இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குநர் மார்க்கண்டேயன் கூறுகையில், கைது செய்ததற்கான காரணம் தெரியவில்லை என்றும், நள்ளிரவு 11 மணியளவில் இந்த கைது சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். தமிழக மீனவர்களிடம் இருந்து 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரிடம் இருந்து ஒரு படகில் தப்பி வந்த மீனவர் ஒருவர் தகவல் தெரிவித்ததையடுத்து இந்த கைது சம்பவம் அனைவருக்கும் தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட 5 படகுகள் மன்னார் கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் மன்னார் மாவட்ட ஆட்சியர் நந்தினி தினானி தெரிவித்தார்.
—
அவர்களை விடுவிக்க பிரதமர் மன்மோகன் சிங் தலையிட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதன் விவரம்:
தமிழக மீனவர்கள் 23 பேர் மீன்பிடிக்கும்போது தவறுதலாக இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்துவிட்டனர். அவர்களை நேற்று பிற்பகலில் இலங்கை கடற்படைக் கைது செய்து தலைமன்னார் போலீசிடம் ஒப்படைத்துள்ள தகவல் எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
நான் மே மாதம் பதவியேற்ற பின்னர் 4 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கையில் காவலில் வைக்கப்பட்டனர். இதுகுறித்து ஜூன் 7-ம் தேதி உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். இந்த விவகாரத்தை இலங்கை அரசிடம் கொண்டுசென்றிருப்பதாக ஜூன் 15-ம் தேதியிட்ட கடிதத்தில் நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். அவர்கள் ஜூன் 17-ம் தேதி விடுவிக்கப்பட்டுவிட்டனர். இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ராமேஸ்வரம் கடற்கரைக்கு வெகு அருகில் உள்ள சர்வதேச கடல் எல்லையை கடக்கும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்தில் மீனவர்களிடையே பதற்றம் ஏற்படுகிறது.
ஜூன் 14-ம் தேதி நான் உங்களை தில்லியில் சந்தித்திருந்தேன். அப்போது இந்த விவகாரத்தை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுடன் விவாதித்தேன். அதற்கு முன்பு ஜூன் 9-ம் தேதி அவர் கொழும்பு செல்வதற்கு முன்பாகவும் இந்த விவகாரத்தை அவருடன் விவாதித்திருந்தேன்.
தற்போது இலங்கை கடல் எல்லைக்குள் தவறுதலாகச் சென்ற 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 5 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே அவர்களை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்க நீங்கள் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


No comments:
Post a Comment