ராம்சரண் - உபாசனா திருமணத்தையொட்டி, தெலுங்கு ரசிகர்களுக்கு பெரும் விருந்து தரப்பட்டது.
சிரஞ்சீவியும், அவர் மகன் ராம்சரணும் இந்த விருந்துக்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம்சரணுக்கும் அப்பல்லோ குழும மருத்துவமனைகளின் தலைவர் பிரதாப் ரெட்டி பேத்தி உபாசனாவுக்கும் ஹைதராபாத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது.
மாலையில் அங்குள்ள நோவா நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பு நடந்தது.
திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகள் மிக விமரிசையாக நடந்தன. தெலுங்கு சினிமா உலகமே வியந்து பார்க்கும் அளவு செலவழிக்கப்பட்டது.
50 வகை அறுசுவை உணவுகள், பல ஏக்கரில் அமைக்கப்பட்ட மணமேடை, சினிமா ஆர்ட் கலைஞர்களை வைத்து போடப்பட்ட திருமண பந்தல், மணமகன் மணமகளின் ராஜகம்பீர உடைகள் என ஒரு அரச கல்யாணமாக ஜொலித்தது.
திருமணத்துக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் அழைக்கப்படவில்லை. இதனால் அவர்கள் வருத்தமடைய கூடாது என்பதற்காக இன்று பிரத்யேக விருந்து நிகழ்ச்சிக்கு சிரஞ்சீவியும், ராம்சரணும் ஏற்பாடு செய்தனர்.
ராம்சரண் - உபாசனா திருமணம் நடந்த மொய்னாபாத் பண்ணை வீட்டில் இந்த விருந்து நடந்தது. இதில் ரசிகர்கள் 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர். வெளியூர்களில் இருந்தெல்லாம் ரசிகர்கள் பஸ், வேன்களில் வந்திருந்தனர். திருமண பந்தல் அலங்காரங்கள் கலைக்கப்படாமல் இருந்ததால், ரசிகர்கள் அவற்றைப் பார்த்து ரசித்தனர்.
No comments:
Post a Comment