
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் காரணமாக கனிமொழி எம்.பி கைதாகி இன்றுடன் சரியாக ஒரு மாதம் முடிகிறது.
டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஜாமீனில் விடக்கோரி தாக்கல் செய்த மனு சி.பி.ஐ சிறப்புக் கோர்ட்டிலும், டெல்லி ஐகோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து கனிமொழி எம்.பி கலைஞர் டி.வி.நிர்வாக இயக்குனர் சரத்குமார் இருவரும் கடந்த 10ந் திகதி டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.
அவர்களது மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.சதாசிவம், ஏ.கே.பட்நாயக் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதனால் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சவுகான் தலைமையிலான பெஞ்ச் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று சுப்ரீம் கோர்ட்டில் கனிமொழி, சரத்குமார் இருவரின் மனுக்கள் மீது விசாரணை நடந்தது. கனிமொழி எம்.பி சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், கோர்ட்டு விதிக்கும் எத்தகைய நிபந்தனையையும் ஏற்க கனிமொழி தயாராக உள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு அனைத்துக்கும் அவர் கட்டுப்பட்டு நடப்பார். அவர் தன் மகனை பிரிந்துள்ளார். எனவே கருணை அடிப்படையில் கனிமொழியை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கு சி.பி.ஐ தரப்பில் ஆஜரான வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வாதாடுகையில் கூறியதாவது: கலைஞர் டி.வி.க்கு டி.பி.ரியாலிட்டி நிறுவனம் கொடுத்த ரூ.214 கோடி கடனாக பெறப்பட்டது அல்ல. அது ஊழல் பணம் தான். இது தொடர்பான விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் சட்டவிரோதமாக நடந்த ரூ.214 கோடி பண பரிமாற்றத்துக்கான அசல் ஆவணங்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை.
இந்த சூழ்நிலையில் கனிமொழி விடுதலை செய்தால் அவர் அசல் ஆவணங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை அழித்து விடுவார். எனவே அவரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது. சி.பி.ஐ கோர்ட்டும், டெல்லி ஐகோர்ட்டும் இந்த காரணங்களுக்காக ஏற்கனவே கனிமொழி மனுவை நிராகரித்து இருப்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
சுமார் 1 1/2 மணி நேரம் வக்கீல் விவாதம் நடந்தது. இரு தரப்பு வாதத்துக்குப் பிறகு நீதிபதிகள் சிங்வி, சவுகான் இருவரும் தீர்ப்பை மதியம் 12.30 மணிக்கு ஒத்தி வைத்தனர். 12.35 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. சி.பி.ஐ வக்கீலின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இருவரும், கனிமொழி, சரத்குமாரின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் முக்கிய சதியாளர்கள் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் ஜாமீனில் விடுவிக்க இயலாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். நீதிபதிகள் மேலும் கூறுகையில்,"குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட பிறகு கனிமொழி, சரத்குமார் இருவரும் சி.பி.ஐ சிறப்புக் கோர்ட்டை ஜாமீன் கோரி அணுகலாம்" என்றனர்.


No comments:
Post a Comment