தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறியும் நிலைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு தரப்புக்கும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக இன்று 10 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இதன்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் உறுதியான பதில் ஒன்றை வழங்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதுடன், இந்தக் கோரிக்கைக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் தரப்படவேண்டும் என்று நிபந்தனையையும் விதித்துள்ளது.
இல்லையேல் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையை தொடருவதா, இல்லையா என்பது குறித்து சிந்திக்கவேண்டி வரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
10 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதும் அரசாங்கம் இதுவரை, பிரயோசனமான எந்த பதிலையும் வழங்கவில்லை. எனவே தமிழ் மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் பதில் கூறவேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளதாக மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிடும் என்றும் மாவை கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தும் பேச்சுவார்த்தைகளுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு இருக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணா இன்று தெரிவித்துள்ள நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
2ம் இணைப்பு
பேச்சுவார்த்தை காலக்கெடு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கை அரசு, பேச்சுவார்த்தைகளை வெளியுலகுக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக காட்ட முனையும் அதே வேளையில், உண்மையில் இவை, ஒரு வெளித்தோற்றத்தை உருவாக்கும் முயற்சியாகவே இதைத் தாங்கள் பார்ப்பதாக கூட்டமைப்பு கூறியுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தைகளில், உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு, உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படுதல், வடகிழக்கில் செயற்படும் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை களைதல், அரசியல் கைதிகளின் பிரச்சினை ஆகியவை குறித்து பேசிவந்ததாக கூட்டமைப்பு கூறுகிறது.
ஆனால் பத்துச் சுற்றுப் பேச்சுக்களுக்கு பிறகு இந்தப் பிரச்சினைகளில் எந்தவிதமான பெரிய முன்னேற்றமும் காணப்படவில்லை என்று கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கொடுத்த பிரேரணைகள் எதற்கும் அரசிடமிருந்து பல மாதங்களாக எந்தவிதமான பதிலும் வரவில்லை என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே அரசியல் தீர்வுப் பிரச்சினையில், எந்தவிதமான காத்திரமான விவாதமும் நடத்த முடியவில்லை என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
இந்தச் சூழ்நிலையில் பேச்சுவார்த்தை என்கிற “ஏமாற்று வழிமுறையை” தொடர வேண்டிய அவசியம் இருக்கிறதா என்றும் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
சமஷ்டி அமைப்பின் கட்டமைப்பு, மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு, நிதி அதிகாரங்கள் ஆகியவை குறித்து அரசாங்கம் தன்னுடைய நிலைப்பாட்டை இன்னும் இரண்டு வாரத்தில் தெளிவாக்க வேண்டும் என்று கூட்டமைப்பு கூறியுள்ளது.
அப்படி செய்தால்தான் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளை தொடர முடியும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment