காதல் கதைகளை எத்தனை முறை படித்தாலும் சலிக்காது அதுபோலத்தான் காதலை மையமாக கொண்ட சினிமாவோ, சீரியலோ எத்தனை முறை பார்த்தாலும் புதிது போலவே இருக்கும்.
இதுபோல ஒரு காதல் கதைதான் பாலிமர் டிவியில் '777' தொடரில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. எப்.எம் ரேடியோவில் ஜாக்கியாக பணியாற்றும் செந்தில் ஒரு பெண் நேயரின் விருப்பத்தை நிறைவேற்ற போடும் பாடலே அவரின் காதலுக்கு அடித்தளமாகிறது.
இந்த தொடர் செயற்கைத்தனமில்லாத அக்மார்க் காதல் கதை என்பதை நிச்சயமாக சொல்லலாம். காதலியுடன் தொலைபேசியில் பேசுவதாகட்டும், காதலை சொல்ல தனக்கு பிடித்தமான கண்ணதாசன் பாடலை ஒளிபரப்புவதாகட்டும் எதிலுமே ஒரு செயற்கைத்தனமில்லை. நாமே அந்த கதாபாத்திரத்தோடு ஒன்றிப்போவதுபோல கதை நகர்கிறது.
இந்த தொடரில் எம்.எம் ஜாக்கியாக ரேடியோ மிர்ச்சி செந்தில் நடித்துள்ளார். இதற்காக அவர் ஒன்றும் புதிதாக மெனக்கெடத் தேவையில்லை. தினசரி அவருடைய நிகழ்ச்சிகளையே படம்பிடித்துக்கொள்ளலாம். செம ஹாட் மச்சி என செந்தில் கூறுவதே தனி ஸ்டைல்தான். அவரின் காதலியாக ஸ்ரீவித்யா நடித்துள்ளார். ஆதித்யா சேனலின் காமெடி தொகுப்பாளர் ஆதவனும் இதில் நடித்துள்ளார்.
ஸ்ரீவித்யாவில் உதடு பேசுவதை விட கண்கள் அதிகமாக பேசும். இது காதல் கதை என்பதால் உதடுகள் பேசும் வசனங்களை விட கண்கள் பேசும் வசனங்கள்தான் அதிகம் இருக்கின்றன. அடுத்தவர் நிகழ்ச்சிக்குள் புகுந்து காதலிக்கு பிடித்தமான பாடலை ஒளிபரப்புவதில் ஆர்வம் காட்டும் செந்திலுக்கு சிஇஓ விடம் டோஸ் கிடைத்ததா? இல்லை தப்பித்தாரா என்ற சஸ்பென்ஸ்சோடு நிற்கிறது கதை. காதலை கவிதையாய் சொல்லும் மனோபாலா இன்னமும் தான் சிறந்த இயக்குநர்தான் என்பதை நிரூபித்துள்ளார்.
No comments:
Post a Comment