சனல் 4 தொலைக்காட்சி அம்பலப்படுத்திய சிறீலங்கா கொலைக்களம் என்ற ஒரு மணி நேர ஒளிநாடா உலகளவில் பாரிய ஊமைக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான செய்திகளை பொதுவாக தமிழகத்தின் பத்திரிகைகளும், இணையங்களும் கூடுதல் முக்கியம் கொடுத்து எழுதுவது வழமை. ஆனால் சனல் 4 வெளியான பின்னர் அனைவரும் அடக்கி வாசிப்பதை காணமுடிகிறது.உண்மை துல்லியமாக வெளிப்படும் நேரம் எதற்காக மௌனம் காக்க வேண்டும் என்ற கேள்வி பல்வேறு உப கேள்விகளை உருவாக்குகிறது. சனல் 4 நிகழ்வு புலிகளுக்கு ஆதரவானது என்று கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் அதில் புலிகள் செய்த குற்றச் செயல்களும் பக்கச்சார்பின்றி எடுத்துரைக்கப்படுகிறது.
மேலும் சரணடைந்த ஒருவரை புலி என்ற தலைப்பில் புறந்தள்ள முடியாது. அத்தகையோரை பாலியல் பலாத்காரம் செய்து, சித்திரவதை செய்து, இறக்கும் போது அவமானம் செய்து, இறந்த பின்னும் அவமானம் செய்து, இது எமது நாடு என்று சிங்களத்தில் கொக்கரிப்பதை பார்த்த பின்னரும் தமிழக ஊடகங்கள் மௌனம் காப்பது ஏன்...? தமிழகத்தின் ஊடகங்களில் சனல் 4 அணு குண்டு போல விழுந்துள்ளது. அவர்கள் காக்கும் உறை நிலை மௌனம் ஆயிரம் அர்த்தங்களை பேசுகிறது.


No comments:
Post a Comment