வன்னி மக்களுக்கு சொந்தமான பணத்தையும் சொத்துக்களையும் அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.
இந்த சொத்துக்கள் யாவும் அரச மாளிகையில் வசிக்கும் கே.பி.யிடமே உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பு மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்களது மனைவியர் மற்றும் அவர்களது சகோதரிகளுக்கென ஐக்கியதேசியகட்சியின் ஐக்கிய மகளிர் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில், மத்திய வகுப்பினரது வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக விளங்குகின்ற திட்டங்களை முடக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.
எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் முச்சக்கர வண்டி ஓட்டுனர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜே.ஆர்.ஜயவர்த்தன கீழ் மட்டத்து மக்களுக்கு ஏணியாக அமைந்திருந்தார். ஆனால் மஹிந்த ராஜபக்ச அதற்கு மாறாக நடக்கிறார்.
சொத்துக்களை பறிமுதல் செய்யும் வகையிலான சட்டமூலம் ஒன்ற கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சித்துவருகிறது. சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு பதிலாக அதனை மக்களின் உடமையாக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டால் நன்றாக இருக்கும்.
யுத்தகாலத்தில் வன்னிமக்களிடம் கொள்ளயடிக்கப்பட்ட சொத்துக்களை கே.பி. வைத்துள்ளார். அவற்றை மக்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.
சொத்துக்களை இழந்த மக்கள் இடம்பெயர்ந்து அவலப்படும்போது கே.பி.யோ அரச மாளிகையில் சுகபோகம் அனுபவிக்கிறார்.
எனவே மக்களின் சொத்துக்கள் மக்களிடமே ஒப்படைக்கப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment