
மன்னார் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய கலாநிதி இராயப்பு ஜோசப் அடிகளாருக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் தலையீடு செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தன, வத்திக்கானில் உள்ள பாப்பரசர் பெனடிக்ற் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
'பேரினவாத, அதிகார மனப்போக்கைக் கொண்ட சிறிலங்கா அரசாங்க அமைச்சர்களால்' விடுக்கப்பட்டுள்ள விமர்சனங்களாலும், சிறிலங்கா அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகின்ற அல்லது அதற்கு ஆதரவு வழங்கும் ஊடகங்களாலும் பல்வேறு விமர்சனங்களுக்கு மன்னார் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் உட்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தன தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக சதித்திட்டங்களை மேற்கொண்டதாகவும், முஸ்லீம் - தமிழ் உறவைக் குழப்பும் நோக்கில் ஆயர் செயற்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றுக்கும் அப்பால், 16 மாதங்களுக்கு முன்னர் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு முன் சாட்சியமளித்த விடயம் தொடர்பாகவும், ஆயரால் சிறிலங்கா அதிபருக்கும், ஐ.நா மனித உரிமைகள் சபைக்கும் எழுதப்பட்ட கடிதம் தொடர்பாகவும் கடந்த மாதத்தில் சிறிலங்கா புலனாய்வு அதிகாரிகளால் ஆயர் கைதுசெய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினரால் பாப்பரசருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஆயர் ஒருபோதும் தனிநாடு கோரவில்லை அல்லது ஆயுதப் போராட்டத்தை மீளவும் புதுப்பிக்கவில்லை. தமிழ் மக்களின் கௌரவத்துக்கும், நீதிக்கும் சிறிலங்காவில் மீளிணக்கப்பாடு ஒன்று உருவாக்கப்படுவதற்கும் தனிநாட்டுக் கோரிக்கை மற்றும் ஆயுதப் போராட்டம் என்பன தீர்வாக இருக்கும் என்பதை ஆயர் மறுத்து வந்துள்ளார்" எனவும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் எந்தவொரு அச்சுறுத்தலோ, தலையீடோ அல்லது பொய்யான குற்றச்சாட்டுக்களோ அன்றி தனது பணியைத் தொடர்வதற்கு ஏதுவான சூழலை உறுதிப்படுத்துவதில் பாப்பரசர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும் இறுதியாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தன கேட்டுக் கொண்டுள்ளார்.


No comments:
Post a Comment