சென்னையைச் சேர்ந்த அமைப்பான தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி பிரசாரப்பயணம் கன்னியாகுமரியில் இருந்து இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.இலங்கை போரில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்ததற்காகவும், பச்சிளம் குழந்தைகளையும், பெண்களையும், முதியவர்களையும் படுகொலை செய்ததற்காகவும், மருத்துவமனைகள் மீதும் பள்ளிக்கூடங்கள் மீதும் தொடர்ச்சியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியதற்காகவும்,
உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட இரசாயன குண்டுகள் மூலம் தமிழர்களை கொன்று குவித்ததற்காகவும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரி இந்த பிரச்சார பயணத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த அமைப்பின் நிர்வாகியான புகழேந்தி பிரச்சார பயணத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்த பிரச்சார பயணம் கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், அருமனை, பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி வழியாக திருநெல்வேலி சென்று அங்கிருந்து தூத்துக்குடி செல்கிறது.
முன்னதாக இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசின் அராஜகங்களைக் கண்டித்தும் தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் உறுப்பினர்களாகிய கபிலன், முத்துராசு, செம்மணி ஆகியோர் பேசினர். பிரச்சார பயணத்தையொட்டி பலத்த பொலிஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.


No comments:
Post a Comment