8/6/2011 11:33:14 AM
ஜமால் மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஜமால் சையது இப்ராஹிம், ஜே.ராஜா முகமது தயாரிக்கும் படம் 'காசேதான் கடவுளடா'. ஷரண் ஹீரோ. காம்னா, திவ்யா பத்மினி, பாண்டியராஜன், கருணாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சேவிலோ ராஜா. இசை, கருணாஸ். பாடல்கள், விவேகா. திருமலை இயக்குகிறார். இதன் பாடல் வெளியீட்டில் இயக்குனர் சங்க பொருளாளர் எஸ்.பி.ஜனநாதன் பேசியதாவது:
இயக்குனர் சங்க பொருளாளராக பதவியேற்ற பின், பல பிரச்னைகள் குறித்து நடக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன். சினிமா துறை மோசமான நிலையில் இருக்கிறது. அதை காப்பாற்றவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சினிமாவிலுள்ள 24 சங்கங்களை சேர்ந்த பெப்சி அமைப்புக்கு முன்னோடியாக இருந்தது, எம்.பி.சீனிவாஸ் தொடங்கி வைத்த இசைக்கலைஞர்கள் சங்கம். 1,500க் கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால், 40 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது என்கிறார்கள். வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களால், பலருக்கு வேலை கிடைக்கவில்லை. இது வேதனையான விஷயம். இதற்கெல்லாம் தீர்வு காண, சினிமாவையே நேசித்து வாழ்ந்து வரும் நாம் அனைவரும் முன்வர வேண்டும். அதற்கு தனியாக ஒரு ஆய்வுக்குழு அமைக்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசும் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். இவ்வாறு ஜனநாதன் பேசினார். இயக்குனர்கள் சங்க வளர்ச்சி நிதிக்காக, 10 ஆயிரம் ரூபாயை திருமலை வழங்கினார். சேரன், பிரசன்னா, கருணாஸ், விவேகா, ஜி.கிச்சா, பி.எல்.தேனப்பன், ரவீந்திரன், கு.க.செல்வம், வி.என்.சிதம்பரம், ஹீரோ ஷரண் உட்பட பலர் கலந்து கொண்டனர். பாத்திமா பாபு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
No comments:
Post a Comment