கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழையினால் சுமார் 24 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பித்த கடும் மழையினால் வீடற்ற நிலையில் கொட்டில்களில் வசிக்கும் குடும்பங்களே இதில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
வயல்கள் மற்றும் தோட்டங்களில் உள்ள பயிர்கள் தொடர்ந்து பெய்த மழையின் காரணத்தினால் அழிவடைந்த நிலையில் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இரு தினங்கள் மழை ஓய்ந்திருந்தமையால் சில விவசாயிகள் வயல்களில் நெல் விதைப்பையும் மேற்கொண்டனர்.
விவசாயிகளால் இவ்வாறு விதைப்புச் செய்யப்பட்ட நெல் நேற்றுப் பெய்த மழையினால் வெள்ளத்தில் அள்ளுண்டு போய் விட்டது.
இதேவேளை, தொடர்ச்சியாகப் பெய்த மழையின் காரணத்தால் கிளிநொச்சி மாவட்டத்தில் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி உள்ளதாகத் தெரியவருகின்றது.
இந்தக் குடும்பங்கள் அனைத்தும் இடம்பெயர்வின் பின்னர் தற்காலிக கொட்டில்களை அமைத்தே மீள்குடியமர்ந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்ந்ததனால் சில இடங்களில் தற்காலிக கொட்டில்களுக்குள்ளேயும் வெள்ளம் புகுந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தில் மீளக்குடியமர்ந்த குடும்பங்களில் சுமார் 30 ஆயிரம் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் தேவை எனவும், இவற்றில் 16 ஆயிரம் வீடுகள் மட்டுமே நிறுவனங்களினால் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளன எனவும் அந்தக் குடும்பங்களில் இதுவரை 6 ஆயிரம் வீடுகளே நிர்மாணிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஏனைய குடும்பங்களுக்கான வீடமைப்புப் பணிகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படாமையால் அந்தக் குடும்பங்கள் தற்போது தற்காலிக கொட்டில்களிலேயே வசித்து வருவதாகவும் கிளிநொச்சி மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவித்தன.
இந்தக் குடும்பங்களுக்கு அரசினால் தற்காலிக கொட்டில்களை அமைப்பதற்கான தறப்பாள்களே வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment