மனோபாலா, காற்றுக்கு நாணல் ஆடும் அழகில் இவர் திரையில் நடந்து வரும்போது ரசிகர்களிடம் பீரிட்டுக் கிளம்புகிறது சிரிப்பு.
நகைச்சுவை நடிகராக இன்று ரசிக்கப்படும் இவர் 40 படங்களை இயக்கி பல சூப்பர் ஹிட் படங்களைத் தந்த சீரியஸான படைப்பாளி என்பது இன்று பலருக்கும் தெரியாது.
‘பென்சிலுக்கு பேண்ட் சட்டை போட்ட மாதிரி, காரச்சேவுக்கு கண்ணாடி போட்ட மாதிரி, முத்துன முருங்கைக்காய் மாதிரி’ என்று திரையில் திட்டுவாங்கும்போதெல்லாம் இந்தக் கலைஞனுக்கு உறுத்தலாக இருக்காதா?
“அட… நீங்க வேற, அவங்க திட்டி முடிச்சதும் தியேட்டரில் ஒரு கைதட்டு வருமே அது யாருக்குன்னு நினைச்சீங்க. எனக்குதான்.” அட்டகாசமாக சிரித்தபடி அமர்கிறார் டைரக்டர் மனோபாலா.
பாரதிராஜா சார்கிட்டே 16 படங்களுக்கு உதவி இயக்குநரா வேலை பார்த்தப்பகூட எனக்கு நடிக்கணும்ங்கிற ஆசையில்லை. அவர் தான் ‘புதிய வார்ப்புகள்’ படத்துல சின்ன ரோல் பண்ண வெச்சார்.
டைரக்ஷன்லதான் எனக்கு ஆசை. அவர்கிட்டருந்து வெளியே வந்து ‘ஆகாய கங்கை’ படம் பண்ணினேன். படம் ப்ளாப் ஆகிடுச்சு.
ரெண்டு வருஷம் சும்மா இருந்து ‘பிள்ளை நிலா’ பண்ணினேன், படம் சூப்பர்ஹிட். அப்ப தொடங்கி வரிசையா படங்கள் பண்ணினேன். அதுவும் காமெடி, காதல், ஃபேமிலி, ஆக்ஷன் இப்படி மாறி மாறி 40 படங்கள் பண்ண முடிஞ்சது.
அதற்குக் காரணம் எனக்கு அப்ப நல்ல டீம் அமைந்ததுதான். மனோபாலா, கலைமணி, இளையராஜா இந்தப் பேர்களை பார்த்தாலே ஒரு வியாபாரம் இருக்கும்.
உதவி இயக்குநரா இருந்தப்பவே இளையராஜா பழக்கம் என்பதால் போனதுமே ட்யூன்களை போட்டுத் தந்திடுவார், என பழைய நினைவுகளில் நனைகிறார்.
இன்றைய சினிமா பற்றி?
ஹீரோக்கள் மத்தியில் ஒரு ரேஸ் இப்ப நடந்துகிட்டே இருக்கு. அவங்க ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் பிரம்மாண்டமான ஒரு லுக் வரணும்னு நினைக்கிறாங்க.
இது ஆரோக்கியமான விஷயமான்னு தெரியல. ரஜினி சார்கூட என்கிட்ட, “நான் வருஷத்துக்கு 18 படங்கள் நடிச்சேன். ஆனா இப்ப ஏன் ஒரு படத்தோட நடிகர்கள் நின்னுடுறாங்கனு கேட்டார். இதுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.
அதேபோல இப்ப இருக்குற இளைய இயக்குநர்கள் அவங்க கதையை மட்டுமே அவங்க டைரக்ட் பண்ணணும்னு நினைக்கிறாங்க. வெளியிலிருந்து யார்கிட்டயும் கதை வாங்கிறதில்ல.
நான் இயக்கிய 40 படங்கள்ல ஒரு கதைகூட என்னதில்லை. கலைமணி சாரோ அல்லது வேற யார்கிட்டயோ வாங்கின கதைதான். இயக்குநர் இமயமா இருக்குற பாரதிராஜா சார்கூட ’16 வயதினிலே’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ ரெண்டு படத்துக்குதான் கதை எழுதினார்.
மற்றதெல்லாம் வெளி கதைகள்தான். இப்ப கதையாளர்களும் இல்லை. ஆர்.செல்வராஜ் கதை சொன்னார்னா ரெண்டே வரிதான் இருக்கும்.
அதை பாரதிராஜா அப்படியே டெவலப் பண்ணி படமாக்கினார்னா கவிதையா இருக்கும். அந்த மாதிரி வெரைட்டியான கதைகள் வாங்கி படம் எடுத்தால்தான் சிறந்த படைப்புகள் வரும்.
இன்னொரு விஷயம், இப்ப உதவி இயக்குநர்கள் யாரும் தங்கள் சீன்களை டைரக்டர்கிட்ட சொல்றதே இல்ல. அப்படியே அமுக்கி வெச்சுக்கிட்டு வெளியே போய் படம் பண்றாங்க.
டைரக்டர் மனோபாலாவை மீண்டும் பார்க்க முடியுமா?
கே.எஸ்.ரவிக்குமார் சார் ‘நட்புக்காக’ படத்தில்தான் என்னை முழு நடிகனா மாத்தினார். இதோ 400 படங்கள் நடிச்சு முடிச்சிட்டேன்.
ஆனால், எனக்குள்ள இருக்குற இயக்குநர் என்கிற அந்த மனோபாலா ‘படம் பண்ணு, படம் பண்ணுன்’னு சொல்லிக்கிட்டே இருக்கான். சீக்கிரமே ஒரு படம் பண்ணணும், என்று நமக்கு கைகொடுத்தார் டைரக்டர் மனோபாலா.
No comments:
Post a Comment