அண்மைக்காலமாக இலங்கை விடயத்தில் அமெரிக்கா காட்டிவரும் அதிக அக்கறை குறித்து இப்போது பல மட்டங்களிலும் பேச்சு எழுந்துள்ளது. திடீரென அமெரிக்கா இலங்கை விடயத்தில் காட்டும் இந்தக் கடும்போக்கு சர்வதேச மட்டத்திலும் இலங்கைக்குப் பெரும் தலையிடியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவின் சொல் கேட்டு இப்போது ஐரோப்பிய நாடுகளும் இலங்கையுடன் கடும் போக்காக நடந்துகொள்கின்றமை பெரும் சிக்கலை உண்டுபண்ணியிருக்கிறது.
அமெரிக்காவினதும் ஐரோப்பிய நாடுகளினதும் இந்தக் கடும் போக்குக்கு காரணம் இல்லாமல் இல்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலும் சரி இலங்கையின் மனித உரிமை விடயத்திலும் சரி இந்த நாடுகளால் முன்வைக்கப்படும் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் இலங்கை மிகச் சாதாரணமாக எடுத்து உதாசீனம் செய்து கிண்டலடித்து வருகின்றமை இந்த நாடுகளின் மீதான அழுத்தம் இலங்கை மீது அதிகரிப்பதற்கு முக்கிய காரணம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதல் அவரது அமைச்சர்கள் மற்றும் அரச பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அமெரிக்காவையும் ஐரோப்பிய நாடுகளையும் பற்றி வெளியிடும் கருத்துக்கள், முன்வைக்கும் விமர்சனங்கள் ஆகியனவும் இந்தக் கடும்போக்குக்கு மற்றொரு காரணம் எனலாம். குறிப்பாக தீர்வு விடயத்தில் மேற்குலக நாடுகள் வழங்கும் ஆலோசனைகளை முன்மொழிவுகளை இலங்கை அரசு அண்மைக் காலமாகத் தட்டிக் கழித்து வருகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷகூட அண்மைக்காலத் தமது உரைகளில், "இனப் பிரச்சினைக்கான தீர்வை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முடியாது. உள்நாட்டிலேயே தீர்வு எட்டப்பட வேண்டும். அதை எப்படி எட்டுவது என்பது எமக்குத் தெரியும். பயங்கரவாதத்தைத் தோற்கடித்த எமக்கு தீர்வை எட்டுவது பற்றிக் கற்பிக்க யாரும் முற்படக் கூடாது.
அதற்கு நாங்கள் செவி சாய்க்கமாட்டோம்'' என்று இறுமாப்புடன் கூறிவருகிறார். இதே கருத்துக்களையே அமைச்சர்களும் அடிக்கடி வெளியிடுகிறார்கள். அரசின் இந்த விடாப்பிடி மேற்குலக நாடுகளின் தலைமைகளை பெரும் சீற்றத்துக்கும் விசனத்துக்கும் உள்ளாக்கியிருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவுக்கு இலங்கை அரசின் இந்த தட்டிக் கழிப்பு அடியோடு பிடிக்கவில்லை.
அதனால்தான் அது இப்போது தன் வேலையை காட்டத் தொடங்கியிருக்கிறது.
அமெரிக்காவைப் பொறுத்த மட்டில் அதன் அரசியல் சித்தாந்தமும் இதுவென்றே சொல்லலாம். அதாவது தனது சொல்லைக் கேட்டு அதன்படி நடந்துகொள்ளாத நாடுகள் மீது பொருளாதாரத் தடை மற்றும் அரசியல் ரீதியான பலமான அழுத்தங்கள் ஆகியவற்றை பிரயோகித்து அந்த நாடுகளைத் தன் வழிக்குக் கொண்டு வரும் பொறிமுறையில் அமெரிக்கா கை தேர்ந்தது.
அதற்கும் மேலாக முரண்டுபிடிக்கும் நாடுகளை தனது படைகளைக் கொண்டு அடக்குவதற்கான அதிகாரப் பலமும் அதனிடம் உள்ளது. தனது இந்த நடவடிக்கைக்கு ஏனைய மேற்குலக நாடுகளையும் இணங்க வைக்கும் தந்திரமும் அமெரிக்காவுக்கு நன்கு தெரியும். இதனால் அமெரிக்க எதை எடுத்தாலும் அதற்கு பெரும்பாலான மேற்குலக நாடுகள் கை உயர்த்திப் பச்சைக் கொடி காட்டிவிடும்.
அந்த இறுமாப்பினால் உலக நாடுகளின் விடயங்களில் ஒரு சர்வதேசப் பொலிஸ்காரனைப் போல அமெரிக்கா நடந்து கொள்கிறது. ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா ஆகிய நாடுகள் உட்பட பல நாடுகளில் அமெரிக்கா தனது கைவண்ணத்தைக் காட்டி வெற்றியும் பெற்றிருக்கிறது. இந்த நிலையில் அதன் கவனம் இப்போது இலங்கையின் பக்கம் திரும்பியிருக்கிறது.
போர் முடிவடைந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட போதும் இலங்கையில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படவில்லை. தீர்வு எட்டப்படுவதற்கான பேச்சுக்கூட இலங்கை அரசு உருப்படியாக முன்னெடுக்கவில்லை. அத்துடன் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்ற மீறல்களுக்கு உரிய வகையில் பொறுப்புக் கூறுவதிலிருந்தும் இலங்கை தொடர்ந்து தவறிவருகிறது.
அத்துடன் இலங்கை அரசால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் விடயத்திலும் இலங்கை எந்தவித முன்னேற்றத்தையும் காட்டவில்லை. இந்த விடயங்களை உடனடியாக மேற்கொண்டு அவற்றில் முன்னேற்றத்தைக் காட்டுமாறு அமெரிக்கா இலங்கையைத் தொடர்ந்து வற்புறுத்திக் கேட்டு வந்தது.
அத்துடன் ஐரோப்பிய நாடுகளும் இந்த விடயங்களை உடன் நடைமுறைக்குக் கொண்டுவருமாறு இலங்கையிடம் வலியுறுத்தின. ஆயினும் இவையெல்லாம் இலங்கை அரசுக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு போல்தான் இருந்தன. இந்தக் கோரிக்கைகளுக்கு எந்தவிதப் பிரதிபலிப்புக்களையும் வெளியிடாமல் வழமையைப் போன்றே அவற்றை எதிர்த்துக் கருத்து வெளியிடுவதில் இலங்கை ஆர்வம் காட்டி வந்தது. இலங்கையின் இந்த நடவடிக்கைகளே அமெரிக்கா கோபம் அடைவதற்கு முக்கிய காரணம்.
இதனால் தனது வழமையான பாணி மூலம் இலங்கைக்குப் பாடம் கற்பிக்கக் கங்கணம் கட்டியது அமெரிக்கா. அதற்கான சரியான தருணம் பார்த்து காத்திருந்தது. அந்தக் காத்திருப்புக்குக் கிடைத்தது நல்ல சந்தர்ப்பம். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வு கடந்த பெப்ரவரியில் ஜெனிவாவில் நடைபெற்றது. இந்த அமர்வில் இலங்கை மீதான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்து அதனை வெற்றிகரமாக நிறைவேற்றி நல்ல பாடம் புகட்டியது.
இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் இலங்கை அரசுக்குப் பெரும் நெருக்குதலையும் சர்வதேசத்தின் அழுத்தத்தையும் உண்டுபண்ணியது. இது இலங்கை மீதான நன்மதிப்பையும் சர்வதேச அரங்கில் இழக்கச் செய்ததுடன் மேலும் பல பாதிப்புக்களையும் இலங்கைக்கு ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் இந்தத் தீர்மானத்துக்கு இந்தியாவும் ஆதரவு வழங்கியமை இலங்கைக்கு மிகப் பெரும் ஏமாற்றமாகவே அமைந்தது. ஜெனிவாத் தீர்மானத்துடன் ஆரம்பித்த இலங்கை மீதான அமெரிக்காவின் மோதல் இப்போது பல வடிவங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்டனைச் சந்திப்பதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழு வாஷிங்டன் சென்றிருந்தது.
அந்தக் குழு அங்கு செல்வதற்கு முன்னர் குழுவின் பயணம் பற்றி அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் விக்ரோறியா நூலன்ட் கருத்து வெளியிட்டிருந்தார். வாஷிங்டன் வரும் இலங்கைக் குழுவிடம் உருப்படியான செயற்றிட்டம் ஒன்றையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதற்கான ஆயத்தங்களுடன்தான் அவர்கள் இங்கு வரவேண்டும். அந்தச் செயற்றிட்டத்தை நாங்கள் எழுத்து வடிவில் கோருகிறோம். இலங்கை விடயத்தில் இனி எந்த விட்டுக் கொடுப்புக்கும் இடமில்லை என்று விக்ரோறியா நூலன்ட் கூறியிருந்தார்.
ஆயினும் அங்கு சென்ற இலங்கைக் குழுவின் நடவடிக்கைகள் அமெரிக்காவுக்குத் திருப்தியை அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் பீரிஸை ஹலாரி கிளின்டன் சந்தித்துப் பேசிய பின்னர் அந்தச் சந்திப்புக் குறித்து ஊடகவியலாளர்களிடம் பேசிய விக்ரோறியா நூலன்ட், இந்தச் சந்திப்புப் பயனுள்ள வகையில் அமைந்தது. இலங்கையிடம் சில விடயங்களைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டி அதனை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கோரியிருக்கிறோம். அத்துடன் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் செயற்றிட்டம் ஒன்றையும் ஹிலாரியிடம் பீரிஸ் கையளித்துள்ளார் என்று கூறினார்.
ஆயினும் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பீரிஸ், அமெரிக்காவிடம் எந்தவொரு ஆவணத்தையும் நாம் எழுத்துருவில் சமர்ப்பிக்கவில்லை. செயற்றிட்டம் குறித்து அவர்களுக்கு வாய் மூலம் தெளிவாக விளக்கியுள்ளோம் என்றார்.
இருவரும் இப்படி ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை வெளியிட்டமையால் அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களும் பெரும் குழப்பம் அடைந்தனர். இலங்கைக் குழுவின் இந்தப் பயணம் எதிர்பார்த்த அளவு வெற்றியளிக்கவில்லை என அமெரிக்க ராஜாங்க வட்டாரத் திணைக்களங்களும் தெரிவித்திருந்தன.
இவ்வாறு அமெரிக்காவின் இலங்கை மீதான தொடர் அழுத்தங்கள் அதிகரித்துவரும் நிலையில் கடந்த வியாழக்கிழமை வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்டன் வெளியிட்ட சர்வதேச மனித உரிமை நிலவரம் குறித்த அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் அறிக்கை இலங்கை அரசை மேலும் சிக்கலில் மாட்டிவிட்டிருக்கிறது. இந்த அறிக்கையில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை நீண்ட பட்டியலிட்டிருக்கிறது அமெரிக்கா.
இலங்கையில் தமிழர்கள் பெரும்பாலும் வசிக்கும் பகுதிகளில் அரச படைகளினாலும் அரச ஆதரவு துணை ஆயுதக் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகளே பிரதானமான மனித உரிமைப் பிரச்சினையாக உள்ளன என்று அமெரிக்க அந்த அறிக்கை குற்றம் சுமத்தியிருக்கிறது. அத்துடன் இலங்கை அரசியலில் ஜனாதிபதியின் குடும்பமே ஆதிக்கம் செலுத்துகிறது.
நீதித்துறைக்குள் நிறைவேற்று அதிகாரத் தலையீடுகள் உள்ளன. அத்துடன் இன்னொரு முக்கியமான மனித உரிமைப் பிரச்சினை காணாமல் போனோர் விவகாரம். முன்னைய ஆண்டுகளில் ஆயிரக் கணக்கானவர்கள் காணாமல் போயுள்ள போதும் அதற்குப் பொறுப்புக் கூறப்படவில்லை. படையினர் தடுப்பில் உள்ளவர்களை சித்திரவதை செய்து துன்புறுத்துகின்றனர். சிறைச்சாலைகளில் கைதிகளின் நிலை மோசமாக உள்ளது. பொதுமக்கள் தன்னிச்சையாகக் கைசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அரசை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகிறார்கள். வடக்குக் கிழக்கில் இராணுவம் மற்றும் பொலிஸ் சோதனைச் சாவடிகள் அதிகம் உள்ளன. உயர் பாதுகாப்பு வலயங்களும் உள்ளன. பொதுமக்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளும் உள்ளன. அரச ஆதரவு துணை ஆயுதக் குழுக்களின் உள்ள அடையாளம் தெரியாத நபர்களே கொலைகள், தாக்குதல்கள், பொதுமக்கள் மீதான துன்புறுத்தல்களுக்கு பொறுப்பாக இருந்துள்ளனர். இவர்களுக்கும் அரசு படையினருக்கும் நெருக்கிய தொடர்பு உள்ளது என்று இலங்கை அரசின் அராஜகங்களை அடுக்கிக் கொண்டு போகிறது அமெரிக்கா. இவ்வாறு இலங்கையுடன் இப்போது நேரடியாக முஷ்டியை முறுக்கிக் கொண்டு மோதத் தயாராகி இருக்கிறது அமெரிக்க அரசு.
அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டால் திணறிப் போயிருக்கிறது இலங்கை அரச தலைமை. அமெரிக்காவின் அழுத்தத்திலிருந்து தப்புவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சிறைவைக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்திருந்தார். அதற்கு அமெரிக்கா தனது வரவேற்பைத் தெரிவிக்கும் என்றும் அவர் அதிகம் எதிர்பார்த்திருந்தார். எனினும் இந்த விடயத்தில் எந்தவித பிரதிபலிப்பையும் அமெரிக்கா வெளியிடவில்லை.
மௌனமாக இருந்துவிட்டது. இது இலங்கைக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இதனால் அமெரிக்காவின் அழுத்தங்கள் மேலும் தொடரப்போகிறது என்ற அச்சம் இலங்கைக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனை ஜனாதிபதி மஹிந்த எப்படிச் சமாளிக்கப் போகிறார்?
No comments:
Post a Comment