என் வீட்டில் 26 ஆண்டுகளாக யானை தந்தங்களை வைத்திருக்கிறேன். அவற்றை நான் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கவில்லை. அவை எனக்கு சொந்தமானவை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன, என்றார் மோகன்லால்.
மலையாள நடிகர் மோகன்லால் வீட்டிலிருந்து யானை தந்தங்களை வருமான வரி அதிகாரிகள் சமீபத்தில் கைப்பற்றினர். கொச்சி தேவரையில் உள்ள மோகன்லால் வீட்டின் பூஜை அறையில் இருந்து இந்த தந்தங்கள் எடுக்கப்பட்டன.
இதையடுத்து மோகன்லால் மீது சட்டவிரோதமாக யானை தந்தங்களை பதுக்கி வைத்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்துவதற்கு தனி போலீஸ்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அங்குள்ள போலீஸ் கமிஷனர் பிஜுஅலெக்சாண்டர் கூறுகையில், "'நடிகர் மோகன்லால் வீட்டில் கைப்பற்றப்பட்ட யானை தந்தம் உண்மையானதாக இருந்தால் அதை யாரிடம் இருந்து வாங்கினார், கடத்தப்பட்டு அந்த தந்தம் மோகன்லாலுக்கு விற்பனை செய்யப்பட்டதா என்றெல்லாம் அவரிடம் விசாரிக்கப்படும்", என்றார்.
இதுகுறித்து மோகன்லாலிடம் கேட்டபோது, "வருமான வரி அதிகாரிகள் பறிமுதல் செய்த யானை தந்தம் என்னிடம் 26 வருடங்களாக இருக்கிறது. அது எனக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆவணங்களை வைத்து இருக்கிறேன். ஆனால் அவற்றை நான் பதுக்கி வைத்து இருந்ததாக அவதூறு செய்திகள் பரப்புகின்றனர்.
யானை தந்தத்தை சட்டவிரோதமாகவோ நேர்மையற்ற முறையிலோ நான் பதுக்கி வைக்கவில்லை. யானையை கொன்று அந்த தந்தங்களை நான் எடுத்து வந்ததாகவா நினைக்கிறீர்கள்.... உண்மையை கண்டறியாமல் என் மீது அவதூறு செய்திகள் பரப்பலாமா?", என்றார்.
No comments:
Post a Comment