உண்மையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர், 2009 ஏப்ரல் 19ம் நாள் இரட்டைவாய்க்கால் பகுதியை இலங்கைப் படையினர் கைப்பற்றியதுடன் முடிந்து விட்டது என இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009 ஏப்ரல் 19ம் நாளே முடிந்து விட்டதாக கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் தெரிவித்தார்.“போர்முறை பற்றி எதுவும் தெரியாதவர்கள் தான் போரைப் பற்றி முட்டாள்தனமாக பேசினார்கள். உண்மையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர், 2009 ஏப்ரல் 19ம் நாள் இரட்டைவாய்க்கால் பகுதியைக் சிறிலங்கா படையினர் கைப்பற்றியதுடன் முடிந்து விட்டது.
அதற்குப் பின்னர் மே 19ம் நாள் வரை கேணல்கள் மற்றும் லெப். கேணல்கள் தலைமையில் நடந்தது தேடுதல் நடவடிக்கைகள் தான். போரின் இறுதி வாரத்தில் சீனாவுக்கு நான் மேற்கொண்ட அதிகாரபூர்வ பயணத்தை தவறு என்று கூறுவோருக்கு, விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் அதற்கு முன்னரே தோற்கடிக்கப்பட்டு விட்டது என்பது தெரியாது.
நான் நாட்டை விட்டுச் செல்ல முன்னர், விடுதலைப் புலிகளின் போராளிகள் தப்பி ஓடிக் கொண்டிருந்தனர். இறுதிக்கட்டம் கேணல்கள் மற்றும் லெப்.கேணல்களின் கையில் தான் இருந்தது. போர் நடந்து கொண்டிருந்ததால், சீனாவுக்கான பயணத்தை நான் ஐந்து முறை பிற்போட்டிருந்தேன்.
எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பின்னர் தான் நான் சீனாவுக்குப் பயணமானேன். 2009 மே 11 தொடக்கம் 17வரை நான் சீனாவில் இருந்தபோது கூட, கொழும்பிலுள்ள எனது அதிகாரிகளுடன ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் தொடர்பு கொண்டு முன்னேற்றங்கள் குறித்து அறிந்து கொண்டிருந்தேன்.
அந்தக் கட்டத்தில், போர் வலயத்தில் சிக்கியிருந்த 85 ஆயிரம் மக்களை எப்படிப் பாதுகாப்பாக வெளியேற்றலாம் என்பதே எனது கரிசனையாக இருந்தது. முப்பதாண்டுகளாக இழுபட்டு வந்த ஆயுதமோதலை நான் இரண்டு ஆண்டுகள் 9 மாதங்களில் முடித்து வைத்தேன்.
பெரும்பாலான மக்கள், பிரபாகரனும் அவரது 100 வரையிலான போராளிகளும் ஓடிய இறுதிநாட்களையே உறுதியான வெற்றியாக பேசுகின்றனர். நந்திக்கடல் பகுதியில் இறுதிச்சமர் மே 17ம் நாள் பிற்பகல் 2 மணியுடன் முடிந்து விட்டது. அன்று காலை 10 மணியளவில் 30 விடுதலைப் புலிகள் வரை கொல்லப்பட்டனர்.
19ம் நாள் அவர்களின் உடல்களும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலுடன் நந்திக்கடல் பகுதியில் மீட்கப்பட்டன“ என்று சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment