியிருந்த தமிழ்ப் பிரதேசங்களான கொக்கிளாய் மேற்கு, கொக்கிளாய் கிழக்கு, புளியமுனை, தென்னமரவாடி ஆகிய கிராமங்கள் சிங்களப் பெயர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு இப்போது சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்படுகின்றன.
இதேவேளை, 28 வருடங்களுக்குப் பின்னர் குறித்த பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் மீள் குடியமர்த்தப்பட்ட போதும் அவர்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றித் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.இந்த நிலையில், ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்கள் இருந்ததாக பொய் ஆதாரங்கள் காட்டி இந்தப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இடம் பெறுகின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது.
No comments:
Post a Comment