"தென்றல்' தொடரில் ஆட்டோ டிரைவர் கல்யாணியாக வந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சுசைனி. மைனாவில் வில்லியாக நடித்து அதிரவைத்தார். சீரியலிலும் சினிமாவிலும் நடிக்கும் ஆசை எப்படி வந்தது என்பது பற்றி அவரிடமே கேட்டு தெரிந்து கொள்வோம்.
நான் வளர்ந்தது, படித்ததெல்லாம் பெங்களுரில். நான் நடிப்பதற்கு எங்கள் வீட்டினரை சம்மதிக்க வைத்தது ரொம்ப பெரிய கதை. டிப்ளமோ சாப்ட்வேர் படிச்சேன். இறுதி ஆண்டு படிக்கும் போதுதான் சென்னைக்கு வந்தேன். நான் சென்னைக்கு படிக்க வந்த போது ஜெயாடிவியில் இருந்து எங்க கல்லூரியில் நிகழ்ச்சி தொகுப்பாளினி தேர்வு செய்தார்கள். அதில் தேர்வு ஆனேன்.
அம்மா, அண்ணன், நான் மட்டும்தான். அப்பா இறந்துவிட்டார். அம்மா கல்லூரி பேராசிரியையாக இருந்தவங்க. இப்போ வேலையை விட்டுவிட்டு வீட்டில்தான் இருக்கிறார். அண்ணன் ஸ்கிரிப்ட் ரைட்டர்.
படிப்பில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிற குடும்பம். அதனால அம்மா கண்டிப்பாக டி.வியில தோன்ற ஒத்துக்க மாட்டாங்க, என்ன செய்வது என்று யோசித்தேன். ஆனால் என்னோட தோழிகள் எல்லாம் கிடைத்த வாய்ப்பை நழுவவிட வேண்டாம் என்று சொன்னார்கள். அதனால அம்மாவுக்குத் தெரியாம ஜெயாடி.வி.யில காலைல வரும் "தகவல்.காம்' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தேன்.
ஒருநாள் அம்மா டி.வியில் என்னைப் பார்த்துவிட்டு ரொம்ப சத்தம் போட்டார்கள். பிறகு அம்மாவிடம் பேசி ஒரு வழியா சம்மதம் வாங்கிவிட்டேன். அம்மா எப்பவுமே ரொம்ப பிராக்டிக்கலா யோசிப்பவங்க.
எப்பவுமே ரொம்ப என்கரேஜ் செய்வாங்க. அதனால என்னோட ஆசையைப் புரிந்து கொண்டு சரின்னு சொல்லிட்டாங்க. ஆனா தோற்றுப் போய் மட்டும் வரக் கூடாது என்று.
பிரம்மா சார் முலமாகத்தான் முதன் முதலில் தொலைக்காட்சிக்கு வந்தேன். விஜய் டிவியில் வி.ஜே.வாக நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி கொண்டிருந்தேன். அப்போ "தென்றல்' தொடரில் என் கேரக்டருக்கு நடிக்க ஒப்பந்தமாகி இருந்தவங்க வராததால், நான் அந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பதாக என்னைக் கேட்டாங்க.
முதலில் தயக்கமாகத்தான் இருந்தது. என்னால அந்த கேரக்டர் செய்ய முடியுமா என்று நினைத்தேன். இதற்காக நிஜமாகவே ஆட்டோ ஓட்ட கற்றுக் கொண்டேன். ஆட்டோ ஓட்டுவது அவ்வளவு ஈசியான விஷயமல்ல. அவங்க பாடி லாங்வேஜ், அந்தக் குரல் எல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு ஹோம் ஒர்க் செய்ய வேண்டியிருந்தது. இருந்தாலும் ஆட்டோ ஓட்டுவது ரொம்ப பிடிச்சிருக்கு. தொடர் இல்லைன்னா கூட கைவசம் ஒரு தொழில் இருக்குங்க (சிரிக்கிறார்).
மைனா திரைப்படத்தில் வில்லத்தனமான கேரக்டர்கூட யோசிக்காமல் செய்துவிட்டேன். ஆனால் ஆட்டோகாரியாக மேக்கப்பே இல்லாம நடிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. வெளியில் எங்காவது சென்றால் ரசிகர் தெரிந்து கொண்டு ஆட்டோ வருமா என்று கேட்கிறார்கள். அதுவே எனக்கு கிடைத்த வெற்றியாக நினைக்கிறேன்.
தென்றலின் வெற்றியைத் தொடர்ந்து வேட்டை, தியாகம், மூன்று முகம், உயிரின் நிறம் ஊதா, போன்ற பல்வேறு தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
பெரிய திரையில் "மைனா", படத்தில் வில்லி கதாபாத்திரம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அதுபோன்ற பேசப்படும் கதாபாத்திரங்கள் கிடைத்தால் சினிமாவிலும் நடிப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறி சிரிக்கிறார் ஆட்டோ ராணி கல்யாணி.
No comments:
Post a Comment