தக்ஸின் சினவத்ராவின் மக்கள் செல்வாக்கு தங்கைக்குப் பிரதமர் பதவியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. உலக நாடுகளின் அதியுயர் அரசியல் பதவியைக் கைப்பற்றிய பெண்களை ஆய்வாளர்கள் இரு தலைப் புகளின் கீழ் ஆய்வு செய்கிறார்கள்.
சொந்த முயற்சியால் சுய திறமையை மூலதனமாக்கி முன்னுக்கு வந்து நாட்டின் தலைமைப் பதவியைக் கைப்பற்றியவர்கள் ஒரு வகை. குடும்பப் பின்னணி அல்லது கணவர், தந்தை, சகோதரன், போன்றோரின் மரணம் காரணமாக முன்னுக்குத் தள்ளப்பட்ட பெண்கள் இரண்டாம் ரகம்.
தாய்லாந்துப் பிரதமர் இங்லக் சினவத்ரா இரண்டாம் ரகத்தைச் சேர்ந்தவர். மூத்த சகோதரன் முன்னாள் பிரதமர் நாட்டை விட்டு ஓடி விட்டார். அவருடைய ஆதரவுப் புலம் கைகொடுக்கத் தங்கை பிரதமராகி விட்டார். அண்ணனின் செல்வாக்கு தங்கைக்கு உதவியது எனலாம்.
உலகின் முதலாவது பெண் பிரதமர் சிறிலங்காவின் சிறிமாவோ பண்டாரநாயக்கா கணவர் எஸ் டபிள்யூ ஆர் டி பண்டார நாயக்கா ஒரு புத்த பிக்குவால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட நாள் 25 செப்ரம்பர் 1959. அப்போது எஸ் டபிள்யூ ஆர் டி பண்டார நாயக்கா பிரதமர் பதவி வகித்தார்.
கணவரின் அகால மரணத்தை மூலதனமாக்கி மேடைகளில் கண்ணீர் சிந்தி மனைவி சிறிமாவோ பிரதமர் பதவியைக் கைப்பற்றினார்;. அவர் 1960, 1970, 2000ம் ஆண்டுகளில் இலங்கைப் பிரதமராகப் பதவி வகித்தார். சந்திரிக்கா பண்டார நாயக்கா இவருடைய இரண்டாவது மகள்.
இரு பிரதமர்களின் மகளான இவர் நாட்டின் ஜனாதிபதியானார். இந்தச் சாதனை பிறிதோர் நாட்டிலும் காணப்படவில்லை. சந்திரிக்காவும் தாயைப்போல் கணவர் குமாரதுங்கவை துவக்குச் சூட்டிற்குப் பலி கொடுத்தவர். ஆனால் சந்திரிக்கா பண்டாரநாயக்கா குடும்பப் பெயரைத்தான் கூடுதலாகப் பயன்படுத்தி அரசியல் இலாபமீட்டினார்.
தெற்காசிய அரசியல் தலைவர்களின் மனைவி மக்கள் தங்கள் குடும்பத் தலைவன் அகால மரணம் அடைய வேண்டும் என்று விரும்புவார்களாம். அப்போது தான் தாங்கள் அதே பதவியைக் கைப்பற்ற முடியும் என்பது அவர்களுடைய எதிர்பார்ப்பு.
மேற்கூறிய விமர்சனத்தில் ஓரளவு உண்மை இருக்கிறது. பாக்கிஸ்தானின் சுல்பிக்கார் அலி புட்டோ தூக்கில் இடப்பட்ட பிறகு அவருடைய மகள் பெனாசீர் புட்டோ உயர் பதவியைக் கைப்பற்றினார். பெனாசீர் புட்டோ குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு அவருடைய கணவர் சர்தாரி ஜனாதிபதி பதவியை வென்றார்.
பிலிப்பீன்சின் பெண் சனாதிபதி கோராசோன் அக்கினோ 1986ல் அதியுயர் பதவியைக் கைப்பற்றினார். 1983ம் ஆண்டில் இவருடைய கணவர் பெனிக்னோ அக்கினோ விமான நிலையத்தில் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அது கோராசோனுக்கு கைகொடுத்தது.
இந்தியாவின் வாரிசு அரசியலில் இரண்டாமவரான இந்திரா காந்தி 1966ம் ஆண்டில் இந்தியப் பிரதமரானார். இவர் முதலாவது இந்தியப் பிரதமர் நேருவின் மகள். இந்திரா காந்தி தனது மெய்ப் பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பின் மகன் ராஜிவ் காந்தி பிரதமரானார். ராஜிவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வரலாம் என்று ஆரூடம் கூறப்படுகிறது.
சிறிமாவோ, இந்திரா, கோராசோன் ஆகியோர் திறமைசாலிகள் என்பதை மறுக்க முடியாது. அவர்கள் பதவிக்கு வந்த விதம் தான் விமர்சனத்திற்குரியது. ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பெண் பிரதமர் மாகரேற் தட்சர் 1959ல் பாராளுமன்ற உறுப்பினராகி 1979ல் பிரதமரானார்.
அவர் குடும்பப் பின்னணி, உயர் குடிப்பிறப்பு போன்ற சிறப்புக்கள் அற்றவர். போராடி முன்னுக்கு வந்தவர். 1979 தொடக்கம் 1990 வரை பிரதமர் பதவி வகித்த இவர் தனது நாட்டிற்கு விசேட அந்தஸ்த்தைப் பெற்றுக் கொடுத்தார். ஜேர்மனியின் தலைவி அன்ஜெலா மேர்க்கல் சாதாரண குடும்பத்தில் பிறந்து சுய முயற்சியால் முன்னுக்கு வந்தார். இஸ்ரேலியின் முதலாவது பெண் பிரதமர் கோல்டா மேயர் சுய முயற்சியால் இந்தப் பதவியை கைப்பற்றினார்.
No comments:
Post a Comment