8/2/2011 12:17:56 PM
சென்னை அசோக் நகர் 7வது அவென்யூவை சேர்ந்தவர் பழனியப்பன். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உதவி பொதுமேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், சென்னை புறநகர் கமிஷனர் ராஜேஸ்தாசிடம் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தாம்பரம் இரும்புலியூர் பகுதியை சேர்ந்தவர் டி.கே.ராமச்சந்திரன். இவருக்கு அதே பகுதியில் 32 சென்ட் இருந்தது. இவர், தனது நிலத்தின் பத்திரத்தை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் அடமானம் வைத்து ஒரு துணி நிறுவனத்துக்கு கடனாக ரூ.5 லட்சம் பெற்று தந்தார். ஆனால், அந்த நிறுவனம் பணத்தை திருப்பி செலுத்தவில்லை. பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் பணத்தை செலுத்தாததால் ராமச்சந்திரனுக்கு சொந்தமான நிலத்தை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் பொது ஏலத்தில் விட்டது. அந்த நிலத்தை ரூ.20 லட்சத்துக்கு ஏலத்துக்கு எடுத்து, எனது மகன் சொக்கலிங்கம் பெயரில் 2006ம் ஆண்டு தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தேன். நிலத்தை அடிக்கடி சென்று பார்த்து வந்தேன். கடந்த 2009ம் ஆண்டு நிலத்தை பார்க்க சென்றபோது, எனது நிலத்தில் காம்பவுண்ட் சுவர் கட்டியிருந்தனர். இதுகுறித்து விசாரித்தபோது, ஏலம் விடப்பட்ட நிலத்துக்கு போலி ஆவணம் தயாரித்து, நடிகர் சிங்கமுத்து மூலம் நடிகர் வடிவேலுக்கு விற்றுள்ளனர். இதுகுறித்து விசாரிக்க சென்றபோது என்னை தொலைத்து விடுவதாக மிரட்டனர். அப்போது, சென்னை புறநகர் கமிஷனரிடம் புகார் கொடுத்தேன். எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது நிலத்தை மீட்டுத்தர வேண்டும். நடிகர் வடிவேல் உட்பட 7 பேர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரிக்கும்படி மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ராஜேந்திரனுக்கு புறநகர் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment